ஆற்றுத் தண்ணீரிலும் ஓடும் மோட்டார்சைக்கிள்... பிரேசில் ஆய்வாளரின் கண்டுபிடிப்பு
வாகனப் பெருக்கம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் நிலையில், அதற்கான எரிபொருள் தேவை என்பது மிகப்பெரிய சவாலான காரியமாக இருக்கிறது.
மரபு சார் எரிபொருள்களின் நச்சுத்தன்மையும், தட்டுப்பாடும் பெருகி வருவதால், மாற்று எரிபொருள் நுட்பத்திலான வாகனங்களை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடக்கின்றன.
அதிலும், எளிதாகவும், மலிவான எரிபொருளில் வாகனங்களை இயக்குவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தநிலையில், பிரேசில் நாட்டை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தண்ணீரில் ஓடும் பைக் ஒன்றை கண்டுபிடித்து அசத்தியிருக்கிறார்.
பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ நகரை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ரிக்கார்டோ ஆஸ்வெடோ. புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் அலாதி பிரியம் கொண்டவர். அவ்வாறு அவர் உருவாக்கியிருக்கும் மோட்டார்சைக்கிள் இப்போது உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

மாறுதல்கள்
பெட்ரோலில் இயங்கும் பைக்கின் எஞ்சினில் சில மாறுதல்களை செய்து தண்ணீரில் ஓடும் விதத்தில் ஒரு பைக்கை மாற்றியுள்ளார் ரிக்கார்டோ. மேலும், பொதுமக்கள் முன்னிலையில் அந்த பைக்கை சோதனை செய்து காட்டி அசத்தினார்.

பெயர்
தான் கண்டுபிடித்த பைக்கிற்கு 'டி பவர் எச்20' என்று பெயர் சூட்டியிருக்கிறார். மேலும், இந்த பைக்கின் தொழில்நுட்பத்தையும் விளக்கினார்.

தொழில்நுட்பம்
சோதனை செய்யப்பட்ட பைக்கில் கார் பேட்டரி ஒன்றை பொருத்தியிருக்கிறார். அதிலிருந்து எரிபொருள் டேங்க்கில் இருக்கும் தண்ணீருக்குள் மின்சாரம் பாய்ச்சப்படுகிறது. அப்போது உருவாகும் நீரிய சக்தியின் மூலம் எஞ்சின் இயக்கப்படுகிறது என்று விளக்கம் தெரிவிக்கிறார்.

மைலேஜ்
சோதனையின்போது ஒரு லிட்டர் தண்ணீரில் 490 கிமீ தூரம் வரை அந்த பைக் சென்றது. இது அவருக்கு உற்சாகத்தை தந்துள்ளது.

அசுத்த நீர்
இந்த பைக்கில் அசுத்தமான தண்ணீரை கூட பயன்படுத்தி இயக்க முடியும் என்பதை சோதனையின்போது நிரூபித்தார். அதாவது, சாலையோரம் இருந்த ஆற்று நீரை எடுத்து டேங்கில் ஊற்றி பைக்கை செலுத்தினார். இதனால், பிரத்யேக எரிபொருள் தயாரிப்பு முறை எதுவும் தேவையில்லை என்கிறார் ரிக்கார்டோ.

சுற்றுச்சூழல் நண்பன்
ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்கள் போன்றே இந்த பைக்கும் நீராவியை மட்டுமே கழிவாக வெளியேற்றும். பெட்ரோல், டீசல் வாகனங்கள் போன்று நச்சுத்தன்மையுள்ள வாயுவை வெளியேற்றாது என்பது மிகப்பெரிய ஆறுதல்.

தண்ணீர் எரிபொருள்
தண்ணீரில் இயங்கும் வாகன கண்டுபிடிப்புகள் உலகளாவிய அளவில் நடந்து வருகிறது. ஆனாலும், பிரத்யேக எரிபொருள் தயாரிப்பு நுட்பம் எதுவும் தேவையில்லை என்பதுடன், அசுத்தமடைந்த தண்ணீரை கூட எரிபொருளாக பயன்படுத்த முடியும் என்பதே இந்த பைக்கின் சிறப்பு என்கிறார் ரிக்கார்டோ.
இதே போன்ற ஒரு கண்டுபிடிப்பை சமீபத்தில் திருப்பூரை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரும் கண்டுபிடித்துள்ளார். அவரின் கண்டுபிடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.


Click it and Unblock the Notifications








