டொனால்டு டிரம்ப்பின் ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க முயற்சிக்கும் இந்திய நகைக்கடை உரிமையாளர்... யார்னு தெரியுமா?
டொனால்டு டிரம்ப் பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் காரை ஏலத்தில் எடுப்பதற்கான முயற்சிகளில், பாபி செம்மனூர் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கேரளாவை சேர்ந்த தொழில் அதிபரான பாபி செம்மனூரை பற்றி யாருக்கும் பெரிதாக அறிமுகம் தேவையில்லை. நகைக்கடை உரிமையாளர் உள்பட இவருக்கு பல்வேறு முகங்கள் உள்ளன. சமீபத்தில் மறைந்த கால்பந்து ஜாம்பவான் மரடோனாவை, தனது நடை கடை திறப்பு விழாவிற்கு இவர் கேரளாவிற்கு அழைத்து வந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

பாபி செம்மனூர் சமீபத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காரை வாங்கியது குறித்த செய்தியும் உங்களுக்கு நினைவிருக்கலாம். இதுதான் இந்தியாவின் முதல் சொகுசு எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ஆகும். இதுதவிர மிகவும் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை அவர் டாக்ஸியாகவும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் பாபி செம்மனூரின் பெயர் தற்போது செய்திகளில் மீண்டும் இடம்பெற தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் (தற்போது ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன) பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் (Rolls-Royce Phantom) காரை ஏலத்தில் எடுப்பதற்கான முயற்சிகளில் பாபி செம்மனூர் ஈடுபட்டிருப்பதுதான் அதற்கு காரணம்.

இந்த தகவலை பாபி செம்மனூரே உறுதி செய்துள்ளார். இதுகுறித்து பாபி செம்மனூர் கூறுகையில், ''ஆம், நாங்கள் ஏலத்தில் கலந்து கொள்ள போகிறோம். ஏலத்தில் பங்கேற்பதற்கான முயற்சிகளை எங்களது டெக்ஸாஸ் அலுவலகம் ஏற்கனவே எடுத்துள்ளது'' என்றார். அமெரிக்காவை சேர்ந்த மீகம் ஆக்ஸன்ஸ் (Mecum Auctions) நிறுவனம் காரை ஏலத்தில் விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டொனால்டு டிரம்ப் பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் காரில் ஏராளமான சொகுசு வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதில், தியேட்டர் பேக்கேஜ், ஸ்டார்லைட் ஹெட்லைனர் மற்றும் எலெக்ட்ரானிக் கர்டெயின்ஸ் ஆகியவை முக்கியமானவை. இந்த கார் ஒட்டுமொத்தமாக 91,249 கிலோ மீட்டர்கள் பயணம் செய்துள்ளது.

டொனால்டு ட்ரம்ப் பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் கார் 2010ம் ஆண்டு மாடல் ஆகும். இந்த ஏலத்தில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக பாபி செம்மனூர் தெரிவித்துள்ளார். காரின் விலை என்னவாக இருக்கும்? என்று கேட்டதற்கு, ''அடிப்படை விலை 3 கோடி ரூபாயாக இருக்கலாம் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

ஆனால் ஏலம் எப்படி செல்லும்? என்பது எனக்கு தெரியவில்லை. உலகம் முழுக்க கார் காதலர்கள் பலர் உள்ளனர். எனவே எப்படிப்பட்ட முடிவு கிடைக்கும்? என்பது தெரியவில்லை. ஆனால் நான் அதற்கு முயற்சி செய்ய வேண்டும்'' என்றார். பாபி செம்மனூர் ஏலத்தில் வெற்றி பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

கார் ஆர்வலர் என்பதுடன் மட்டுமல்லாது, கொடையுள்ளம் கொண்டவராகவும் பாபி செம்மனூர் அறியப்படுகிறார். ரத்த தானம் செய்வதில் இவருக்கு ஆர்வம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சமுதாயத்திற்கு பலன் அளிக்கும் வகையில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளிலும் அவர் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார்.


Click it and Unblock the Notifications








