பிபிசிஎல்-இன் இபிஏ கிரேட் டீசல் இந்தியாவில் அறிமுகம்.. இனி வெளிநாட்டை எதிர்பார்க்க தேவையில்லை!
இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் பெட்ரோல், டீசல் வாகனங்களே பயன்பாட்டில்லா இல்லா நிலையை உருவாக்கும் முயற்சியில் உலக நாடுகள் பல களமிறங்கி இருக்கின்றன. அதில் இந்தியாவும் அடங்கும்.
இதன் அடிப்படையிலேயே இந்திய அரசாங்கம் எலெக்ட்ரிக் வாகனங்களையும், ஹைபிரிட் வாகனங்களையும் ஊக்குவிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கென தனித் திட்டங்களைகூட அது அறிமுகம் செய்திருக்கின்றது. ஃபேம்-2 (Faster Adoption and Manufacturing of (Hybrid &) Electric Vehicles) திட்டத்தையே அரசாங்கம் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது.

இத்துடன் சிஎன்ஜி போன்ற மாற்று சக்தியில் இயங்கக் கூடிய வாகனங்களையும் இந்தியா ஊக்குவித்துக் கொண்டு இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே நாட்டின் முன்னணி ஆயில் உற்பத்தி நிறுவனமான பிபிசிஎல் (பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) இந்தியாவில் புதிய கிரேட் டீசலை அறிமுகப்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அது இபிஏ கிரேட் (EPA Grade) டீசலையே அறிமுகம் செய்து இருக்கின்றது. இந்தியாவின் எரிசக்தி துறையை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த தர டீசலை பிபிசிஎல் நாட்டில் அறிமுகம் செய்திருக்கின்றது. இதனை பிபிசிஎல்-இன் எம்டி-ஆன கிருஷ்ணகுமார், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தலைமையில் வெளியீடு செய்தார்.

இந்த இபிஏ கிரேட் டீசல் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனை கோவாவில் நடைபெற்ற இந்தியா எனெர்ஜி வீக் (India Energy Week)-லேயே பிபிசிஎல் வெளியீடு செய்தது. கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள ஆயில் சுத்திகரிப்பு மையத்தில் வைத்தே இபிஏ கிரேடு டீசல் தயாரிக்கப்பட்டு இருக்கின்றது.
வழக்கமாக ஜெர்மன் நாட்டில் இருந்தே பிரீமியம் ஆயில்கள் இறக்குமதி செய்யப்படும். ஆனால், இப்போது இது தவிர்க்கப்பட்டு இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும் பணிகள் தொடங்கி இருக்கின்றன. இபிஏ கிரேடு என்பது டீசல் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாறி இருப்பதன் வெளிப்பாடாகும். பெட்ரோலைக் காட்டிலும் மிக அதிக மாசை ஏற்படுத்தக் கூடியதே டீசல்.

இந்த நிலையையே மாற்றி இருக்கின்றது பிபிசிஎல். அதாவது, மிகப் பெரிய அளவில் இல்லாமல் லேசாக மட்டுமே இது மாசை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் சல்ஃபர் குறைந்த டீசலே இதுவாகும். இதனால், இதற்கு அல்ட்ரா லோவ் சல்ஃபர் டீசல் என்கிற மறு பெயரும் உண்டு.
இத்தகைய டீசலையே தற்போது பாரத் பெட்ரோலியம் கொச்சி சுத்திகரிப்பு நிலையத்தில் வைத்து தயாரிக்கத் தொடங்கி இருக்கின்றது. இந்த ஆயில் கடுமையான மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்டே தயாரிக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இந்தியாவின் தேவையை மட்டுமின்றி உலக நாடுகளின் தேவையையும் இது பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், இந்தியாவிலேயே டீசல் தயாரிப்பு தொடங்கப்பட்டு இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து செய்யப்படும் இறக்குமதி பெருமளவில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வாயிலாக அந்நிய செலாவணியும் பெருமளவில் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நோக்கத்திற்காகவே ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனங்கள் இந்தியாவில் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் இந்தியாவை இந்த வகை வாகனங்களே ஆள இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பெட்ரோல்,டீசல் வாகனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், இந்தியர்கள் மத்தியில் இந்த வாகனங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு சற்றுக் குறைந்ததாக தெரியவில்லை. அதேவேளையில், டீசல் வாகனங்களுக்கு இப்போதும் சிறப்பான டிமாண்டே நிலவுகின்றது. இத்தகையோருக்கு தற்போது பிபிசிஎல் அறிமுகம் செய்திருக்கும் இபிஏ தர டீசல் வரப்பிரசாதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இன்னும் சில தசாப்தங்களுக்கு டீசல் வாகனங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் இந்த ஆயில் உதவியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









