இந்தியாவிற்கு உதவி கரம் நீட்டும் பிரேசில்.. இது மட்டும் நடந்தா நாட்டுல பெட்ரோல், டீசலுக்கான தேவையே இருக்காது!
இந்தியா பெட்ரோல், டீசலுக்கான மாற்று எரிபொருளை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அதாவது, பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக மின்சாரம், சிஎன்ஜி மற்றும் ஹைட்ரஜன் போன்ற மற்று எரிபொருள் மற்றும் திறனில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பணிகளையே இந்தியா மேற்கொண்டு வருகின்றது.
அந்தவகையில், நாட்டில் எத்தனாலால் இயங்கும் வாகனங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சிகளும் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே பிரேசில் தன்னுடைய உதவி கரத்தை இந்த விஷயத்தில் இந்தியாவிற்கு நீட்ட முன் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, இந்தியாவிற்கு எத்தனாலை உற்பத்தி செய்யும் விஷயத்தில் உதவி செய்ய பிரேசில் அரசாங்கம் முன் வந்திருக்கின்றது.

மேலும், ஃப்ளெக்ஸ் ஃப்யூவலை தயாரிப்பதற்கான தொழில்நுட்ப உதவிகளையும் அது வழங்க இருக்கின்றது. இந்தியாவில் தற்போது இ10 வகை பெட்ரோலே பயன்பாட்டில் இருக்கின்றது. அதாவது, 10 சதவீதம் எத்தனால் 90 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலே பயன்பாட்டில் இருக்கின்றது. இது இ10 ரக பெட்ரோல் என அழைக்கப்படுகின்றது.
இதைத் தொடர்ந்து வெகு விரைவில் இ 20 ரக பெட்ரோல் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டு இருக்கின்றது. இதுமட்டும் இல்லைங்க, ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் எனப்படும் முழுமையாக எத்தனாலில் ஓடக் கூடிய வாகனங்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சிகளும் நம் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையிலேயே, இந்தியாவின் இந்த இலக்கிற்கு பிரேசில் உதவ இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எத்தனால் தயாரிப்பில் முக்கிய பங்கினை கரும்பு வகிக்கின்றது. இந்த கரும்பை தயாரிப்பதில் உலகின் முன்னணி நாடாக பிரேசில் இருக்கின்றது. அதுமட்டுமில்லைங்க, எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப விஷயத்திலும் இந்த நாடு முன்னணியில் இருக்கின்றது.
இதுதவிர, உலகின் மிகப் பெரிய சர்க்கரை ஏற்றுமதியாளராகவும் பிரேசில் இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கின்றது. அதாவது, சர்க்கரை ஏற்றுமதியில் பிரேசிலுக்கு போட்டியாக இந்தியாவே இருக்கின்றது. இந்த நிலையிலேயே இந்தியாவிற்கு எஞ்சிய சர்க்கரை வாயிலாக எத்தனாலை தயாரிக்கும் நுட்பத்தையும், தொழில்நுட்ப உதவிகளையும் வழங்க பிரேசில் முன் வந்திருக்கின்றது.
பிரேசிலின் இந்த திட்டத்திற்கு பின்னால் ஓர் சதி இருக்கின்றது என்றுகூட கூறலாம். எஞ்சிய சர்க்கரையை வைத்து இந்தியா எத்தனாலை தயாரிக்கும்பட்சத்தில், ஏற்றுமதியில் அது பின் தங்க நேரிடும். இந்த சூழலை பயன்படுத்தி எப்போதும் உலகின் முதல் மற்றும் சர்க்கரை ஏற்றுமதியாளர் என்கிற அந்தஸ்தை பிரேசில் தக்க வைத்துக் கொள்ளும்.
அதேநேரத்தில், கூடுதல் தேவையை பொருத்து இந்தியாவில் கரும்பு பயிருடுதல் அதிகப்படுத்தப்படும் எனில் சர்க்கரை ஏற்றுமதியில் இப்போது இருப்பதைப் போலவே பின்னாளிலும் பிரேசிலுக்கு மிக சிறந்த போட்டியாளனாக இருக்கும். இதுதவிர, இந்தியா எத்தனால் உற்பத்தியில் சிறந்த விளங்கத் தொடங்கும்பட்சத்தில் கச்சா எண்ணெய் தேவை தானாக குறையத் தொடங்கும்.
இதனால், பெரும் அளவிலான அந்நிய செலாவனி நாட்டிற்குக் குறையும். தற்போது வரை இந்தியா பெட்ரோல் மற்றும் டீசலுக்காக உலக நாடுகளையே நம்பி இருக்கின்றது. ஆகையால், சர்வதேச சந்தையைப் பொருட்டு தினந்தோறும் அவற்றின் விலை ஏற்றம்-இறக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பிரேசிலில் பயன்படுத்தப்படும் நெகிழ்வு தொழில்நுட்பம், இந்தியாவிலும் கையாளப்பட்டு சர்க்கரையில் இருந்து எத்தனால் அதிக அளவில் தயாரிக்கப்படும் எனில் இந்தியாவின் எரிபொருள் சிக்கல் தானாக சரி செய்யப்படும் என நம்பப்படுகின்றது.
2025ம் ஆண்டிற்குள் இந்தியா இ20 வகை பெட்ரோல் பயன்பாட்டிற்கு மாற இலக்கு நிர்ணயித்துள்ளது. அதேவேளையில், பிரேசில் இப்போதே இந்த விஷயத்தில் முன்னணியில் உள்ளது. அங்கு 25 சதவீதம் எத்தனால், 75 சதவீதம் பெட்ரோல் கலக்கப்பட்ட எரிபொருள் பயன்பாட்டில் உள்ளது. விரைவில் அடுத்த நிலைகளை எட்ட அந்நாடு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையிலேயே இந்தியாவிற்கு உதவிக் கரம் நீட்ட அது முன் வந்து உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்னும் இந்தியாவில் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இப்போது இந்த பணிகள் ஆரம்ப நிலையில் உள்ளன. அதேவேளையில், டொயோட்டா மற்றும் ஹோண்டா டூ-வீலர் போன்ற முன்னணி நிறுவனங்கள் ஃப்ளெக்ஸ் ஃப்யூவலில் இயங்கும் வாகனங்களை உற்பத்தி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆகையால், வெகு விரைவில் மின்சார வாகனங்களை போல இவையும் இந்த உலகத்தை ஆளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








