ஆம்புலன்ஸில் உயிருக்கு போராடிய நபர்- வழிவிடாமல் சென்ற இளைஞர்: இதை பார்த்தால் நீங்கள் கோவமடைவது உறுதி
கேரள மாநிலத்தில் ஆம்புலன்ஸுக்கு வழிவிடமால் சென்ற இளைஞரை அம்மாநில போலீஸார் கைது செய்து, வாகனத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆம்புலன்ஸ் மற்றும் இதர அவசர வாகனங்களின் வழித்தடத்தை மறிப்பது என்பது தண்டனைக்குரிய குற்றச் செயல் ஆகும். இது உலகம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கக் கூடிய ஒன்று, இந்தியா மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. அதேபோல், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள் சாலையில் வரும்போது, அவற்றிற்கு முன்னுரிமைக் கொடுத்து பாதையை விட்டு விலகுவதே சாலை விதியாகும்.

இந்நிலையில், கேரள மாநிலம், ஆலப்புழாவைச் சேர்ந்த ஓர் இளைஞரை, ஆம்புலன்ஸுக்கு வழிவிடமால் இடைமறித்துச் சென்றதாகக் கூறி போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கயம்குலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதர்ஷ், 24 வயதான இவர் கடந்த வாரத்தில் காயம்குலத்தில் இருந்து எர்ணாகுளம் வரை ராயல் என்பீல்டு பைக்கில் சென்றுள்ளார். அப்போது, அதே சாலையில் நோயாளி ஒருவருடன் ஆம்புலன்ஸும் சென்றுக்கொண்டிருந்தது. அவசரம் காரணமாக அதிவேகமாகச் சென்றுக் கொண்டிருந்த ஆம்புலன்ஸுக்கு, சாலையில் சென்றுக்கொண்டிருந்த மற்ற அனைத்து வாகனங்களும் ஒதுங்கி வழியை விட்டுச் சென்றன.

ஆனால், ஆம்புலன்ஸுக்கு வழி விடமால் நீண்ட நேரமாக இடையூறு செய்தவாறு ஆதர்ஷ் சென்றுள்ளார். பல முறை ஹார்ன் அடித்தும், சைரனை அடித்தும் அவர் ஒதுங்கமால் நீண்ட நேரம் இவ்வாறே பயணித்துள்ளார். இதனால், அதிருப்தி அடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், தனது ஸ்மார்ட் போன் மூலம் ஆதர்ஷின் முறையற்ற நடவடிக்கையை பதிவு செய்துள்ளார். மேலும், அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அவசரமாக செல்லும் ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் ஆதர்ஷ் பயணிப்பதைச் சுட்டிக்காட்டி பதிவிடப்பட்ட அந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது. ஆதர்ஷின், இழிவான இந்த செயலுக்கு பலரை எரிச்சலடையச் செய்துள்ளது. இந்த வீடியோவைக் கண்ட பலரும் தங்களது எதிர்ப்பையும், கண்டனங்களையும் அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, இந்த வீடியோவை அனைவரும் பகிர்ந்து வர, அது கேரள மாநிலம் வாகனத்துறையினரின் பார்வைக்கும் சென்றுள்ளது. இதையடுத்து, அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, ராயல் என்பீல்டு பைக்கின் பதிவெண்ணைக் கொண்டு இளைஞரின் முகவரிக் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அந்த இளைஞரைக் கைது செய்த போலீஸார், அவருக்கு 6 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகை விதித்தனர். மேலும், அவரிடம் தீவிர விசாணைச் செய்து வருகின்றனர்.

ஆதர்ஷ், குடிபோதையில் இதனைச் செய்திருக்கலாம் என போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும், ஆம்புலன்ஸில் வருபவர் உயிருக்கு போராடி வரும் நிலையில், ஆதர்ஷின் இந்த செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது.

பெரும்பாலான ராயல் என்பீல்டு பைக்கை வைத்திருப்பவர்கள், அவர்களின் மனதில் விமானத்தை இயக்குவதாக நினைத்துக்கொண்டு சாலையில் செல்கின்றனர். அவ்வாறு நினைத்துக்கொண்டு ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் சென்ற இளைஞர் தான் தற்போது அதற்கான தண்டனையை அனுபவிக்க நேர்ந்துள்ளது.

ஆம்புலன்ஸில் வருபவர் நமக்கு நெருங்கிய சொந்தமாக இருந்தால், நாம் இதுபோன்ற செயலில் ஈடுபடுவோமா? மாட்டோம். ஏனென்றால், நம்முடைய அன்புக்குரியவர்களின் இழப்பை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாது. அதேபோல் தான் ஆம்புலன்ஸில் செல்லும் ஒவ்வொருவரும் ஏதே ஒரு நபருக்கு உலகமாக இருக்கலாம். ஆகையால் ஆம்புலன்ஸ் வரும்போது அதற்கு வழிவிட்டு உதவுவது நமது அனைவரின் கடமையாகும்.

ஆம்புலன்ஸ் வாகனம் வந்தால், முறையாக வழிவிட முடியாமல் மற்ற வாகன ஓட்டுநர்கள் திணறுகின்றனர். இன்னும் சிலரோ ஆம்புலன்ஸ் பின்னாலேயே வேகமாக சென்று விடலாம் என்று எண்ணி ஓட்டிச் செல்கின்றனர். இது தவறு.

ஆம்புலன்ஸ் நமது பின்னால் வரும்போது இடது பக்கமாகச் சென்று வலப்புறத்தில் வழிவிட வேண்டும். அதேபோன்று, ஆம்புலன்ஸ் உங்கள் எதிர்புறமாக (தவறான பாதையில்) வரும்போதும் நீங்கள் உங்களது இடப்பக்கமாகச் சென்று அதற்கு வழி விடவேண்டும். இவ்வாறு ஆம்புலன்ஸ் செல்லும்போது நாம் வழிக்கொடுத்து உதவி செய்தாலே போதும், வேறு எதுவும் நாம் செய்யாமல் இருப்பது நல்லது.


Click it and Unblock the Notifications








