மயிரிழையில் உயிர் தப்பிய பைக் ஓட்டுனர்- லாரி வந்த வேகத்திற்கு மோதி இருந்தால்... நினைத்து கூட பார்க்க முடியல...
பைக் ஓட்டுனரின் கவனக்குறைவால் இரு லாரிகள் ஒன்றோடு ஒன்று மோதி கொண்ட கோர சம்பவம் தெலுங்கானாவில் நடந்துள்ளது. நெஞ்சை பதப்பதைக்க வைக்கும் இந்த விபத்தினை பற்றி இனி செய்தியில் பார்ப்போம்.

லாரி, பேருந்து விபத்துகள் பெரும்பாலும் அவற்றின் பாதையில் வேறு எதாவது வாகனமோ அல்லது ஆட்களோ அல்லது விலங்கோ குறுக்கிடும்போது தான் நிகழ்கின்றன என்று புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.

அதாவது ஓட்டுனர் போதையில் இல்லாமல், சாலையில் மட்டும் கவனம் செலுத்தி இருந்தால் வாகனம் அதி வேகத்தில் சென்றால் கூட விபத்துகள் ஏற்படுவதில்லையாம். சாலையில் திடீரென குறுக்கிடும் பொருட்களே கனரகம் மட்டுமின்றி எந்தவொரு வாகனத்தின் ஓட்டுனரையும் கட்டுப்பாட்டை இழக்க செய்கின்றன.

இருசக்கர வாகனங்கள் மற்றும் சிறிய அளவிலான வாகனங்கள் என்றால் மீண்டும் வாகனத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட முடியும். ஆனால் லாரி, பேருந்துகளில் மீண்டும் கட்டுப்பாட்டை கொண்டுவருவது என்பது நீண்ட கால அனுபவம் கொண்ட ஓட்டுனர்களுக்கே சற்று சிரமம் தான்.

இப்படிப்பட்ட ஒரு விபத்து தான் கடந்த திங்கட்கிழமை தெலுங்கானாவில் அரங்கேறியுள்ளது. விபத்து தொடர்பான சிசிடிவி வீடியோ இரு கோணங்களில் விபத்தை காட்டும் விதத்தில் கிடைத்துள்ளது.
இந்த வீடியோவை வைத்து பார்க்கும்போது, விபத்திற்கு பைக் மற்றும் லாரி ஓட்டுனர் இருவர்களின் மீதும் தவறு உள்ளது. குடியிருப்புகள் மிகுந்த பகுதியில் இவ்வளவு வேகமாக வந்தது லாரி ஓட்டுனரின் தவறு.

என்றாலும், அவர் சாலையின் ஓரத்தை ஒட்டியவாறு வேகமாக வரவில்லை. சாலையின் வலதுபுறத்தில் வேகமாக செல்வதற்கு ஏற்ற பாதையில் தான் வந்துள்ளார். இதனால் இந்த விபத்திற்கு முழு காரணமும் அந்த பைக் ஓட்டுனரின் மீது தான் உள்ளது.

மறுபக்க சாலைக்கு செல்ல முயன்றவர் இந்த சாலையை கவனிக்க மறந்துவிட்டார். அவரது இந்த கவன குறைவே இந்த விபத்திற்கு முழு காரணம். பைக் மீதான மோதலை தவிர்ப்பதற்காக எதிர் சாலைக்கு லாரியை திருப்பிய லாரி ஓட்டுனருக்கு பேரதிர்ச்சியாக எதிர்புறத்தில் மற்றொரு லாரி வர, இரு லாரிகளும் மோதி கொண்டுள்ளன.

பைக் ஓட்டுனர் அப்போதுதான் பைக் ஸ்டார்ட் செய்ததால் மெதுவாக வந்தார். சற்று வேகமாக வந்திருந்தால் ஒன்று இந்த விபத்தே நடந்திருக்காது, அல்லது லாரி பைக்கின் மீது அதிவேகத்தில் மோதி இருக்கும். அதேபோல் இந்த விபத்து நடந்தது அதிகாலை போல் தெரிவதால், இந்த இரு லாரிகளை தவிர்த்து வேறெந்த வாகன ஓட்டிக்கும் சேதம் ஏற்படவில்லை.

இதில் இரு லாரி ஓட்டுனர்களும் மிகவும் தீவிர சிகிச்சையில் மருத்துவமனையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பைக் ஓட்டுனரை கைது செய்ய வேண்டும் எனவும், அவரது ஓட்டுனர் உரிமம் பறிக்கப்பட வேண்டும் எனவும் கண்டன குரல்கள் எழுந்துள்ளன.

சிசிடிவி வீடியோ இல்லை என்றால் நிச்சயம் விபத்திற்கான பழி முழுவதும் ஒரு லாரி ஓட்டுனரின் மீது விழுந்திருக்கும். பைக் ஓட்டுனர் தப்பித்திருப்பார். இதனால் தான் சிசிடிவி கேமிராக்களின் பயன்பாடு அவசியம் என்கிறோம்.


Click it and Unblock the Notifications








