பைக்கை நிறுத்தாமல் சென்றதால் லத்தியால் தாக்கிய போலீஸ்.. பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்.. அதிர்ச்சி தகவல்
பைக்கை நிறுத்தாமல் சென்றதாக போலீஸார் லத்தியால் தாக்கியதில், மதுரையைச் சேர்ந்த இளைஞர் பரிதாபமாக பலியாகியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

வாகன சோதனையின்போது, பைக்கை நிறுத்தாமல் சென்றதாக கூறி போலீஸார் தாக்கியதில், மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். மதுரை ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர், விவேகானந்தகுமார். 35 வயது நிரம்பிய இவருக்கு, திருமணமாகி இரண்டு வயதில் குழந்தை உள்ளது. இவரைதான் போலீஸார் தாக்கியுள்ளனர்.

விவேகானந்தகுமார், மதுரை சிம்மக்கல் பகுதியில் டயர் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவர் கடையை தினமும் இரவு 10 மணிக்கு மேல் அடைத்துவிட்டு வீடு திரும்பம் பழக்கத்தை கொண்டவர். அவ்வாறு, கடந்த சனிக்கிழமை அன்று இரவு 10 மணிக்கு மேலாக கடையை அடைத்த அவர், பணியாளர் சரவணனுடன் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, அண்ணாமலை தியேட்டர் வைகை பாலத்தின் அருகே திலகர் திடல் காவல்நிலைய போலீஸார், வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனையறியாத, விவேகானந்தகுமார், பைக்கில் வேகமாக வந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் போலீஸார், மடக்கியதால் அவர்களால் உடனடியாக பைக் நிறுத்த முடியமால் தள்ளிச் சென்றுள்ளனர்.

அந்த நேரத்தில், இருவரும் பைக்கை நிறுத்தாமல் தப்பிச் செல்வதாக எண்ணிய போலீஸார், எதிர்புறமாக நின்று, பைக்கை ஓட்டி விவேகானந்தகுமாரின் மார்பு பகுதியில், பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், நிலைதடுமாறிய பைக் தாருமாறாக சென்று சாலையில் மோதியுள்ளது.

இதில், விவேகானந்தகுமாரின் தலை, உடல் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதன், அவரின் தலை மற்றும் காது பகுதியில் இருந்த அதிகமாக ரத்தம் வெளியேற ஆரம்பித்துள்ளது. இதனால் அவர் மயக்கநிலையில் இருந்துள்ளார். அதேசமயம், பின்னால் அமர்ந்திருந்த சரவணக்குமார், அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் தப்பியுள்ளார்.

அப்போது, மயங்கி நிலையில் இருந்த விவேகானந்தகுமாரை, போலீஸார் காப்பாற்றாமல் நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், காப்பாற்றும் முயற்சியை செய்யாமல், ஆம்புலன்ஸிற்காக காத்திருந்துள்ளனர். அதேசமயம், ஆம்புலன்ஸ் வருவதற்கும் நீண்ட நேரமாகியுள்ளது.

விபத்தில் மயங்கிய நிலையில் இருந்த விவேகானந்தகுமார், அதிக ரத்தம் வெளியேறியதால், அதே மயக்கநிலையிலேயே இருந்துள்ளார். பின்னர், அங்கு வந்த காலதாமதாக வந்த ஆம்புலன்ஸ்மூலம், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று மதியம் பரிதாபமாக பலியாகினார்.

இதனால், ஆத்திரமடைந்த அவரின் உறவினர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். சம்பவம் அறிந்து வந்த போலீஸார், அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, போராட்டக்காரர்களை கலைத்தனர். அதேசமயம், இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார், வழக்கு பதிவு செய்ததில் முறைகேடு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விவேகானந்தர் ஓட்டி வந்த பைக் தானாக தடுமாறி விபத்துக்குள்ளானதாக, முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. போலீஸார், சக போலீஸாரைக் காப்பாற்றும் நோக்கில் இந்த அடாவடி செயலில் ஈடுபட்டிருப்பதாக, விவேகானந்தகுமாரின் தந்தை தெரிவித்துள்ளார்.

அதேசமயம், போலீஸார் இவ்வாறு அடாவடி தனத்தில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும், இதேபோன்ற சம்பவத்தை கடந்த வருடம் அரங்கேற்றியிருந்தனர். திருச்சி திருவெறும்பூரில்தான் அந்த சம்பவம் நடைபெற்றிருந்தது. இந்த சம்பவத்தில் மூன்று மாத கர்ப்பிணி பெண், பரிதாபமாக உயிரிழந்தார்.

ராஜா என்பவர், அவரது மூன்று மாத மனைவியுடன் பைக்கில் சென்றுக் கொண்டிருந்தபோது, பின் தொடர்ந்து சென்ற காவலர் காமராஜ் என்பவர், காலை உதைத்து தள்ளியதில் இந்த விபத்து நேர்ந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வாகன தணிக்கையில் போலீஸாருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டது.

ஆனால், அவையனைத்தையும் துச்சமாக எடுத்துக்கொண்டதைப் போன்று மீண்டும் ஒரு அத்துமீறல் செயலில் தமிழக போலீஸார் செய்துள்ளனர். இதனால், தமிழக மக்கள் மனதில் அச்சம் ஏற்பட்டுள்ளது. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய போலீஸார்களே, அரக்க குணம் படைத்தவர்களாக செயல்படுவது மக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








