பலருக்கு இது ஒரு தொழிலா மாற போகுது!! மத்திய அரசு கொடுத்த க்ரீன் சிக்னல்!
பைக் டாக்ஸி (Bike Taxi) சேவைகள் இனி மெல்ல மெல்ல அழிந்து போகும் என பேச்சுகள் எழுந்துவந்த நிலையில், பைக் டாக்ஸி தடை செய்யப்பட்ட இந்தியாவின் இரு முக்கிய மாநிலங்களில் மீண்டும் அனுமதி வழங்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. எந்த இரு மாநிலங்கள் அவை? பைக் டாக்ஸி சேவை ஏன் ஆபத்தானதாக கருதப்படுகிறது? வாருங்கள் அதனை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
பைக் டாக்ஸி, நம் அன்றாட போக்குவரத்தில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சில வருடங்களுக்கு முன் கணிக்கப்பட்டது. இணையமும் அதற்கேற்ப விரிவடைந்து வருவதால், பைக் டாக்ஸி சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்க ஆரம்பித்தது. ஆனால், அதன்பின் ஏற்பட்ட பைக் டாக்ஸி தொடர்புடைய புகார்களும், குற்றச்சாட்டுகளும் பைக் டாக்ஸி சேவையை சுருக்கின.

குறிப்பாக, தேசிய தலைநகர் டெல்லி உள்பட இந்தியாவின் முக்கிய மாநகரங்களில் பைக் டாக்ஸிக்கு முற்றிலுமாக தடைவிதிக்கப்பட்டது. நம் சென்னையில் பைக் டாக்ஸி சேவைகள் இப்போதும் உள்ளன என்றாலும், 2019 மற்றும் 2020ஆம் ஆண்டு சமயத்தில் இருந்த அளவிற்கு பெரிய நெட்வொர்க் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவில் பைக் டாக்ஸி சேவையை ராபிடோ உள்பட சில நிறுவனங்கள் மட்டுமே வழங்கி வருகின்றன.
இந்த நிலையில், பைக் டாக்ஸி தடை செய்யப்பட்ட டெல்லி மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் பைக் டாக்ஸி சேவைக்கு மீண்டும் அனுமதி வழங்குவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. ஏனெனில், மத்திய சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சகம் (MoRTH) இந்தியாவில் பைக் டாக்ஸி சேவையை சட்டபூர்வமானதாக மாற்றுவதற்கான தனது ஆலோசனையை வழங்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்திய மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 2(7)-இன் கீழ், மோட்டார்சைக்கிள்கள் ஒப்பந்த வண்டிகளின் வரையறைக்குள் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, மோட்டார்சைக்கிள்களையும் பொது போக்குவரத்துக்கான வாகனமாக பயன்படுத்த முடியும் என்பது இதன் அர்த்தமாகும்.
இந்த அறிக்கையை அடுத்து, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் பைக் டாக்ஸிக்கு அனுமதி வழங்கப்படும் என MoRTH நம்பிக்கை உடன் உள்ளது. பைக் டாக்ஸி சேவையை வழங்குவதற்கு கார்ப்பிரேட் நிறுவனங்களின் விண்ணப்பங்களை ஏற்கும் வேலைகளையும் மாநில அரசுகள் துவங்கும் என MoRTH நம்பிக்கை கொண்டுள்ளது.
மேலும், பைக் டாக்ஸி தொழிலில் இரு சக்கர வாகனத்துடன் ஈடுப்படுபவர்கள் சந்திக்கும் டிரைவிங் லைசன்ஸ் தொடர்பான பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வை கொண்டுவர மத்திய அரசு தயாராகி வருகிறது. டெல்லி மற்றும் மஹாரஷ்டிராவில் பைக் டாக்ஸிக்கு தடை இருந்தாலும், மற்ற முக்கிய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் கோவாவில் பைக் டாக்ஸி சேவைகள் வழங்கப்படுகின்றன.
இந்தியாவில் பைக் டாக்ஸி சேவையில் ராபிடோ சுமார் 60% பங்கை கொண்டுள்ளது. அதாவது, இந்தியாவில் பாதிக்கு மேல் பைக் டாக்ஸி சேவையை வழங்குவது ராபிடோ தான். தினந்தோறும் 10 இலட்சத்திற்கும் அதிகமான பைக் டாக்ஸி ரைடுகளை ராபிடோ ஏற்கிறது. மத்திய அரசாங்கத்திடம் இருந்து இவ்வாறான ஒரு அறிக்கை வெளிவந்ததை ராபிடோ நிறுவனத்தின் துணை நிறுவனர் வரவேற்றுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராபிடோவை போல், உபேர் மோட்டோ என வேறு சில நிறுவனங்களும் பைக் டாக்ஸி சேவையை தற்சமயம் நாட்டின் சில மாநிலங்களில் வழங்கி வருகின்றன. ஆனால், நாடு முழுவதும் பைக் டாக்ஸிக்கு தடை விதிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருந்ததால், புதிய நிறுவனங்கள் புதியதாக இந்த தொழிலில் ஈடுப்பட தயக்கம் காட்டின. ஆனால், தற்போது மத்திய அரசிடம் இருந்து இவ்வாறான ஒரு அறிக்கை வெளிவந்துள்ளதால், இனி புது புது ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பைக் டாக்ஸி தொழிலில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








