பிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்
பிரபல நடிகை செய்த காரியத்தால், அவரது ஊழியர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக புதிய கார்களின் விற்பனை ஒரு கட்டத்தில் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. ஆனால் கார்களின் விற்பனை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்களை ஆட்டோமொபைல் துறை சார்ந்த வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பேருந்து, ஆட்டோ, டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகனங்களை மக்கள் தவிர்க்க தொடங்கியிருப்பதுதான் இதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. பொது போக்குவரத்திற்கு பதிலாக சொந்த வாகனங்களில் பயணம் செய்வதை மக்கள் பாதுகாப்பானதாக கருதுகின்றனர்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இதன் காரணமாக புதிய கார்களின் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுதவிர தற்போதைய பண்டிகை காலமும் கார்களின் விற்பனை உயர்விற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. தசராவை முன்னிட்டு பலர் தற்போது புதிய கார்களை வாங்கியுள்ளனர். இதில், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டசும் (Jacqueline Fernandez) ஒருவர்.

ஆனால் ஜாக்குலின் பெர்ணாண்டஸ் தனக்காக புதிய காரை வாங்கவில்லை. தனது ஊழியர்களில் ஒருவருக்கு பரிசாக வழங்குவதற்காகவே அவர் இந்த காரை வாங்கியுள்ளார். மும்பையில் வைத்து அந்த காரின் சாவியை ஜாக்குலின் பெர்ணாண்டஸ் தன்னுடைய ஊழியரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. அப்போது தேங்காய் உடைத்து பூஜையும் நடைபெற்றுள்ளது.

அந்த காணொளி சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. போக்குவரத்து காவலர்களின் உடையை அணிந்து கொண்டு, ஜாக்குலின் பெர்ணாண்டஸ் இந்த பூஜையில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவரது ஊழியர்களில் ஒருவர், தேங்காய் உடைப்பதற்காக சற்று நகர்ந்து நிற்கும்படி ஜாக்குலின் பெர்ணாண்டஸை கேட்டு கொண்டார்.

இதன்பேரில் அவர் நகர்ந்து நின்றதும், புதிய காருக்கு முன்பாக சாலையில் அவரின் ஊழியர் தேங்காயை உடைத்தார். முதல் அடியிலேயே தேங்காய் உடைந்து சிதறிய நிலையில், சுற்றியிருந்தவர்கள் ஆரவார குரல் எழுப்பியுள்ளனர். ஜாக்குலின் பெர்ணாண்டஸ் பாலிவுட் திரையுலகில் அறிமுகம் ஆனதில் இருந்தே, காரை பரிசாக பெற்ற ஊழியர் அவருடன் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

எனவே தசராவை முன்னிட்டு அவருக்கு ஜாக்குலின் பெர்ணாண்டஸ் சர்ப்ரைஸான முறையில் இந்த காரை பரிசளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜாக்குலின் பெர்ணாண்டஸ் போக்குவரத்து காவலர்களின் சீருடையில் இருப்பதை பார்க்கையில், அவர் தனது திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வைத்து, ஊழியருக்கு இந்த காரை பரிசளித்திருக்கலாம் என தெரிகிறது.

ஆனால் ஜாக்குலின் பெர்ணாண்டஸ் தனது ஊழியர்களுக்கு காரை பரிசளிப்பது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பாக தனது ஒப்பனை கலைஞருக்கும் அவர் காரை பரிசாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தசராவை முன்னிட்டு அவர் இம்முறை தனது ஊழியருக்கு பரிசாக வழங்கியிருப்பது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை போல் தெரிகிறது.

இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எம்பிவி ரக கார் ஆகும். டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் ஆரம்ப விலை 15.66 லட்ச ரூபாய். அதே சமயம் இந்த காரின் டாப் வேரியண்ட் 24.67 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனையாகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் இந்த காரின் எந்த வேரியண்ட்டை ஜாக்குலின் பெர்ணாண்டஸ் தனது ஊழியருக்கு பரிசளித்துள்ளார் என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications








