பஸ் ஓட்டும்போது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்ய டிரைவர்களுக்கு அதிரடி உத்தரவு.. பயணிகள் நிம்மதி
பஸ் ஓட்டும்போது, செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்யும்படி டிரைவர்களுக்கு அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
பஸ் ஓட்டும்போது, செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்யும்படி டிரைவர்களுக்கு அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதும், விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணங்களுள் ஒன்றாக உள்ளது. இதனால் பலர் பரிதாபமாக உயிரிழக்க நேரிடுகிறது. பலர் படுகாயம் அடைகின்றனர்.

செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் தொடர்பாக, தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று, பெங்களூருவில் கடந்த ஆண்டு ஆய்வு ஒன்றினை நடத்தியது. இதில், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன.

ஆய்வில் பதில் அளித்தவர்களில் 83 சதவீதம் பேர், வாகனம் ஓட்டும்போது, செல்போன் மூலம் கால் செய்வதையோ அல்லது இன்கம்மிங் கால்களை எடுத்து பேசுவதையோ வழக்கமாக கொண்டிருப்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் பணி நிமித்தமாகதான் செல்போன் பயன்படுத்துவதாக கூறினர்.

ஆனால் 44 சதவீதம் பேர், வாகனம் ஓட்டிகொண்டே, செல்போன் மூலம் சமூக வலைதளங்களில் உலாவுவதை வழக்கமாக கொண்டிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. என்ன நடந்து விடப்போகிறது? என்ற அலட்சியம் காரணமாகவே பலர் செல்போனை பயன்படுத்தி கொண்டே வாகனம் ஓட்டுகின்றனர்.

இதர வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது, அரசு பஸ்களின் டிரைவர்கள் சிலரும் கூட, செல்போனில் பேசிக்கொண்டு பஸ் ஓட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இதனால் அந்த பஸ்ஸில் பயணிக்கும் பயணிகள் அனைவரும், உயிரை கையில் பிடித்தபடி, அச்சத்துடன்தான் பயணிக்க வேண்டியுள்ளது.

செல்போனில் பேசிக்கொண்டே டிரைவர்கள் பஸ்ஸை ஓட்டுவதாக தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன. இதன் எதிரொலியாக, பெங்களூரு பெருநகர போக்குவரத்து கழகம் (BMTC-Bangalore Metropolitan Transport Corporation) அதிரடியான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

டிரைவர்கள் அனைவரும், பஸ் ஓட்டும்போது, செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும் என பிஎம்டிசி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பிஎம்டிசி என்பது பெங்களூரு பெரு நகரில், பஸ்களை இயக்கும் ஓர் அரசு நிறுவனமாகும்.

இதுதவிர பெங்களூரு பெருநகரில் உள்ள மெஜஸ்டிக், சாந்தி நகர் உள்ளிட்ட முக்கியமான பஸ் நிலையங்களில், டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அதாவது, பஸ் ஓட்டும்போது, செல்போன் பயன்படுத்த வேண்டாம் என லவுட் ஸ்பீக்கர் மூலமாக டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அத்துடன் இதர டெப்போக்களிலும், இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் விபத்துக்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வரும் என நம்பப்படுகிறது. பிஎம்டிசி-யின் அதிரடியான உத்தரவு காரணமாக, பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்திலும் அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் பலர், செல்போனில் பேசிக்கொண்டு, பஸ் ஓட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.


Click it and Unblock the Notifications








