நண்பனின் உயிரை காப்பாற ஜார்க்காண்ட் இளைஞரின் 24 மணிநேர போராட்டம்!! மிக அதிக தேவையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்!
ஜார்காண்ட் மாநிலத்தில் பொக்காரோ நகரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தனது நண்பருக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்குவதற்காக சுமார் 1,300கிமீ தூரத்தை வெறும் 24 மணிநேரங்களில் கடந்து மெய் சிலிர்க்க வைத்துள்ளார்.

நட்புக்கு இலக்கணமாக விளங்கியுள்ள இந்த இளைஞரின் பெயர் தேவேந்திர குமார் சர்மா. இவருக்கு கடந்த 24ஆம் தேதி அவரது நண்பர் சஞ்சய் சக்ஸேனா என்பவரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது.

அப்போது சஞ்சய் சக்ஸெனா, கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களது மற்றொரு நண்பர் ராஜனுக்கு உடனடி ஆக்ஸிஜன் தேவை ஏற்பட்டுள்ளதாக தேவேந்திர குமார் ஷர்மாவிடம் தெரிவித்துள்ளார். ராஜன் உத்திர பிரதேசம் மாநிலம், காஸியாபாத்தில் உள்ளார்.

டெல்லி-என்சிஆர் பகுதியில் மருத்துவ ஆக்ஸிஜன் வாயுவிற்கான தேவை அதிகமாக உள்ள நிலையில் ராஜனுக்கு கொடுக்கப்பட்டு வரும் ஆக்ஸிஜன் இன்னும் 24 மணிநேரத்திற்கு மட்டுமே கிடைக்கும் எனவும் அந்த தொலைப்பேசி அழைப்பில் சக்ஸேனா கூறியுள்ளார்.

இதனால் ராஜனின் குடும்பத்தார் கடந்த சில நாட்களாக ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொள்முதல் செய்ய படாத பாடுப்பட்டு வருகின்றனர். ராஜன் குடும்பத்தார் மட்டுமில்லை, வட இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்களின் தற்போதைய நிலை இவ்வாறு தான் உள்ளது.

சஞ்சய் சக்ஸேனா கூறியதை கேட்ட பிறகு தேவேந்திர குமார் சிறிதும் தாமதிக்கவில்லை. நள்ளிரவு என்று கூட பார்க்காமல் தனது மோட்டார்சைக்கிளில் பயணத்தை துவங்கிவிட்டார். கிட்டத்தட்ட 150கிமீ தூரம் பயணம் செய்து பொக்காரா நகரத்திற்கு வந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விநியோகிப்பவர்களை தேடி அலைந்துள்ளார்.

ஒருவழியாக ஜார்காண்ட் எரிவாயு தொழிற்சாலையின் உரிமையாளரின் தொலைப்பேசி எண் கிடைத்துள்ளது. இந்த இடத்தில் அந்த எரிவாயு தொழிற்சாலையின் உரிமையாளர் பெயரை பதிவு செய்தே ஆக வேண்டும், அவரது பெயர் ராக்கேஷ் குமார் குப்தா.

ஏனெனில் இவர் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு எந்தவொரு பணத்தையும் வாங்கவில்லை. அந்த பணத்தை வைத்து உங்களது நண்பரை கவனியுங்கள் என அறிவுரை கூறி தேவேந்திர குமாரை அனுப்பி வைத்துள்ளார்.

இருப்பினும் தேவேந்திர குமாருக்கு இன்னும் சவால்கள் இருந்தன. ராஜன் இருக்கும் காஸியாபாத் பொக்காரோவில் இருந்து சுமார் 1,300 கிமீ தொலைவில் உள்ளது. இந்த பயணத்திற்கு கார் ஒன்றை வாடகை எடுத்த அவர் இந்த பயணத்திற்கு எப்படியும் 24 மணிநேரங்களுக்குள் சென்றடைந்துவிட வேண்டும் என உறுதியாக இருந்துள்ளார்.

திட்டமிட்டப்படி கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி பொக்காரோவில் இருந்து பயணத்தை துவங்கியவர் அடுத்த நாளே தனது நண்பர் இருக்கும் இடத்தை சென்றடைந்துள்ளார். ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஏற்றி சென்றதால் வழியில் பல இடங்களில் போலீஸார் காரை நிறுத்தி விசாரித்துள்ளனர்.

தேவேந்திர குமாரின் காரணம் ஏற்கத்தக்கதாக இருந்ததால் அவரை தொடர்ந்து பயணிக்க அனுமதித்துள்ளனர். சரியான நேரத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொண்டு சென்று சேர்த்தாலும் தேவேந்திர குமாரும் அவரது நண்பர்களும் கவலையில் தான் உள்ளனர். ஏனெனில் சில வாரங்களுக்கு முன்பு தான் இவர்கள் மற்றொரு நண்பரை கொரோனாவினால் இழந்துள்ளனர்.
Note: Images are representative purpose.


Click it and Unblock the Notifications








