பிபிசிஎல் செய்ய இருக்கும் தரமான சம்பவம்! மின்வாகன சார்ஜிங் மையங்களாக மாற இருக்கும் 1,000 பெட்ரோல் நிலையங்கள்!
பிபிசிஎல் (Bharat Petroleum Corporation Limited) அதன் ஆயிரம் பெட்ரோல் விற்பனையகங்களை மின்வாகன சார்ஜிங் மையங்களாக மாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான மிக பெரிய ஆயில் உற்பத்தி நிறுவனங்களில் பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் (Bharat Petroleum Corporation Limited)-ம் ஒன்று. இந்த நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது.

அந்த அறிவிப்பில் நாடு முழுவதும் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் அமைக்க இருப்பதாக அறிவித்திருந்தது. ஒட்டுமொத்தமாக 7,000 மையங்கள் அமைக்கப் போவதகாவும் அது தெரிவித்தது. இந்த வாக்குறுதியை உறுதிப்படுத்தும் வகையில் பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் தற்போது செயல்பட தொடங்கியிருக்கின்றது.

நிறுவனம் நடப்பாண்டிலேயே ஆயிரம் மின் வாகன சார்ஜிங் மையங்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருப்பதாக தற்போது அறிவித்துள்ளது. இவை அனைத்தும் 2022 அக்டோபர் மாதத்திற்குள்ளேயே செயல்பட தொடங்கிவிடும் என்றும் அது கூறியிருக்கின்றது.

பிபிசிஎல் ஐந்தாண்டுகளுக்கு உள்ளாக 7,000 சார்ஜிங் மையங்களைக் கொண்டு வர இருப்பதாக அறிவித்திருந்த நிலையில், இவற்றில் ஆயிரம் சார்ஜிங் மையங்களை முதல் (ஆரம்ப) கட்டமாக நாட்டில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருக்கின்றது. முக்கிய நகரங்களை மையப்படுத்தி பிபிசிஎல்-இன் மின் வாகன சார்ஜிங் மையங்கள் கட்டமைக்கப்பட இருக்கின்றன.

மேலும், அவை பிபிசிஎல்-க்கு சொந்தமான பெட்ரோல் நிலையங்களிலேயே உருவாக்கப்பட இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகையால், அடுத்த பத்து மாதங்களில் பாரத் பெட்ரோல் நிலையங்களில் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களைப் பார்க்க முடியும் என்பது தெரிகின்றது.

ஏற்கனவே நாட்டில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இதனை இன்னும் பல மடங்கு அதிகரிக்கச் செய்யும் முயற்சியாகவே பாரத் பெட்ரோலியம் தற்போது மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியிருக்கின்றது.

தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மிகவும் குறைவாகவே தென்படுகின்றன. இதன் காரணத்தினாலேயே பலர் மின் வாகனங்களை வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். ஏன், சில முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள்கூட இந்த காரணத்தினாலேயே இன்னும் ஒற்றை எலெக்ட்ரிக் வாகனத்தை கூட இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யாமல் இருக்கின்றன.

இந்த மாதிரியான பிற்போக்கான நிலையை மின் வாகன சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு களையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவேதான் மத்திய, மாநில அரசுகள் தொடங்கி சில முன்னணி நிறுவனங்கள் நாட்டில் மின் வாகனங்களுக்கான அடிப்படை வசதிகளை உருவாக்கிக் கொடுக்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றன.

மின் வாகன சார்ஜிங் மையம் உருவாக்கம் குறித்து பிபிசிஎல்-இன் தலைவர் அருண் குமார் சிங் கூறியதாவது, "நிறுவனம் தனது நாடு தழுவிய எரிபொருள் நிலையங்களின் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி, சுமார் 7000 எனர்ஜி ஸ்டேஷன்களாக மாற்றப்பட இருக்கின்றது. இந்த மாற்றத்தின் வாயிலாக பெட்ரோல், டீசல், ஃப்ளெக்ஸி எரிபொருள்கள் போன்ற பல எரிபொருள் விருப்பங்களை வழங்க இருக்கின்றோம்" என்றார்.

ஆகையால், மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் மட்டுமின்றி சிஎன்ஜி மற்றும் ஹைட்ரஜன் போன்றவையும் புதிய மையங்களின் வாயிலாக பயன்பாட்டிற்குக் கிடைக்கும் என்பது தெரிய வருகின்றது. தற்போது பிபிசிஎல்-இன் கீழ் நாடு முழுவதும் 19 ஆயிரத்திற்கும் அதிகமான சில்லறை விற்பனையகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இன்னும் சில வருடங்களில் இவற்றில் 7 ஆயிரம் விற்பனையகங்கள் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையமாகவும் மாற இருக்கின்றன. இந்த விற்பனையகங்கள் பெட்ரோல் பங்க் என்ற பெயருக்கு பதிலாக எனெர்ஜி நிலையங்கள் என்றழைக்கப்பட இருக்கின்றன. தற்போது பிபிசிஎல் 44 மின்வாகன சார்ஜிங் மையங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தகுந்தது.

பிபிசிஎல் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1,000 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்துறையை உருவாக்குவதற்கும் திட்டமிட்டுள்ளது. ரூ. 5,000 கோடி முதலீட்டில் இந்த பணியை அது மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. நிறுவனம் தற்போது 45 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை உருவாக்கி வருகின்றது. இத்துடன், ரூ. 7 ஆயிரம் கோடி முதலீட்டில் உயிரி எரிபொருள் உற்பத்தியையும் பிபிசிஎல் மேற்கொள்ள இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








