61 வயது முதியவரின் வித்தியாசமான கடைசி ஆசை இதுதான்... நிறைவேறிய 2 மணி நேரத்தில் உயிர் பிரிந்தது...
மரண படுக்கையில் இருந்த 61 வயது முதியவர் வித்தியாசமான கடைசி ஆசை ஒன்றை தெரிவித்தார். அது நிறைவேறிய 2 மணி நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது.

மோட்டார்சைக்கிள்கள் மீது தீராக்காதலுடன் இருப்பவர்கள் நம்மில் ஏராளம். 18 வயது இளைஞர்கள் ஆகட்டும் அல்லது 60 வயதை கடந்த முதியவர்கள் ஆகட்டும், மோட்டார்சைக்கிள்கள் மீதான அந்த காதல் மட்டும் எப்போதும் மாறவே மாறாது. 61 வயதான ஜான் ஸ்டேன்லியும் கூட அப்படிப்பட்டவர்தான். இளம் வயது முதலே மோட்டார்சைக்கிள்கள் என்றால் ஜான் ஸ்டேன்லிக்கு அவ்வளவு பிரியம். குறிப்பாக இன்றைய இளைஞர்களின் கனவாக இருந்து வரும் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீது ஜான் ஸ்டேன்லி அதிக ஈடுபாடு காட்ட கூடியவர்.

ஆனால் ஜான் ஸ்டேன்லியை புற்று நோய் வாட்டி வதைத்தது. சுவாச கருவிகளின் உதவியுடன்தான் அவர் சுவாசித்து வந்தார். உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், ஜான் ஸ்டேன்லியால் நடக்க கூட முடியாது. அவர் படுத்த படுக்கையாகதான் கிடந்தார். ஆனால் அவரது ஆழ் மனதிற்குள் கடைசி ஆசை ஒன்று இருந்தது. தான் உயிருக்கு உயிராக நேசித்த ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களின் கர்ஜனையை, உயிரிழப்பதற்குள் மீண்டும் ஒரு முறையாவது கேட்க வேண்டும் என்பதுதான் அந்த ஆசை.

ஜான் ஸ்டேன்லியின் கடைசி ஆசையை அவரது உறவினர்கள் புரிந்து கொண்டனர். எனவே ஜான் ஸ்டேன்லியின் நெருங்கிய உறவினரான மைக்கேல் ஸ்மித் உடனடியாக செயலில் இறங்கினார். இதன் ஒரு பகுதியாக பைக் ஆர்வலரான டேவிட் தாம்ப்சன் என்பவரை மைக்கேல் ஸ்மித் தொடர்பு கொண்டார். அவரிடம் ஜான் ஸ்டேன்லியின் கடைசி ஆசையை தெரிவித்தார். உடனே பேஸ்புக்கில் டேவிட் தாம்ப்சன் போஸ்ட் ஒன்றை வெளியிட்டார்.

அதில், ஜான் ஸ்டேன்லியின் கடைசி ஆசை குறித்து அவர் உருக்கமாக விவரித்திருந்தார். அத்துடன் புற்று நோயால் துன்பப்படும் அந்த முதியவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற விரும்பும் பைக் ஆர்வலர்கள் அனைவரும் ஜான் ஸ்டேன்லியின் வீடு முன்பு ஒன்று திரள வேண்டும் என்ற கோரிக்கையையும் டேவிட் தாம்ப்சன் வைத்தார். மனதை உருக்கும் டேவிட் தாம்ப்சனின் இந்த பேஸ்புக் போஸ்ட் உடனடியாக வைரல் ஆனது.

இதனால் அடுத்த 6 மணி நேரத்திற்குள் 200க்கும் மேற்பட்ட பைக் ஆர்வலர்கள் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களுடன் ஜான் ஸ்டேன்லியின் வீடு முன்பு திரண்டு விட்டனர். இவர்களில் சிலர் நெடுந்தொலைவு கடந்து ஜான் ஸ்டேன்லியின் வீட்டை அடைந்திருந்தனர். டேவிட் தாம்ப்சனின் பேஸ்புக் பதிவை பார்த்ததும், சற்றும் யோசிக்காமல் ஜான் ஸ்டேன்லியின் வீடு நோக்கி அவர்கள் கிளம்பி வந்து விட்டனர். இதன்பின் அவர்கள் அனைவரும் இன்ஜினை ஸ்டார்ட் செய்து பைக்கை முறுக்க, அந்த சப்தத்தை கேட்டு ஜான் ஸ்டேன்லி மகிழ்ந்து போனார்.

அந்த நேரத்தில் ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களின் கர்ஜனையை இன்னும் நன்றாக கேட்க ஏதுவாக, ஜான் ஸ்டேன்லியின் உறவினர்கள் அவரை வீட்டிற்கு வெளியே தூக்கி வந்து அமர வைத்தனர். அப்போது பைக் ஆர்வலர்களை நோக்கி கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிக்காட்டினார் ஜான் ஸ்டேன்லி. இதனால் பைக் ஆர்வலர்கள் அனைவரும் எமோஷனல் ஆனார்கள். அதனை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இதன்பின் 2 மணி நேரம்தான் கடந்திருக்கும். தனது கடைசி ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியுடன் இவ்வுலகை விட்டு பிரிந்தார் ஜான் ஸ்டேன்லி. மனைவியின் கரங்களை பற்றியிருந்த சமயத்தில் ஜான் ஸ்டேன்லியின் உயிர் பிரிந்தது.

இதுகுறித்து ஜான் ஸ்டேன்லியின் மனைவி கூறுகையில், ''தான் விரும்பிய சப்தத்தை அவர் கடைசியாக கேட்டு விட்டார். அவர் மகிழ்ச்சியடைந்திருப்பார் என நினைக்கிறேன்'' என்றார். ''ஒரு மனிதருக்காக இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது'' என ஜான் ஸ்டேன்லியின் பேத்தியும் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். ஜான் ஸ்டேன்லி உயிரிழப்பதற்கு முன்பாக புதிய ஹார்லி டேவிட்சன் பைக் ஒன்றை வாங்கியிருந்தார். ஆனால் அவரால் அதனை மூன்று முறை மட்டுமே ஓட்ட முடிந்தது. இந்த நிகழ்வு தொடர்பாக Inside Edition வெளியிட்டுள்ள வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
மரண படுக்கையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பல்வேறு ஆசைகள் இருக்கும். ஆனால் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜான் ஸ்டேன்லியின் கடைசி ஆசை சற்று வித்தியாசமானதுதான். எப்படியோ பைக் ஆர்வலர்களின் உதவியுடன் அவரது கடைசி ஆசை நிறைவேறி விட்டது. ஹார்லி டேவிட்சன் நிறுவனமே பெருமிதப்பட்டு கொள்ள வேண்டிய நிகழ்வு இது. மனதை உருக்கும் இந்த நிகழ்வு தொடர்பாக VT. தளம் செய்தி வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








