நூதன ஆசைக்காக பைக் திருடிய கொள்ளையன்... போலீசார் எப்படி பொறி வைத்து பிடித்தனர் என்பதுதான் ஹைலைட்!!
நூதன ஆசைக்காக பைக் திருடிய கொள்ளையனை போலீசார் பொறி வைத்து பிடித்தனர். முள்ளை முள்ளால் எடுத்த போலீசாரின் சாமர்த்திய நடவடிக்கைக்கு ஒரு பெரிய சபாஷ் போடலாம்!!

கார், பைக் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கவும், விற்கவும் நமது நாட்டில் ஏராளமான ஆன்லைன் பிளாட்பார்ம்கள் இயங்கி வருகின்றன. இதில், ஓஎல்எக்ஸ் (OLX) முக்கியமானது. ஓஎல்எக்ஸ் தளத்தில் விளம்பரம் செய்தால், எந்தவொரு பொருளையும் எளிதாக விற்பனை செய்து விட முடியும். ஆனால் ஓஎல்எக்ஸ் போன்ற தளங்களை எச்சரிக்கையுடன் கையாள்வது அவசியம்.

ஏனெனில் ஓஎல்எக்ஸ் தளத்தில் நீங்கள் விற்க முயலும் பொருளை நூதன முறையில் திருடி செல்ல இங்கு ஒரு பெரும் கூட்டமே காத்து கொண்டிருக்கிறது. இந்த கூட்டத்தில் முகமது சலீம் என்பவரும் ஒருவர். பெங்களூர் நகரில் உள்ள கோவிந்தாபுரா எனும் பகுதியில் முகமது சலீம் வசித்து வருகிறார். முகமது சலீமுக்கு 2 மனைவிகள் உள்ளனர். ஆனால் இருவருமே முகமது சலீமை விட்டு பிரிந்து சென்று விட்டனர்.

எனவே முகமது சலீம் தனியாகதான் வசித்து வந்தார். முகமது சலீம் முன்பு கேப் டிரைவாக வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தார். ஆனால் நாளடைவில் வேலையில் இருந்து நின்று விட்டார். இதன்பின் ஓஎல்எக்ஸ் தளத்தில் பொருட்களை விற்பனை செய்ய முயல்பவர்களை குறி வைத்து நூதன முறையில் கொள்ளையடிக்க தொடங்கினார்.

ஆனால் முகமது சலீமுக்கு என ஒரு தொழில் தர்மம் இருந்தது!! ஆம், இவர் பைக்குகளை மட்டுமே திருடுவார். மோட்டார்சைக்கிள்கள் என்றால், முகமது சலீமுக்கு கொள்ளை பிரியம். எனவே பைக்குகளை மட்டும் குறி வைத்து கொள்ளையடித்து வந்தார் முகமது சலீம். பைக்குகளை விற்பனை செய்வதற்காக ஓஎல்எக்ஸ் தளத்தில் பலர் விளம்பரம் செய்கின்றனர். அவர்களை சலீம் அணுகுவார்.

அதன் பின் பைக்கை வாங்குவதை போலவே பேசுவார். பைக்கின் உரிமையாளருக்கு நம்பிக்கை வந்தவுடன், தனியாக டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டும் என கூறுவார். பைக்கின் உரிமையாளர்களும் நம்பி கொடுப்பார்கள். அவ்வளவுதான். முகமது சலீம் திரும்பி வரவே மாட்டார். இதுபோல் பலரிடம் இவர் பைக்குகளை கொள்ளையடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில், ஹைலைட்டான ஒரு விஷயம் அடங்கியுள்ளது. பொதுவாக மோட்டார்சைக்கிள்களை திருடுபவர்கள் அதனை கள்ள மார்க்கெட்டில் உடனடியாக விற்பனை செய்து விடுவார்கள். கிடைத்த வரை லாபம் என உடனடியாக கை மாற்றி விடுவதே அவர்களின் வாடிக்கை. அல்லது பைக்கை அக்கு அக்காக பிரித்து, பாகங்களை விற்பனை செய்து விடுவார்கள்.

ஆனால் முகமது சலீம் அப்படிப்பட்டவர் அல்ல. இவர்தான் மோட்டார்சைக்கிள்கள் மீது காதல் கொண்டவர் ஆயிற்றே! எனவே தான் திருடும் பைக்குகளை ஒருபோதும் விற்பனை செய்ய மாட்டார். மாறாக அதனை பயன்படுத்தி, பைக் ரேஸ்களில் கலந்து கொள்வார். அதேபோல் பைக் ஸ்டண்ட்களையும் செய்வார். இந்த சூழலில், முகமது சலீமின் அட்டகாசம் தொடர்பாக போலீசாருக்கு புகார் சென்றது.

சனத் குமார் பாட் என்பவர்தான் முகமது சலீம் தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தார். சனத் குமார் பாட்டின் 2014 மாடல் யமஹா எஃப்இஸட்-எஸ் பைக்கை முகமது சலீம் தனது பாணியில் திருடி சென்றார். அதாவது தனது பைக்கை விற்பனை செய்யவுள்ளதாக சனத் குமார் பாட், ஓஎல்எக்ஸில் விளம்பரம் செய்திருந்தார். எனவே சனத் குமார் பாட்டை, பைக் கொள்ளையன் முகமது சலீம் அணுகினார்.

