மூக்கின் மேல் விரல் வைத்த மக்கள்... அரசு பஸ்ஸை ஓட்டி சென்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி... எதற்காக தெரியுமா?
பெண் ஐஏஎஸ் அதிகாரி பஸ் ஓட்டி சென்ற சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஒரு காலத்தில் அடுப்படிக்குள் மட்டும் முடக்கி வைக்கப்பட்டிருந்த பெண்கள் இன்று அனைத்து துறைகளிலும் சாதிக்க தொடங்கி விட்டனர். மிகவும் கடினமான விண்வெளி துறையிலும் கூட பெண்கள் வெற்றிக்கொடி நாட்டி வருகின்றனர். ஆனால் இன்னமும் கூட முழுக்க முழுக்க ஆணாதிக்கம் நிலவி வரும் ஒரு சில துறைகளும் இருக்கவே செய்கின்றன.

இதில், கனரக வாகன துறை முக்கியமானது. பஸ் மற்றும் லாரி போன்ற கனரக வாகனங்களின் ஓட்டுனர்கள் பெரும்பாலானோர் ஆண்களாகவே இருக்கின்றனர். இந்தியாவில் பஸ் மற்றும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை ஓட்டும் பெண்களை காண்பது அரிதிலும் அரிதான விஷயமாக இருக்கிறது. பெண்கள் இத்துறையில் சாதிக்க முடியாததற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

கனரக வாகனங்களை கட்டுப்படுத்தி ஓட்டுவது கடினமானது என்பது முதல் காரணமாக சொல்லப்படுகிறது. கனரக வாகனங்களை ஓட்டுவதில் ஆண் டிரைவர்களே பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சூழல்களில் கனரக வாகனங்களை இயக்குவது கொஞ்சம் கடினம்தான். மேலும் தாறுமாறாக செல்லும் டூவீலர் ரைடர்களும் சில சமயங்களில் பிரச்னை ஏற்படுத்துகின்றனர்.

ஆனால் இதுபோன்ற தடைக்கற்களை எல்லாம் தகர்த்து, கனரக வாகனங்களை இயக்கும் பெண்களை பற்றிய ஆச்சரியமான செய்திகள் அவ்வப்போது வெளியாகி கொண்டுதான் இருக்கின்றன. இது போன்ற செய்திகளே நமக்கு வியப்பை தரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு செய்தி நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறது.

ஆம், பெங்களூரில் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பஸ்ஸின் ஸ்டியரிங் வீலை பிடித்துள்ளார். கச்சிதமாக பஸ் ஓட்டியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பதுடன், பெண்கள் பலருக்கும் அவர் உத்வேகம் கொடுத்துள்ளார். அவர் பஸ் ஓட்டிய வீடியோ காட்சி தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஷிகா (Shikha) என்ற பெண் ஐஏஎஸ் அதிகாரிதான் பஸ் ஓட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். இவர் 2004 ஐஏஎஸ் அதிகாரி ஆவார். பிஎம்டிசி எனப்படும் பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகத்தின் (BMTC - Bangalore Metropolitan Transport Corporation), நிர்வாக இயக்குனராக கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஷிகா பொறுப்பேற்று கொண்டார்.

அன்று முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை ஷிகா எடுத்து வருகிறார். ஆனால் பிஎம்டிசி பேருந்துகளில் சமீப காலமாக அடிக்கடி பிரேக் ஃபெயிலியர் ஏற்பட்டு வருவதாகவும், இது சாலை விபத்துக்களுக்கு வழி வகுப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பிஎம்டிசி நிர்வாக இயக்குனர் ஷிகாவிற்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

எனவேதான் நேரடியாக அவரே களத்தில் இறங்கி பஸ்ஸை டெஸ்ட் டிரைவ் செய்துள்ளார். அனேகமாக சமீப கால அளவில், நேரடியாக பஸ்ஸை ஓட்டி பார்த்து ஆய்வு நடத்திய முதல் ஐஏஎஸ் அதிகாரி ஷிகாவாகதான் இருக்க கூடும். பெண் அதிகாரி ஷிகா, வால்வோ பஸ்ஸை ஓட்டி சோதனை செய்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இதனால் பிஎம்டிசி-யில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வியப்படைந்துள்ளனர். ஹோஸ்கோட் பயிற்சி மையத்தில் உள்ள டெஸ்ட் டிராக்கில் ஷிகா பஸ்ஸை ஓட்டியுள்ளார். அப்போது பிஎம்டிசி அதிகாரிகள் சிலரும் அவருடன் இருந்தனர். பிஎம்டிசி பஸ்களில் தினமும் பல லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர்.

மொத்தம் 6,400 பஸ்களை பிஎம்டிசி வைத்துள்ளது. சுமார் 14,000 டிரைவர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், முழுக்க முழுக்க அனைவரும் ஆண்கள்தான். எனினும் ஒரே ஒரு பெண் டிரைவர் பிஎம்டிசி-யில் பணியாற்றி வருகிறார். அவரது பெயர் பிரேமா ராமப்பா நாடப்பட்டி (Prema Ramappa Nadapatti). பிஎம்சிடி பெண் நிர்வாக இயக்குனர் பஸ் ஓட்டியிருப்பதால், அவர் மகிழ்ச்சியில் உள்ளார்.

இதுகுறித்து பிரேமா ராமப்பா நாடப்பட்டி கூறுகையில், ''எங்களது எம்டி (ஷிகா) மற்றவர்களுக்கு உத்வேகம் கொடுக்க கூடியவராகவும், ரோல் மாடலாகவும் இருக்கிறார். பெண் அதிகாரிகள் பேருந்து ஓட்டி நான் எப்போதும் பார்த்ததில்லை. ஏனென்றால் இது எளிதான காரியம் கிடையாது. ஆனால் எங்களது எம்டி கவனமாகவும், பயம் இல்லாமலும் பஸ் ஓட்டியுள்ளார்.
பேருந்துகள் மீது அவருக்கு இருக்கும் ஆர்வத்தை இது காட்டுகிறது. டிரைவர்கள் சந்திக்கும் பிரச்னைகளையும் அவர் புரிந்து கொண்டுள்ளார். இது இன்னும் அதிகமான பெண்களை வாகனம் ஓட்ட ஊக்குவிக்கும்'' என்றார். உண்மையில் இது பெண்களுக்கு உத்வேகம் அளிக்க கூடிய நிகழ்வுதான் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications