என்ன ஆச்சுனு அண்ணாந்து பாத்த ஓனருக்கு அதிர்ச்சி! வாங்கிய ஒரே வாரத்தில் சின்னாபின்னமான 90 லட்ச ரூபா கார்!
சொந்தமாக ஒரு புதிய காரை வாங்க வேண்டும் என்பது பலருக்கும் கனவு. குறிப்பாக ஆடி (Audi), மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) மற்றும் பிஎம்டபிள்யூ (BMW) போன்ற ஜெர்மனி நிறுவனங்களின் சொகுசு கார்களை வாங்க வேண்டும் என்பதை பலரும் வாழ்நாள் லட்சியமாக வைத்துள்ளனர். இந்த லட்சியத்தை அடைவதற்காக அவர்கள் கடின உழைப்பையும் வெளிப்படுத்துகின்றனர். அப்படி கடின உழைப்பின் மூலம் வாங்கப்பட்ட விலை உயர்ந்த கார், யாரோ ஒருவருடைய அலட்சியத்தால் சேதம் அடைந்தால் எப்படி இருக்கும்? கண்டிப்பாக இது மன வருத்தத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயம்தான் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
இப்படிப்பட்ட ஒரு மோசமான அனுபவம், உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா (Greater Noida) பகுதியை சேர்ந்த, பிஎம்டபிள்யூ கார் உரிமையாளர் ஒருவருக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை பற்றிய விரிவான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புத்தம் புதிய பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் (BMW 3-Series) கார் ஒன்றை வாங்கினார். இதன் மதிப்பு சுமார் 90 லட்ச ரூபாய் ஆகும். இவ்வளவு விலை உயர்ந்த காரை தான் குடியிருக்கும் அப்பார்ட்மெண்ட்டில் அவர் நிறுத்தியிருந்தார்.
அப்போது அங்கு இருந்த ஒரு கட்டிடத்தின் பிளாஸ்டர் (Plaster) இடிந்து விழுந்ததில், கீழே நிறுத்தப்பட்டிருந்த புத்தம் புதிய பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் காரின் மேற்கூரை முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. இது பனரோமிக் சன்ரூஃப் (Panoramic Sunroof) வசதி கொண்ட ஒரு கார் ஆகும்.

உயரமான இடத்தில் இருந்து பிளாஸ்டர் விழுந்த காரணத்தால், காரின் மேற்கூரையில் இருந்த பனரோமிக் சன்ரூஃப் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. திடீரென பயங்கர சத்தம் கேட்டதால், இந்த காரின் உரிமையாளர் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது மேலே பார்த்ததில், பிளாஸ்டர் கீழே விழுந்து, கார் சேதமடைந்தது தெரிந்ததும் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
எனவே உடனடியாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த அப்பார்ட்மெண்ட்டில் உள்ள கட்டிடங்களின் தரம் மோசமான நிலையில் இருப்பதாக, அங்கு வசிப்பவர்கள் காவல் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். எனவே உடனடியாக பழுது பார்க்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.
இதை எல்லாம் கேட்டு கொண்ட காவல் துறை அதிகாரிகள், அந்த கட்டிடத்தை கட்டிய நிறுவனத்திடம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சேதம் அடைந்த பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் காருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கட்டிடத்தை கட்டிய நிறுவனத்திடம் அவர்கள் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிர்ஷ்டசமாக இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் நடைபெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் பல்வேறு கனவுகளுடன் வாங்கப்பட்ட புத்தம் புதிய பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் காரின் மேற்கூரை மோசமான வகையில் சேதம் அடைந்திருப்பது மிகவும் வருத்தமான ஒரு விஷயம்தான்.
ஒரு வேளை கட்டிடத்தை கட்டிய நிறுவனம் இந்த காரின் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கலாம். அல்லது இன்சூரன்ஸ் மூலமாக கூட, அவருக்கு நிவாரணம் கிடைக்கலாம். ஆனால் இது கண்டிப்பாக ஒருவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்த கூடிய விஷயம் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
மக்கள் தொகை பெருகி வருவதால், தற்போது பெரு நகரங்களில் அவசர கதியில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இதில் ஒரு சில அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான தரம் மோசமான வகையில் இருப்பதாக புகார்கள் உள்ளன. எனவே கட்டிடங்களை கட்டும் நிறுவனங்கள் தரத்திற்கு முக்கியத்துவம் வழங்குவது அவசியம் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