ஆனால் சனத் குமார் பாட்டிடம், தனது பெயர் முகமது சலீம் என அவர் கூறவில்லை. அதற்கு பதிலாக தனது பெயர் ராகுல் என முகமது சலீம் அறிமுகம் செய்து கொண்டார். இதன்பின் 35 ஆயிரம் ரூபாய்க்கு பைக்கை வாங்கி கொள்வதாக முகமது சலீம் கூறினார். எனினும் அதற்கு முன்பு பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டும் என முகமது சலீம் கூறியுள்ளார்.

அத்துடன் பைக்கை வாங்குவதற்கு முன்பாக தன் குடும்பத்தினரிடம் காட்டி ஒப்புதல் பெற வேண்டும் எனவும் முகமது சலீம் நாடகமாடியுள்ளார். ஆனால் இதற்கு சனத் குமார் பாட் ஒப்புக்கொள்ளவில்லை. எங்கேயாக இருந்தாலும் நானும் உடன் வருவேன் என சனத் குமார் பாட் கூறியுள்ளார். எனவே அருகில் உள்ள அப்பார்ட்மெண்ட் ஒன்றுக்கு சனத் குமார் பாட்டை, முகமது சலீம் கூட்டி சென்றார்.

இதுதான் நான் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்ட் என சனத் குமார் பாட்டிடம் முகமது சலீம் சொன்னதாக தெரிகிறது. முன்னதாக அந்த அப்பார்ட்மெண்ட் வரை முகமது சலீம்தான் பைக்கை ஓட்டி சென்றார். சனத் குமார் பாட் பின் இருக்கையில் அமர்ந்திருந்தார். இதனிடையே அப்பார்மெண்ட் வந்ததும், சனத் குமார் பாட்டை பைக்கில் இருந்து இறங்குமாறு முகமது சலீம் கூறியுள்ளார்.

பைக்கை பார்க்கிங் செய்து விட்டு வந்து விடுகிறேன் என அவரிடம் முகமது சலீம் கூறியுள்ளார். வீடு வரை வந்து விட்டதால், இதனை சனத் குமார் பாட் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அவ்வளவுதான். பார்க்கிங் செய்ய சென்ற முகமது சலீம் மீண்டும் திரும்பி வரவேயில்லை. அதன்பின்புதான் முகமது சலீம் ஏமாற்றி விட்டதை சனத் குமார் பாட் புரிந்து கொண்டார்.

எனவே இது தொடர்பாக பெங்களூர் நகரில் உள்ள ஹெப்பல் போலீஸ் ஸ்டேஷனில் சனத் குமார் பாட் உடனே புகார் அளித்தார். இதன் பின்பு ஹெப்பல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப முகமது சலீமை பிடிக்க ஒரு புதிய திட்டத்தை போலீசார் தீட்டினர்.

இதன்படி முகமது சலீமை பிடிக்க வேண்டும் என்பதற்காக, அதே ஓஎல்எக்ஸ் தளத்தில் போலீசார் விளம்பரம் ஒன்றை செய்தனர். இதில், பஜாஜ் பல்சர் பைக் ஒன்று இருப்பதாகவும், இதன் விலை 30 ஆயிரம் ரூபாய் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த விளம்பரத்திற்கு முகமது சலீம் 'ரெஸ்பான்ஸ்' செய்யவே இல்லை. முகமது சலீம் அணுகுவார் என போலீசார் மூன்று மாதங்களுக்கும் மேலாக காத்திருந்தனர்.

எனினும் முகமது சலீம் அவர்களை தொடர்பு கொள்ளவே இல்லை. ஒரு வழியாக கடந்த ஜூலை 19ம் தேதி அந்த விளம்பரத்தை பார்த்து விட்டு முகமது சலீம் போலீசாரை அணுகினார். அதாவது இது உண்மையான விளம்பரம் என நினைத்து, போலீசார் விரித்த வலையில் முகமது சலீம் சிக்கி கொண்டார். இதன்பின் இரு தரப்பும் குறிப்பிட்ட இடமொன்றில் சந்திப்பது என முடிவானது.

இதன்பேரில் முகமது சலீம் அங்கு வர, ஸ்பாட்டிலேயே வைத்து அவரை கைது செய்து அதிரடி காட்டியுள்ளனர் போலீசார். தங்கள் பைக், கார் உள்ளிட்ட வாகனங்களை விற்பனை செய்ய முயல்பவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு நல்ல பாடம். முன்பின் தெரியாதவர்களுக்கு எக்காரணத்தை முன்னிட்டும், டெஸ்ட் டிரைவ் செய்வதற்கு உங்கள் வாகனத்தை தனியாக தர வேண்டாம். டெஸ்ட் டிரைவின் போது நீங்களும் உடன் செல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








