அமேசான் சிஇஓ-வை முந்திகொண்டு விண்வெளிக்கு பறந்த லண்டன் கோடீஸ்வரர்!! இவருக்கும் கடலூருக்கும் என்னங்க சம்மந்தம்?
உலகின் பெரும் பணக்காரர்களுள் ஒருவரான இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் பிரான்சன், எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ் உள்ளிட்டோரை முந்திக்கொண்டு விண்வெளிக்கு பயணம் செய்துள்ளார். யார் இந்த பிரான்சன், இவருக்கும் நமது கடலூருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்பது உள்ளிட்ட விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

விண்வெளிக்கு சென்று அங்கிருந்து பூமியை பார்ப்பதற்கு யாருக்கு தாங்க பிடிக்காமல் இருக்கும். நம் அனைவரிடத்திலும் ஏதோ ஒரு மூளையில் இருக்கும் இந்த ஆசையை வெறும் 2 வரிகளில் கூறிவிட்டேன், ஆனால் அதனை நிஜமாக்க பில்லியன் டாலர்களில் புரளும் கோடீஸ்வரர்களாலேயே முடியும்.

விண்வெளி சுற்றுலா தொடர்பாக பல ஆண்டுகளாக பேசப்பட்டுவரும் நிலையில் தற்போது இந்த வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இலண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் விர்ஜின் க்ரூப்பின் தலைவர் தான் ரிச்சர்ட் பிரான்சன்.

உலக பெரும் பணக்காரர்களுள் ஒருவராக இருக்கும் இவர் ஏற்கனவே 70 வயதை கடந்துவிட்டார். இருப்பினும், வயது கணக்கெல்லாம் கோடீஸ்வரர்களுக்கு கிடையாது என்பதை மீண்டும் நிரூப்பிக்கும் விதமாக கடந்த ஞாயிற்று கிழமை (ஜூலை 11) ரிச்சர்ட் பிரான்சன் உள்பட 11 பேர் நேற்று நியூ மெக்சிகோவில் இருந்து விண்வெளிக்கு பயணத்தை துவங்கியுள்ளனர்.

விர்ஜின் கலக்டிக் என்ற பிரான்சனின் விண்வெளி நிறுவனத்திற்கு சொந்தமான விஎஸ்எஸ் யுனிட்டி என்ற விண்வெளி ஓடத்தில் இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான விண்வெளி சுற்றுப்பயணத்திற்கு அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் என பல கோடீஸ்வரர்கள் தயாராகி வருவது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம்.

2000ல் புளூ ஆர்ஜின் விண்வெளி நிறுவனத்தை துவங்கிய அமேசான் நிறுவனர் வருகிற ஜூலை 20ஆம் தேதி விண்வெளிக்கு பயணம் செல்ல இருக்கிறார். எலான் மஸ்க்கின் விண்வெளி பயண கனவும் மிக வேகமாக நிறைவேறி வருகிறது.

இருப்பினும் இவர்கள் இருவரையும் முந்திக்கொண்டு ரிச்சர்ட் பிரான்சன் விண்வெளிக்கு குழுவாக பறந்துள்ளார். இத்தனைக்கும் ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு பிறகே பிரான்சன் தனது விண்வெளி நிறுவனத்தை நிறுவினார்.

ஜெஃப் பெசோஸை போன்று, மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்வதே பிரான்சனின் ஆசையாகும். இப்படிப்பட்ட இந்த இங்கிலாந்து கோடீஸ்வரருக்கும் தமிழகத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா!!

ஆம், தான் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவன் என அவரே ஒரு முறை தெரிவித்துள்ளார். கடந்த 2019ல் மும்பையில் இருந்து இலண்டனுக்கு விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனத்தின் நேரடி விமான சேவையை தொடங்கி வைத்து பேசிய பிரான்சன், டி.என்.ஏ சோதனையின் மூலம் தன்னுடைய மூதாதையர்கள் தமிழக கடலூரை சேர்ந்தவர்கள் என அறிந்து கொண்டதாக கூறியிருந்தார்.

"எனது முந்தைய தலைமுறையினர் இந்தியாவில் வாழ்ந்தவர்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால், எங்கள் தொடர்புகள் எவ்வளவு வலிமையானவை என்பதை உணரவில்லை. 1793ஆம் ஆண்டு முதல் எங்களது நான்கு தலைமுறைகள் தமிழகத்தில், கடலூரில் வாழ்ந்திருக்கின்றனர்.

என் பெரிய, பெரிய, பெரிய பாட்டிகளில் ஒருவரான ஆரியா என்ற இந்திய பெண், என் பெரிய, பெரிய, பெரிய தாத்தாக்களில் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். உமிழ்நீர் மற்றும் டிஎன்ஏ பரிசோதனைகளின் மூலம் இந்த உண்மை எனக்கு தெரியவந்தது" என பிரான்சன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications








