நோ பார்க்கிங் ரூ. 10 ஆயிரம்... வசூல் வேட்டையை தொடங்கிய போலீஸார்: அதிரடி நடவடிக்கை...!
நோ பார்க்கிங்கிற்கு ரூ. 10 ஆயிரம் விதிக்கும் புதிய விதியைப் போலீஸார் தொடங்கியுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

நாட்டில் உள்ள அனைத்து மாநில போலீஸாரும், அண்மைக் காலமாக வாகன ஓட்டிகளுக்கு எதிராக மிகப்பெரிய போரைத் தொடுத்து வருகின்றனர். அந்தவகையில், முறைகேட்டில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகின்றது.
அதுமட்டுமின்றி, போக்குவரத்து விதிமீறல்களைத் தவிர்க்கவும், வாகனங்கள் சார்ந்து நடைபெறும் விபத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் தீர்வு காணும் வகையிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், அண்மையில்கூட மத்திய அரசு, நாட்டில் தினந்தோறும் அதிகரித்தவாறே, அரங்கேறி வரும் போக்குவரத்து விதிமீறல்களைத் தவிர்க்கும் வகையில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
அந்த அறிவிப்பில், முன்னதாக விதிக்கப்பட்டு வந்த போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத்தை 10 மடங்கு உயர்த்துவதாக தெரிவித்திருந்தது.

அதேசமயம், இந்தியாவில் உள்ள சில மாநிலங்களும் போக்குவரத்து விதிமீறல்களைத் தவிர்க்கும் விதமாக சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
அந்தவகையில், போக்குவரத்து நெரிசலுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கும், முறையற்ற வாகன நிறுத்தத்தை (நோ பார்க்கிங்) தவிர்க்கும் வகையில், மும்பை நகர போலீஸார் ஓர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக் காலங்களாக மும்பை நகரம் அதிகளவு போக்குவரத்து நெரிசலைச் சந்தித்து வருகின்றது. இதற்கு முக்கியமாக காரணமாக, நோ பார்க்கிங் இருக்கின்றது. ஆகையால், மும்பை நகரப் பகுதியில் நோ பார்க்கிங்கில் விடப்படும் வாகனங்களுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்க மும்பை மாநகராட்சி முடிவு செய்தது. இந்த அதிரடி திட்டம் கடந்த 7ம் தேதி முதல் நடமுறைக்கு வந்துள்ளது.

இத்திட்டத்தின்படி, மும்பை நகர போலீஸார், நோ பார்க்கிங்கில் வாகனங்களை விட்டுச் செல்லும் வாகனத்தின் உரிமையாளர்களுக்கு ரூ. 10 அபராதம் விதிக்கும் பணியைத் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை ரஷ்லேன் ஆங்கில செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

நோ பார்க்கிங் வாகனங்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தின் மூலம், அதன் முதல் நாளிலேயே ரூ. 1.18 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. அவ்வாறு, 80க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மும்பை நகரப் பகுதியில் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், 146 பொது வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன. அவை, 34 ஆயிரத்து 808 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துகின்ற அளவிற்கு இடத்தைப் பெற்றுள்ளன. இருப்பினும், மும்பை நகர வாசிகள் பலர், அவர்களது வாகனங்களை சாலையின் ஓரத்திலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

ஆகையால், மும்பை நகரப் போக்குவரத்து போலீஸார், பார்க்கிங் வசதி 500 மீட்டருக்கு அருகில் இருந்தும், சாலையில் வாகனங்களை விட்டுச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக இந்த நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். அவ்வாறு, நான்க சக்கர வாகனங்களுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதமும், இரு சக்கர வாகனங்களுக்கு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 8 ஆயிரம் வரையும் அபராதம் விதித்து வருகின்றனர்.

அதேசமயம், இத்திட்டம் நடைமுறைக்கு முதல்நாளிலேயே 63 கார்கள், 14 இருசக்கர வாகனங்கள், 3 ஆட்டோக்கள் ஆகிய வாகனங்கள் மீது வழக்கு பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், அதிகபட்மாக மும்பையின் கலினா பகுதியிலேயே அதிகபட்சமான வாகனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

மும்பை போலீஸாரின் இந்த அதிரடி நடவடிக்கை போக்குவரத்து நெரிசலையும், முறையற்ற வாகன நிறுத்தங்களையும் கணிசமாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேசமயம், இந்த புதிய திட்டத்தினால், முறைகேட்டில் ஈடுபட்டு வரும் வாகன ஓட்டிகள் தற்போது அச்சத்தில் உரைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








