முக்கால்வாசி நீரில் மூழ்கினாலும் கேடிஎம் பைக் திணறாமல் செல்லும் ரகசியம் இதுதான்!
முக்கால்வாசி தண்ணீரில் மூழ்கிய நிலையில், கேடிஎம் பைக் ஒன்று அசராமல் செல்லும் வீடியோ வியக்க வைக்கிறது. அந்த பைக் தண்ணீரில் செல்வதற்கான விஷயங்களை இந்த செய்தியில் காணலாம்.
சென்னையில் மழைநேரத்தில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடும் சமயங்களில் வாகனங்களை ஓட்டி வருவோர் தவிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. தண்ணீர் சைலென்சரில் புகுந்து எஞ்சின் பாதிப்படையும் என்ற அச்சமே இதற்கு காரணம்.

ஆனால், கேடிஎம் நிறுவனத்தின் ஆர்சி மற்றும் ட்யூக் வரிசை பைக்குகளிலும் பஜாஜ் பல்சர் 200என்எஸ் பைக்கிலும் சைலென்சர் அமைப்பு எஞ்சினுக்கு கீழ் பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கின்றன. எனவே, இந்த பைக்குகள் மழை நேரங்களில் வெளியில் எடுத்துச் செல்வது பிரச்னையை தரும் என்ற அச்சம் வாடிக்கையாளர்களிடையே இருந்தது.

இந்த சூழலில் இளைஞர்கள் சிலர் கேடிஎம் ஆர்சி பைக்கை தண்ணீர் செல்லும் கால்வாய் ஒன்றில் கால்வாய் ஒன்றில் அசால்ட்டாக ஓட்டி அசத்தி இருக்கின்றனர். இதில், கவனிக்க வேண்டிய விஷயம், கீழ்பக்கமாக சைலென்சர் பொருத்தப்பட்ட அந்த கேடிஎம் ஆர்சி பைக் திக்கி திணறாமல் அசராமல் இளைஞர்களின் வேகத்திற்கு ஈடுகொடுத்துள்ளது.
குறிப்பு: வீடியோ செய்தியின் இறுதியில் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இதுதொடர்பான வீடியோ பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. முக்கால்வாசி பைக் மூழ்கிய படி செல்லும் நிலையில், இது எவ்வாறு சாத்தியமானது என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

பஜாஜ் மற்றும் கேடிஎம் கூட்டணி ஏற்கனவே நீர் நிலையில் வைத்து ட்யூக், ஆர்சி மற்றும் பல்சர் 200என்எஸ் பைக்குகளை சோதனை நடத்தியது குறித்த வீடியோக்களை வெளியிட்டன. சைலென்சரில் தண்ணீர் புகுந்துவிடுமோ என்ற அச்சப்படும் வாடிக்கையாளர்களுக்கு புரிதலை ஏற்படுத்தும் விதமாக அந்த வீடியோக்கள் வெளியிடப்பட்டன.
இந்த சோதனைக்காகவே மிக நீளமான தண்ணீர் தொட்டிகளை கட்டி, அதில் வைத்து இந்த மூன்று பைக்குகளும் சோதனை செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த சோதனையின் மிக முக்கிய அம்சங்களும் வியப்பில் ஆழ்த்துகின்றன.
அந்த தொட்டியில் 16.5 அங்குல உயரத்திற்கு நீர் நிரப்பப்பட்ட அந்த தொட்டியில், மணிக்கு 15 கிமீ வேகத்தில் பைக்குகள் செலுத்தி சோதனை செய்யப்படுகிறது. தொடர்ந்து பைக்கை செலுத்தி சோதனை செய்தது மட்டும் ஆச்சரியப்படும் விஷயமாக இருக்காது.

இடையே பைக்கை நிறுத்தி மீண்டும் எஞ்சினை ஸ்டார்ட் செய்தும் சோதனை நடத்தி காண்பித்துள்ளனர். அதேபோன்று, தண்ணீருக்குள் பைக்கை 30 நிமிடங்கள் வரை நிறுத்தி மீண்டும் எஞ்சினை ஸ்டார்ட் செய்தும் சோதனை செய்துள்ளனர்.

இந்த சோதனைகளில் ஒரு இடத்தில் கூட கேடிஎம்- பஜாஜ் பைக்குகள் எந்த பிரச்னையும் இல்லாமல் மீண்டும் இயங்கத் துவங்கின்றன. இதனால், முழு நம்பிக்கையுடன் கீழ் பக்க சைலென்சர் அமைப்புடன் பஜாஜ் - கேடிஎம் கூட்டணி பைக்குகளை விற்பனைக்கு விட்டுள்ளன.

இந்த பைக்குகளின் சைலென்சர் வடிவமைப்பு ரகசியமே, நீர் நிலைகளை கண்டு இந்த பைக்குகள் அஞ்ச வேண்டிய அவசியமில்லாமல் செய்துள்ளன. சைலென்சர் மஃப்ளர் அமைப்பு வரை மட்டுமே நீர் புகும் வாய்ப்புண்டு. அதற்கு மேல் நீர் புக இயலாத வகையில் சைலென்சர் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோன்று, ஏர் இன்டேக் என்று சொல்லக்கூடிய எஞ்சினுக்கு காற்று உறிஞ்சும் அமைப்பும் ஆர்சி, ட்யூக் மாடல்களில் பைக்கின் இருக்கைக்கு கீழ் பகுதியில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

அதனால்தான் இந்த பைக்குகள் வெள்ள நீர் ஓடும் சாலைகளிலும் எளிதாக செல்கின்றன. ஆனால், ஏர் இன்டேக்கில் தண்ணீர் புகுந்துவிட்டால், அது எஞ்சின் செயல் இழக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதையும் மனதில் வைக்க வேண்டும்.

மேலும், இந்த பைக்குகள் எந்தளவு தண்ணீர் மட்டம் உள்ள சாலைகளில் செலுத்த முடியும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லாததால், வெள்ள நீர் செல்லும் பாதைகளில் செல்வதை தவிர்ப்பதே நலமாக இருக்கும்.
அத்துடன், தண்ணீர் தேங்கிய சாலைகளில் பள்ளம் மேடுகள், வேகத்தடைகள் உள்ளிட்ட அபாயகரமான விஷயங்கள் இருப்பதால், இந்த சாலைகளில் செல்வதை தவிர்ப்பதே உயிருக்கும், உடைமைக்கும் நலம் பயக்கும்.


Click it and Unblock the Notifications