முதல்வரே நேரில் தலையிட்டும், புதிய தொழிற்சாலைக்கு நோ சொல்லும் பிஎம்டபிள்யூ!! சென்னை தொழிற்சாலையே போதுமாம்!
இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் புதிய கார் பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலையை நிறுவ போவதில்லை என பிஎம்டபிள்யூ குழுமம் தனது அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதனை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு இந்தியாவில் நமது சென்னையில் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் பிஎம்டபிள்யூ கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுவது மட்டுமின்றி, கப்பல்கள் மூலமாக வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் சமீப நாட்களாக வட இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் புதியதொரு தொழிற்சாலையை பிஎம்டபிள்யூ குழுமம் நிறுவவுள்ளதாகவும், அது கார் அசெம்பிள் தொழிற்சாலையாக இல்லாமல், கார் பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலையாக விளங்கும் எனவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால் அந்த தகவல்களை தற்போது பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் மறுத்துள்ளது.

இதுகுறித்த பிஎம்டபிள்யூ குழுமத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "பிஎம்டபிள்யூ க்ரூப் இந்தியா நிறுவனம் பஞ்சாப்பில் கூடுதல் உற்பத்தி பணிகளுக்கான தொழிற்சாலையை நிறுவும் எந்த திட்டமும் கொண்டில்லை. சென்னையில் உள்ள அதன் உற்பத்தி தொழிற்சாலை, புனேவில் உள்ள உதிரிபாகங்கள் கிடங்கு, குர்கான் என்சிஆர் பயிற்சி மையம் மற்றும் நாட்டின் முக்கிய பெருநகரங்களில் நன்கு வளர்ந்த டீலர் நெட்வொர்க் உடன் பிஎம்டபிள்யூ குழுமம் அதன் இந்திய செயல்பாடுகளில் உறுதியாக உள்ளது".

பஞ்சாப் மாநிலத்தில் பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது புதிய தொழிற்சாலையை நிறுவ உள்ளது ஒன்றும் வதந்தியாக பரவிய செய்தி கிடையாது. பஞ்சாப் மாநில அரசாங்கமே கடந்த செப்.13ஆம் தேதி அறிக்கையின் மூலமாக தெரிவித்திருந்த விஷயமாகும். கடந்த செப்.13ஆம் தேதி பஞ்சாப் மாநில முதல்வர் பக்வந்த் மான் ஜெர்மனியில் உள்ள பிஎம்டபிள்யூ குழுமத்தின் தலைமையகத்திற்கு வருகை தந்திருந்தார்.

அதன்பின்பே பஞ்சாப் மாநில அரசிடம் இருந்து அத்தகைய அறிக்கை வெளிவந்தது. ஆனால் அதனை தற்போது பிஎம்டபிள்யூ அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. அறிவிப்பு வெளிவந்து வெறும் 2 நாட்களுக்குள் மறுப்பு அறிக்கை பிஎம்டபிள்யூவில் இருந்து வெளிவந்திருப்பதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. பிஎம்டபிள்யூ குழுமத்தில் இருந்து தற்போது இவ்வாறான மறுப்பு அறிக்கை வெளிவந்ததினால், பஞ்சாப்பில் எதிர்கட்சிகள் ஆளுங்கட்சியினரை கேள்வியெழுப்ப ஆரம்பித்துள்ளன.

குறிப்பாக, பஞ்சாப் மாநில எதிர்கட்சி தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரதாப் சிங் பஜ்வா தனது டுவிட்டர் பக்கத்தில், "முதல்வர் பக்வந்த் மான் கூறியதுபோல் பஞ்சாபில் எந்தவொரு தொழிற்சாலையும் அமைக்கப்படுவதை பிஎம்டபிள்யூ மறுத்துள்ளது. இதுகுறித்து முதல்வர் தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த முடியுமா அல்லது அவர் முழு மாநிலத்திற்கும் பொய் சொல்கிறாரா?" என கேள்வியெழுப்பியுள்ளார்.

முன்னதாக ஜெர்மனி நாட்டிற்கு சென்றிருந்த பஞ்சாப் முதல்வர் தங்களது மாநிலம் வணிகங்களை மேற்கொள்வதற்கு ஏற்ற தளமாக உள்ளதாக பல்வேறு வூ (woo) முதலீட்டாளர்களிடம் விளம்பரப்படுத்தினார். இந்த சந்திப்புகள் அனைத்தும் பிஎம்டபிள்யூ குழுமத்திடம் இருந்து பஞ்சாப்பில் தொழிற்சாலை அமைப்பதற்கான ஒப்புதலை வாங்கிய பிறகு முதல்வர் பகவந்த் மான் மேற்கொண்டவை ஆகும்.

பஞ்சாப் மாநிலத்தில் தொழிற்சாலை அமைக்கப்பட்டால், அது இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இரண்டாவது தொழிற்சாலையாக விளங்கும். ஏனெனில் ஏற்கனவே கூறியதுபோல், சென்னையில் பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு தொழிற்சாலை உள்ளது. புதிய பிஎம்டபிள்யூ தொழிற்சாலை மாநிலத்தின் தொழில் வளங்களை அதிகரிக்கும் என்றும், இளம் தலைமுறையினருக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எனவும் பஞ்சாப் முதல்வர் அந்த சமயத்தில் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

ஆனால் அவரது கனவுகள் அனைத்தையும் கானல் நீராக பிஎம்டபிள்யூ குழுமம் தனது அறிக்கையின் மூலம் மாற்றியுள்ளது. இருப்பினும், இது இத்துடன் நிற்க போவதில்லை. ஏனெனில் பஞ்சாப் மாநில அரசு புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கு பிஎம்டபிள்யூ குழுமத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளலாம். இதன் வாயிலாக, வரும் காலங்களில் பஞ்சாப்பில் பிஎம்டபிள்யூ கார்களின் பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலை வரும் என நம்புவோம்.

புதிய தொழிற்சாலைக்காக மட்டுமின்றி, பஞ்சாப் மாநிலத்தின் இ-மொபைலிட்டி பிரிவிலும் இணைய பிஎம்டபிள்யூ நிறுவனத்தை முதல்வர் பக்வந்த் மான் அப்போது அழைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இதற்கான தனது நிலைப்பாட்டை பிஎம்டபிள்யூ இன்னும் தெரிவிக்கவில்லை. எலக்ட்ரிக் வாகனங்கள் ஆட்டோமொபைல் துறையில் முதன்மை பிரிவாக மாறும் என்பதிலும் பஞ்சாப் முதல்வர் நம்பிக்கையாக உள்ளார்.


Click it and Unblock the Notifications








