ஆட்டோ, கேப்களுக்கு ஆப்பு, வெறும் ரூ15ல் பயணிக்க பைக் டாக்ஸிக்கு அனுமதி!
பெருநகரங்களில் கார், ஆட்டோ என டாக்ஸி முறையில் பயணிப்பவர்கள் தற்போது பைக் டாக்ஸியை விரும்புகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பைக் டாக்ஸி முறையை தற்போது ஒழுங்குபடுத்தி வெறும் ரூ15க்கு மக்கள் பயணிக்கலாம் என்ற நிலைமையை உருவாக்கியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மும்பையில் இந்த மாத இறுதிக்குள் பைக் டாக்ஸி செயல்பாட்டிற்கு வருகிறது. இதற்கான வழி முறைகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. கடுமையான போக்குவரத்து விதிமுறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதன்படி குறைந்த விலையில் மக்களால் பயணிக்க முடியும். இதனால் மாசு வெகுவாக குறைகிறது. இது குறித்து அம்மாநில அரசு அறிவித்துள்ள உத்தரவு குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இதன்படி மாநில அரசு பைக் டாக்ஸிக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற விதிமுறையை கொண்டு வந்துள்ளது. இதன்படி குறைந்தபட்சம் 1.5 கி.மீ பயணிக்க வெறும் ரூ15 மட்டும் கட்டணமாக பெற வேண்டும். கூடுதலாக ஒவ்வொரு கி.மீக்கு 10.27 கட்டணமாக வசூலிக்க வேண்டும். இதனால் மக்களுக்கு குறைந்த விலையில் பயணிக்க வசதியாக இருக்கும். ஆட்டோ டாக்ஸியை விட குறைவான விலையில் மக்களால் பயணிக்க முடியும்.
இந்த டாக்ஸி சேவைக்காக எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.இந்த சேவையை ஓலா, உபேர், ராபிடோஆகிய நிறுவனங்கள் மட்டுமே நடத்த அனுமதி உள்ளது. முதலில் இந்த நிறுவனங்களுக்கு தற்காலிக லைசென்ஸ் வழங்கப்படும். அது வழங்கப்பட்ட 30 நாட்களுக்குள் அவர்கள் நிரந்தர லைசென்ஸ் வாங்க வேண்டும்.

இந்த சேவையை நடத்த சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி இந்த சேவையை நடத்தும் நிறுவனம் குறைந்தபட்சம் 50 வாகனங்களை சேவைக்காக பயன்படுத்த வேண்டும். இதற்காக பணியாற்றும் ரைடர்கள் 20-50 வயதிற்குட்படவராக மட்டுமே இருக்க வேண்டும். இவர்களிடம் கமர்ஷியல் டிரைவிங் லைசென்்ஸ் இருக்க வேண்டும். இதற்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கவேண்டும். இந்த வாகனங்கள் அதிகபட்சம் 60 கி.மீ வேகத்தில் தான் பயணிக்க வேண்டும்.
இது மும்பையில் மட்டுமே இயங்க தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற நகரங்களுக்கு இது மெல்ல மெல்ல விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சேவையால் மும்பை மக்கள் குறைந்த செலவில் பயணம் செய்ய முடியும். அதே நேரம் மும்பையில் போக்குவரத்து நெரிசல் குறைய வழிவகுக்கும்.

இந்த சேவைகளுக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதால் மாசு வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படகிறது. இதே நேரம் இதில் பெண்கள் பயணிக்க பெண்கள் ரைடர்களை பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்களுக்கான வேலை வாய்ப்பு வருமானம் அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.
இன்று இளைஞர்கள் பலர் படித்துக்கொண்டிருக்கும் காலத்திலேயே சம்பாதிக் விரும்புகின்றனர். அவர்களுக்கு இந்த பைக் டாக்ஸி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவில் பைக் டாக்ஸிகளுக்கு அனுமதியில்லாமல் இருந்த நிலையில் சட்டவிரோதமாக இந்த சேவை நடத்தப்பட்டது. இதை தற்போது அரச ஒழுங்குப்படுத்த முயற்சித்துள்ளது நிச்சயம் வரவேற்க தக்கது தான்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா போன்ற அதிக ஜனத்தொகை மற்றும் குறிப்பிட்ட நகரங்களை குறிவைத்து வரும் வளர்ச்சியால் குறிப்பிட்ட பகுதிகளில் அதிகரிக்கும் ஜனத்தொகை கொண்ட நாடுகளுக்கு சுலபமான போக்குவரத்து வசதி தேவை, பைக் டாக்ஸி அதற்கு நல்ல தீர்வு தான் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் செய்தது போல தமிழ்நாடும் சென்னையில் பைக்டாக்ஸியை முறைப்படுத்தினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









