1 கோடி ரூபாய் காரில் வந்தவருக்கு அபராதம்! என்ன செய்தார்? என தெரிந்தால் விழுந்து விழுந்து சிரிப்பீங்க
சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள காரில் வந்தவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். அவர் என்ன செய்தார்? என தெரிந்தால் விழுந்து விழுந்து சிரிப்பீங்க.

உலகிலேயே சாலை விபத்துக்களால் அதிக உயிரிழப்புகளை சந்தித்து வரும் நாடுகளில் ஒன்று இந்தியா. ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் உயிர்களை இந்திய சாலைகள் காவு வாங்குகின்றன. பெரும்பாலான வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே இதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகளை போக்குவரத்து விதிகளை பின்பற்ற வைக்க முயற்சிகள் நடக்கின்றன.

இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதில், போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் மிகவும் கடுமையாக உயர்த்தப்பட்டன. அனைத்து விதமான விதிமீறல்களுக்கும் அபராத தொகைகள் உயர்த்தப்பட்டதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் கடுமையான அபராதத்தை விதித்து வரும் நிலையிலும், இன்னும் ஒரு சிலர் விதிமுறைகளை பின்பற்ற மறுக்கின்றனர். குறிப்பாக செல்போனில் பேசி கொண்டே வாகனங்களை ஓட்டுவது, இன்னமும் பொதுவான விதிமுறை மீறலாக இருந்து வருகிறது.

இதன்படி பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் (BMW 5 Series) காரின் உரிமையாளர் ஒருவர், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காவல் துறையினர் 5,000 ரூபாயை அபராதமாக விதித்தனர். ஆனால் அவரோ, அபராத தொகையை 100 அல்லது 200 என குறைக்கும்படி போலீசாரிடம் கெஞ்சியுள்ளார்.

தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள இச்சம்பவம், வீடியோவில் பதிவாகியுள்ளது. இதில், இரண்டு போலீசார், பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் கார் ஒன்றை நிறுத்துவதை பார்க்க முடிகிறது. அந்த காரை ஓட்டி வந்த நபர், உடனடியாக காரை நிறுத்தினாலும், தொடர்ந்து செல்போனில் பேசி கொண்டே இருந்தார். இதற்காக அபராதம் செலுத்த வேண்டும் என அவரிடம் போலீசார் கூறினர்.

ஆனால் அவரோ காவல் துறையினரிடம் வாக்குவாதம் செய்தார். அத்துடன் தற்போதுதான் வீட்டில் இருந்து வெளியில் வருவதாகவும், அவசரமாக ஓரிடத்திற்கு போக வேண்டியுள்ளதால், தன்னை அங்கிருந்து செல்ல அனுமதிக்குமாறும் கேட்டு கொண்டார். இதுபோதாதென்று அந்த காரின் உரிமையாளர், சிலருக்கு போன் செய்து, தனக்கு உதவி செய்யும்படி கேட்டு கொண்டார்.

ஆனால் அவர்கள் யாரும் போலீசாருடன் பேசவில்லை. இறுதியாக காரை விட்டு இறங்கிய அந்த நபர், காவல் துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்த காரின் மாடல் என்ன? இதன் விலை என்ன? என்பது போன்ற கேள்விகளை காவல் துறை அதிகாரி கேட்டார். இதற்கு அந்த கார் உரிமையாளர் 83 லட்ச ரூபாய் என பதில் அளித்தார்.

இதன்பின் செல்போனில் பேசி கொண்டே கார் ஓட்டிய குற்றத்திற்காக, அவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக காவல் துறை அதிகாரி கூறினார். ஆனால் அந்த காரின் உரிமையாளரோ 100 அல்லது 200 ரூபாய் மட்டும் அபராதம் விதித்து விட்டு, தன்னை அங்கிருந்து செல்ல அனுமதிக்கும்படி வலியுறுத்தினார். ஆனால் காவல் துறை அதிகாரியோ இறங்கி வரவில்லை.

அபராதம் செலுத்தியே ஆக வேண்டும் என்று அந்த காரின் உரிமையாளரிடம் கறாராக கூறி விட்டார். அந்த காரின் உரிமையாளர் ஒரு சில முறை கேட்டு பார்த்தார். ஆனால் இறுதியில் காவல் துறை அதிகாரி 5,000 ரூபாய் அபராதத்தை விதித்து விட்டார். பகவத் பிரசாத் பாண்டே டராகோ ஜி என்பவருடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியாகியுள்ள வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டுவது உண்மையிலேயே ஆபத்தான விஷயம். இங்கு நடக்கும் பல்வேறு சாலை விபத்துக்களுக்கு இது முக்கிய காரணமாக உள்ளது. எனவே உங்களுக்கு செல்போனில் அவசர அழைப்பு வந்தால், வாகனத்தை பாதுகாப்பான இடத்தில் நிறுத்திய பின்னர், அழைப்பை எடுத்து பேசுவது அனைவருக்கும் நல்லது.


Click it and Unblock the Notifications








