டூவீலரில் கன்னாபின்னானு வந்த நபர்! காப்பாற்ற முயன்ற லாரி டிரைவருக்கு நேர்ந்த கதி! பாவம்... நல்ல மனுஷன்!
கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் வாகனங்களை ஓட்டுபவர்களால் இந்தியாவில் ஏராளமான சாலை விபத்துக்கள் (Road Accidents) நடைபெற்று வருகின்றன. இப்படிப்பட்ட நபர்களால், அவர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுவதில்லை. கூடவே அவர்களுடன் சாலையை பயன்படுத்தும் மற்றவர்களுக்கும் மிக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டுள்ளன. இதை அவர்கள் பொருட்படுத்துவதே கிடையாது.
இந்த சூழலில் மிகவும் கவனக்குறைவாக இரு சக்கர வாகனத்தை ஓட்டிய நபரால் ஏற்பட்ட சாலை விபத்தின் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சுற்றுப்புறத்தை உற்று நோக்காமலும், மற்ற வாகன ஓட்டிகளுக்கு சிக்னல் கொடுக்காமலும் அவர் திடீரென 'லேன்' மாறியதால், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தின் வீடியோ தற்போது யூடியூப் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. சாலையின் இடது பக்கத்தில் இருந்து இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் திடீரென வலது பக்கத்திற்கு வருவதை, இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், அவர் சுற்றுப்புறத்தை கவனிக்கவில்லை. அத்துடன் மற்ற வாகன ஓட்டிகளுக்கு சிக்னலும் கொடுக்கவில்லை.
அப்போது அவருக்கு பின்னால் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. ஆனால் நல்ல வேளையாக அந்த லாரியின் டிரைவர் விழிப்புடன் இருந்தார். இரு சக்கர வாகன ஓட்டி திடீரென குறுக்கே வருவதை பார்த்ததும், லாரியின் டிரைவர் 'சடன் பிரேக்' பிடித்தார். இரு சக்கர வாகன ஓட்டியை காப்பாற்றும் நோக்கத்திலேயே அவர் இந்த முயற்சியை செய்தார்.

ஆனால் 'சடன் பிரேக்' பிடித்த காரணத்தால், நிலை தடுமாறிய லாரி, சென்டர் மீடியனில் மோதி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இரு சக்கர வாகன ஓட்டி காயங்கள் எதுவும் இன்றி தப்பித்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவரை காப்பாற்ற முயன்ற லாரி டிரைவருக்கு, காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு சக்கர வாகன ஓட்டியின் அலட்சியம்தான், இந்த விபத்திற்கு முழுக்க முழுக்க காரணமாக அமைந்துள்ளது. போதாக்குறைக்கு அவர் ஹெல்மெட் அணிந்ததை போலவும் தெரியவில்லை. ஒருவேளை லாரியின் ஓட்டுனர் சரியான நேரத்தில் பிரேக் பிடிக்காமல் போயிருந்தால், இரு சக்கர வாகன ஓட்டி உடலில் மிக கடுமையான காயங்களை சந்தித்திருக்க கூடும்.
வாகன ஓட்டிகள் சாலைக்கு வந்து விட்டால் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க வேண்டுமென்றால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் முறையாக பின்பற்ற வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றினால் மட்டுமே, சாலை விபத்துக்களை குறைக்க முடியும். இதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. எனவே போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீதான நடவடிக்கைகள் பாரபட்மின்றி கடுமையாக்கப்பட வேண்டும். அத்துடன் மோசமான நிலையில் உள்ள சாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் மாற்று கருத்து இல்லை.


Click it and Unblock the Notifications








