அரசு பஸ் டிரைவர்களுக்கு ஆப்பு! இனி இதை செஞ்சா வீட்டுக்கு நடைய கட்ட வேண்டியதுதான்! சந்தோஷத்தில் பயணிகள்!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள், தங்கள் பயணத்திற்கு, பஸ் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களைதான் பெரிதும் நம்பியுள்ளனர். அரசும் கூட, சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை குறைப்பதற்காக, பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்யும்படி, மக்களை ஊக்குவித்து வருகிறது. ஆனால் ஒரு சில சமயங்களில், பஸ்களின் டிரைவர்கள் மிகவும் அலட்சியமாக செயல்படுகின்றனர்.
குறிப்பாக செல்போனில் பேசி கொண்டே பஸ்களை ஓட்டுகின்றனர். இதன் காரணமாக ஏராளமான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. அத்துடன் இது பொது போக்குவரத்து மீது மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே செல்போனில் பேசி கொண்டே பஸ்களை இயக்கும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதன் பேரில், பிஎம்டிசி என்று சுருக்கமாக அழைக்கப்படும் பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகம் (BMTC - Bengaluru Metropolitan Transport Corporation), பஸ் டிரைவர்களுக்கு தற்போது அதிரடியான புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இது குறித்து இதினா தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியின்படி பார்த்தால், முதல் முறையாக செல்போனில் பேசி கொண்டே பஸ் ஓட்டி சிக்கும் டிரைவர்கள் மீது, 15 நாள் சஸ்பெண்ட், மற்றொரு யூனிட்டிற்கு இடமாற்றம் மற்றும் சம்பளத்தில் 5 ஆயிரம் ரூபாய் பிடிப்பு ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆனால் தொடர்ந்து இதே தவறை செய்து கொண்டே இருந்தால், தண்டனை இன்னும் அதிகமாக இருக்கும்.

இதன்படி 2வது முறை சிக்கினால், 15 நாள் சஸ்பெண்ட், இடமாற்றம், ஒரு வருடத்திற்கு பதவி உயர்வு நிறுத்தி வைப்பு அல்லது சம்பளத்தில் 5 ஆயிரம் ரூபாய் பிடிப்பு போன்ற நடவடிக்கைகள் பாயும். 3வது முறை சிக்கினால், 15 நாள் சஸ்பெண்ட், இடமாற்றம், ஒழுங்கு நடவடிக்கை, 2 வருடங்களுக்கு பதவி உயர்வு நிறுத்தி வைப்பு அல்லது சம்பளத்தில் 10 ஆயிரம் ரூபாய் பிடிப்பு ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
4வது முறை சிக்கினால், 15 நாள் சஸ்பெண்ட், இடமாற்றம், ஒழுங்கு நடவடிக்கை, பதவி உயர்வு 2 வருடங்களுக்கோ அல்லது நிரந்தரமாகவோ நிறுத்தி வைப்பு அல்லது சம்பளத்தில் 20 ஆயிரம் ரூபாய் பிடிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் பாயும். அதுவே 5வது முறை சிக்கினால், 15 நாள் சஸ்பெண்ட், இடமாற்றம், ஒழுங்கு நடவடிக்கை, பதவி உயர்வு நிரந்தரமாக நிறுத்தி வைப்பு அல்லது சம்பளத்தில் 25 ஆயிரம் பிடிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, டிரைவர்கள் செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டுவது குறையும் என பெங்களூர் பெரு நகர போக்குவரத்து கழகம் கருதுகிறது. இதன் விளைவாக பெங்களூர் நகரில் பிஎம்டிசி பஸ் டிரைவர்களின் அலட்சியத்தால் ஏற்படும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர ஒவ்வொரு டிப்போவும், தினமும் காலை 5 மணிக்கு, சாலை பாதுகாப்பு குறித்து டிரைவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகம் தற்போது உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மண்டலமும், ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் 2 முறையாவது, பஸ் டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகத்தின் உத்தரவு உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. ஏனெனில், டிரைவர்கள் செல்போனில் பேசி கொண்டே பஸ்களை ஓட்டும்போது, பயணிகள் உயிரை கையில் பிடித்து கொண்டு பயணம் செய்கின்றனர். இது அவர்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி விடுகிறது.
ஆனால் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு மூலம், இனிமேல் பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழக பஸ் டிரைவர்கள், செல்போனில் பேசி கொண்டே பஸ் ஓட்டுவதை தவிர்ப்பார்கள் என நாம் உறுதியாக நம்பலாம். எனவே பெங்களூர் நகரில், சாலை பாதுகாப்பு மேம்படும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








