பிஎம்டபிள்யூ கார் வேணாம்னு ரோட்டில் விட்டு சென்ற உரிமையாளர்! இவருக்கு முன்னாடி அம்பானிலாம் ஓரமாதான் நிக்கணும்!
இந்தியாவில் ஒரு காலத்தில் பிஎம்டபிள்யூ (BMW), ஆடி (Audi) மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) போன்ற நிறுவனங்களின் சொகுசு கார்கள் மிகவும் அரிதான ஒன்றாக இருந்தன. ஆனால் தற்போது காலம் மாறி விட்டது. இந்த நிறுவனங்களின் விலை உயர்ந்த கார்கள் எல்லாம் தற்போது சர்வ சாதாரணமான ஒன்றான மாறி விட்டன.
எந்த அளவிற்கு என்றால், வேண்டாம் என சாலையில் அனாதையாக விட்டு செல்லும் அளவிற்கு! ஆம், உண்மைதான். பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் (BMW 5-Series) காரின் உரிமையாளர் ஒருவர், அந்த கார் தனக்கு வேண்டாம் என கூறி, சாலையில் விட்டு சென்றுள்ளார். இதற்கு அவர் கூறிய காரணம், நமக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் நடைபெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் காரின் உரிமையாளர் ஒருவர், கோழிக்கோடு பகுதியில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றுக்கு வந்துள்ளார். அதற்கு எதிரே உள்ள கடைகளுக்கு முன்பு, அவர் அந்த காரை பார்க்கிங் செய்து விட்டு சென்றார்.
ஆனால் 5 நாட்கள் கடந்த பின்னரும் கூட, அவர் காரை மீண்டும் வந்து எடுக்கவில்லை. இது அங்கே கடைகளை வைத்து வியாபாரம் செய்து வியாபாரிகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் ஷாப்பிங் மாலுக்கு வந்த யாரோ காரை பார்க்கிங் செய்து விட்டு சென்றிருப்பதாகவே அவர்கள் நினைத்தனர்.

ஆனால் 5 நாட்கள் கடந்த பின்னரும், காரை யாரும் வந்து எடுக்காததால், அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். கார் இடையூறாக நிறுத்தப்பட்டிருந்ததால், அவர்களின் வியாபாரம் பாதிக்கப்பட்டதுதான் இதற்கு காரணம். எனவே இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகளிடம் வியாபாரிகள் புகார் தெரிவித்தனர். இதன் பேரில், சம்பந்தப்பட்ட பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் காரின் உரிமையாளரை கண்டறிந்து, காவல் துறை அதிகாரிகள் பேசினர்.
அப்போது அவர் தெரிவித்த விஷயங்கள், காவல் துறை அதிகாரிகளையே ஆடி போக வைத்து விட்டது. சம்பவத்தன்று அவர் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த வாகனங்களின் ஹாரன் அளவுக்கு அதிகமாக அடிக்கப்பட்டதாம். இதனால் எரிச்சல் அடைந்த அவர், காரை அங்கேயே நிறுத்தி விட்டு சென்று விட்டாராம்.
இதற்கே அதிர்ச்சியடைந்து விட வேண்டாம். இன்னும் இருக்கிறது. தொடர்ந்து காவல் துறை அதிகாரிகளிடம் பேசிய அந்த நபர், தன்னிடம் நிறைய கார்கள் இருப்பதாகவும், அதனால் அந்த பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் கார் தனக்கு வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்! இதை கேட்டதும் காவல் துறை அதிகாரிகளுக்கு ஒரு நிமிடம் தலையே சுற்றி விட்டதாம்!
இந்த சம்பவத்தில் இன்னும் 2 முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. இந்த பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் காரில் வியாபாரிகள் தற்போது பேனர் ஒன்றை கட்டியுள்ளனர். ஷாப்பிங் மாலுக்கு வரும் நிறைய பேர் தங்கள் கடைகளின் முன்பு வாகனங்களை பார்க்கிங் செய்து விட்டு செல்வதால், அதற்கு எதிராக போராட்டம் நடத்தப்படுவதாக அந்த பேனரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு விஷயம் என்னவென்றால், வேண்டாம் என கைவிடப்பட்ட பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் காரின் உரிமையாளர், சில நாட்களுக்கு பிறகு மீண்டும் அந்த இடத்திற்கு வந்துள்ளார். காரில் இருந்த தனது பொருட்களை மட்டும் எடுத்து கொண்ட அவர், அப்போதும் காரை அங்கேயே விட்டு விட்டு சென்று விட்டார்.
அவர் அதிகாலை நேரத்தில் வந்து பொருட்களை எடுக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன. தான் வந்தது யாருக்கும் தெரிய கூடாது என்பதற்காக அவர் அதிகாலை நேரத்தில் வந்து பொருட்களை எடுத்து சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து காவல் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் கார், சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்தது. தற்போதைய நிலையில் 68.90 லட்ச ரூபாய் என்ற விலையில் (Price) இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் இந்த காரை வேண்டாம் என விட்டு சென்ற நபர், அதை செகண்ட் ஹேண்ட் (Second Hand) மார்க்கெட்டில், மிகவும் குறைவான விலையில் வாங்கியிருக்கலாம்.
இதன் காரணமாக ஓரளவிற்கு பயன்படுத்திய பிறகு, இப்படி செய்திருக்கலாம். அல்லது அவர் மன நலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம். எது எப்படியாயினும், மற்றவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், காரை விட்டு சென்றது தவறு. எனவே காவல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications