வினோத சம்பவம்! 2 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட கார் சிக்கியது! யாரிடம் இருந்தது என தெரிந்தால் ஸ்டண் ஆயிருவீங்க
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட கார் தற்போது சிக்கியுள்ளது. பல்வேறு ஆச்சரியங்களும், அதிர்ச்சியும் நிறைந்த இந்த சம்பவம் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பைத்தூர் காவல் நிலைய எஸ்ஹெச்ஓ (SHO - Station House Officer), இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட காரை பயன்படுத்தி வந்தது தொடர்பாக தற்போது சர்ச்சையில் சிக்கி கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் பல்வேறு பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காரை தொலைத்த அதன் உண்மையான உரிமையாளருக்கு, கார் எப்படி சர்வீஸ் செய்யப்பட்டுள்ளது? என்று கேட்பதற்காக சர்வீஸ் சென்டரில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன நமது கார் சர்வீஸ் செய்யப்பட்டுள்ளதா? என அவர் ஒரு நிமிடம் திகைத்து போனார்.

பின்னர் காரை சர்வீஸ் செய்தது யார்? என்பது போன்ற கூடுதல் தகவல்களை அவர் கேட்டுள்ளார். அப்போது பைத்தூர் காவல் நிலைய எஸ்ஹெச்ஓ-விடம் காரை திரும்ப ஒப்படைத்ததாக சர்வீஸ் சென்டர் ஊழியர் கூறியுள்ளார். பைத்தூர் காவல் நிலைய எஸ்ஹெச்ஓ-வின் பெயர் கயூசலேந்திர பிரதாப் சிங் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட காரை அவர் தனது சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளார். கார் திருடப்பட்ட சமயத்திலேயே, அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அதன் உரிமையாளரான ஓமேந்திர சோனி இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தனது கார் திருடப்பட்டதாக அவர் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

காரை வாட்டர் சர்வீஸ் செய்வதற்காக ஒரு சர்வீஸ் சென்டரில் விட்டிருந்தபோது அங்கிருந்து கார் திருடப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். பாரா காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் திருடுபோன காரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், மேற்கொண்டு விசாரணை செய்யாமல் இந்த வழக்கை காவல் துறையினர் முடித்து விட்டதாக கூறப்படுகிறது.

கார் திருடப்பட்டதால் ஓமேந்திர சோனிக்கு காப்பீடு மூலம் ஏதேனும் பலன்கள் கிடைத்ததா? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த சூழலில் சர்வீஸ் சென்டர் ஒன்றில் இருந்து கடந்த புதன் கிழமை (டிசம்பர் 30) ஓமேந்திர சோனிக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், கார் நன்றாக சர்வீஸ் செய்யப்பட்டுள்ளதா? உங்களுக்கு திருப்தியா? என்பது போன்ற கேள்விகளை கேட்டுள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன தனது கார் பற்றிய அனைத்து விபரங்களையும் சர்வீஸ் சென்டர் ஊழியர் துல்லியமாக கூறியதால் ஓமேந்திர சோனி அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தார். அதன்பின்னர் கூடுதல் தகவல்களை பெற வேண்டும் என்பதற்காக ஓமேந்திர சோனி உடனடியாக அந்த சர்வீஸ் சென்டருக்கு சென்றார்.

அப்போது சர்வீஸை முடித்த பிறகு கடந்த டிசம்பர் 22ம் தேதி பைத்தூர் காவல் நிலைய எஸ்ஹெச்ஓ கயூசலேந்திர பிரதாப் சிங்கிடம் கார் ஒப்படைக்கப்பட்டதாக அங்கிருந்த ஊழியர்கள் கூறியுள்ளனர். அதன்பின் திருடுபோன தனது காரை மீட்ட பிறகு காவல் துறை தரப்பில் தனக்கு ஏன் தகவல் தெரிவிக்கப்படவில்லை? என ஓமேந்திர சோனி குழப்பம் அடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்தபோது இந்த காரை கண்டுபிடித்தாக எஸ்ஹெச்ஓ கயூசலேந்திர பிரதாப் சிங் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாரும் சொந்தம் கொண்டாடவில்லை என்பதால், அந்த காரை அவர் பறிமுதல் செய்துள்ளார்.

அதன்பின் தனது சொந்த உபயோகத்திற்கு அவர் காரை பயன்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் இந்த காரை எங்கே பார்த்தார்? எந்த தேதியில், எந்த நேரத்தில் காரை பறிமுதல் செய்தார்? என்பது போன்ற சரியான தகவல்கள் எதையும் எஸ்ஹெச்ஓ கயூசலேந்திர பிரதாப் சிங் விசாரணையில் வெளியிடவில்லை.

வழக்கமான நடைமுறைப்படி அவர் காரை பறிமுதல் செய்த உடனே, அவர் பணியாற்றும் பைத்தூர் காவல் நிலையத்தில் இருந்து, ஓமேந்திர சோனி புகார் அளித்த பாரா காவல் நிலையத்திற்கு தகவல் சென்றிருக்க வேண்டும். ஆனால் அப்படியான தகவல் எதுவும் கொடுக்கப்படவில்லை. இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எந்த ஒரு வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் என்றாலும், காவல் துறையினர் அதனை பயன்படுத்த கூடாது என கான்பூர் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த உத்தரவை மீறி எஸ்ஹெச்ஓ கயூசலேந்திர பிரதாப் சிங் காரை பயன்படுத்தியதாக தெரிகிறது. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதில், தவறு உறுதி செய்யப்படும் பட்சத்தில் எஸ்ஹெச்ஓ கயூசலேந்திர பிரதாப் சிங் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே ஓமேந்திர சோனி பறிகொடுத்தது மாருதி சுஸுகி வேகன் ஆர் என கூறப்படுகிறது. அவரிடம் தற்போது கார் ஒப்படைக்கப்பட்டு விட்டதா? என்பது உறுதியாக தெரியவில்லை. இதுகுறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








