போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டி வந்த மர்ம நபர் சிக்கினார்! இவர் செஞ்ச தில்லாலங்கடி என்னனு தெரியுமா
போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டி வந்த மர்ம நபர் சிக்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் பைக் திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் பைக் திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன. பைக் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

ஆனாலும் புதுப்புது டெக்னிக்குகளை பயன்படுத்தி கொள்ளையர்கள் பைக்குகளை திருடி செல்கின்றனர். இந்த வகையில் சென்னையில் தொடர்ச்சியாக பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை காவல் துறையினர் தற்போது கையும், களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து ஒட்டுமொத்தமாக 13 பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆவடி சுற்று வட்டார பகுதிகளில் வீடு மற்றும் கடைகள் முன்பாக நிறுத்தப்படும் பைக்குகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து செல்வதாக காவல் துறையினருக்கு தொடர்ச்சியாக புகார்கள் சென்றன. இதனால் கொள்ளையர்களை பிடிப்பதற்காக காவல் துறையினர் தனிப்படை அமைத்து, தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், ஆவடி அருகே உள்ள கருணாகரச்சேரி பகுதியில், தனிப்படை போலீசார் நேற்று (ஜூன் 14ம் தேதி) வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த ஒருவரை போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், காவல் துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. அத்துடன் அவர் ஓட்டி வந்த பைக்கிற்கு எந்த ஆவணமும் இல்லை.

பைக்கில் வந்த நபர் தன்னை பத்திரிக்கையாளர் என போலீசாரிடம் கூறினார். இதற்காக அடையாள அட்டை ஒன்றையும் காட்டினார். ஆனால் அது போலியானது என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். எனவே அவரை பட்டாபிராம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் விக்டர் என்கிற நரேஷ் என்பது தெரியவந்தது.

38 வயதாகும் நரேஷ் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். திருவள்ளூர் அருகே உள்ள புல்லரம்பாக்கம் கிராமம்தான் நரேஷின் சொந்த ஊர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்டாபிராம் நவஜீவன் நகர் முதல் தெருவில் மனைவி, குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். பைக்குகளை திருடி கைவரிசை காட்டிய கொள்ளையன் இவர்தான் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

திருவள்ளூர், திருநின்றவூர், பட்டாபிராம், திருமுல்லைவாயல், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில், மொத்தம் 13 பைக்குகளை நரேஷ் திருடியுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். அத்துடன் அந்த 13 பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது பட்டாபிராம் போலீசார் நரேஷை அதிரடியாக கைது செய்துள்ளனர். இதுகுறித்து தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது.

வீடாக இருந்தாலும் அல்லது வெளியிடமாக இருந்தாலும் உங்கள் பைக்கை பாதுகாப்பான இடத்தில் பார்க்கிங் செய்யுங்கள். பாதுகாப்பற்ற இடங்களில் நிறுத்தப்படும் பைக்குகள்தான் அதிகம் திருடப்படுகின்றன. மேலும் நீங்கள் எங்கே செல்வதாக இருந்தாலும் பைக்கில் இருந்து சாவியை மறக்காமல் எடுத்து சென்று விடுங்கள். நீங்கள் சாவியை பைக்கில் விட்டு சென்றால், கொள்ளையர்களின் பணி எளிதாகி விடும்.

ஒரு சிலர் ஞாபக மறதியில் சாவியை பைக்கிலேயே விட்டு சென்று விடுகின்றனர். இன்னும் சிலரோ கொஞ்ச நேரம்தானே என்ற அலட்சியத்தில், பைக்கிலேயே சாவியை விட்டு செல்கின்றனர். மோட்டார்சைக்கிளை திருட வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்களுக்கு கூட, சாவி பைக்கில் இருப்பதை பார்த்தால், கொள்ளையடிக்கும் எண்ணம் ஏற்படலாம்.

இதனால் கொள்ளையர்களின் வேலையை எளிதாக்காமல், சாவியை மறக்காமல் எடுத்து செல்லுங்கள். வெளி இடங்கில் உங்கள் பைக்கை நிறுத்துவதாக இருந்தால், எஸ்யூவி ரக கார்கள் போன்ற பெரிய வாகனங்களுக்கு பின்னால் மறைத்து நிறுத்தலாம். இதுவும் திருட்டில் இருந்து உங்கள் மோட்டார்சைக்கிளை பாதுகாக்க உதவி செய்யும்.

உங்கள் வீட்டில் பைக்கை நிறுத்தும் இடத்தில், சிசிடிவி கேமராவை இன்ஸ்டால் செய்வதும் சிறந்தது. பைக் கொள்ளையடிக்கப்பட்டால், திருடர்களை கண்டுபிடித்து பைக்கை மீட்க சிசிடிவி கேமரா உதவும். மேலும் டிராக்கிங் டிவைஸ்களையும் பைக்கில் இன்ஸ்டால் செய்யலாம். பைக் திருடப்பட்டால், அதனை டிராக் செய்வதற்கு இந்த டிவைஸ்கள் உறுதுணையாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








