சொகுசு காரில் விதிமுறையை மீறியதால் டேவிட் பெக்காமிற்கு நேர்ந்த கதி இதுதான்... பாரபட்சமின்றி அதிரடி
சொகுசு காரில் விதிமுறையை மீறியதால் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில், முக்கியமானது செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டுவது. இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த பிரச்னை இருக்கவே செய்கிறது.

எனவே செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டுவதற்கு பல்வேறு நாடுகளும் தடை விதித்துள்ளன. இங்கிலாந்தை பொறுத்த வரை வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுவது சட்ட விரோதமானது. என்றாலும் ஹேண்ட்ஸ் ஃப்ரீ டிவைஸ்கள் அனுமதிக்கப்படுகின்றன.

அங்கு செல்போனில் பேசி கொண்டு வாகனம் ஓட்டினால், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டியின் லைசென்ஸில் 6 தண்டனை புள்ளிகள் சேர்க்கப்படும். அத்துடன் 200 யூரோ அபராதம் விதிக்கப்படும். குற்றத்தின் தீவிரத்தை பொறுத்து, வாகன ஓட்டியை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

அங்கு இன்னும் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். இந்த சூழலில் செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக பிரபல மனிதர் ஒருவருக்கு தற்போது இங்கிலாந்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தை கடந்து உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்கும் டேவிட் பெக்காம்தான் (David Beckham) அந்த பிரபலமான மனிதர். இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனான டேவிட் பெக்காமிற்கு உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதியன்று, டேவிட் பெக்காம் தனது பென்ட்லீ (Bentley) காரை ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது டேவிட் பெக்காம் செல்போனில் பேசி கொண்டே கார் ஓட்டுவதை மற்றொரு வாகன ஓட்டி ஒருவர் கவனித்தார்.

அத்துடன் டேவிட் பெக்காமின் செய்கையை அவர் உடனே புகைப்படமும் எடுத்து விட்டார். இந்த புகைப்படம் வைரலாக பரவியதை தொடர்ந்து டேவிட் பெக்காம் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தண்டனை விபரங்கள் நேற்று (மே 9) அறிவிக்கப்பட்டன.

இங்கிலாந்தின் ப்ரூம்லி நகரில் உள்ள மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில்தான் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இதற்காக டேவிட் பெக்காம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். பின்னர் செல்போனில் பேசி கொண்டே கார் ஓட்டிய குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

மத்திய லண்டன் பகுதியில் கார் ஓட்டி சென்று கொண்டிருக்கும்போதுதான் டேவிட் பெக்காம் செல்போனில் பேசினார். ஆனால் அந்த சமயத்தில் அங்கு போக்குவரத்தின் வேகம் மிகவும் குறைவாகதான் இருந்தது. இதனை ஒப்புக்கொள்வதாக நீதிபதி கேத்ரீன் மூரே கூறினார்.

ஆனால் சட்டப்படி பார்த்தால் மன்னிப்பு வழங்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார். இதன்பின் டேவிட் பெக்காமின் லைசென்ஸில் 6 தண்டனை புள்ளிகளை சேர்க்க அவர் உத்தரவிட்டார். ஆனால் டேவிட் பெக்காமின் லைசென்ஸில் ஏற்கனவே 6 தண்டனை புள்ளிகள் உள்ளன.

வேகமாக வாகனம் ஓட்டிய குற்றங்களுக்காக இந்த 6 தண்டனை புள்ளிகள் சேர்க்கப்பட்டிருந்தன. தற்போது கூடுதலாக 6 புள்ளிகள் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே இனி டேவிட் பெக்காம் 6 மாதங்களுக்கு வாகனம் ஓட்ட முடியாது.

டேவிட் பெக்காம் வாகனம் ஓட்ட 6 மாதங்கள் தடை விதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக டேவிட் பெக்காமின் தீவிர ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

டேவிட் பெக்காம் கடந்த 1996ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை இங்கிலாந்து தேசிய அணிக்காக விளையாடியுள்ளார். இதன்பின் 2009ம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதுதவிர பல்வேறு கிளப் அணிகளுக்காகவும் அவர் விளையாடியுள்ளார்.

இதில், மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட், எல்ஏ கேலக்ஸி, ஏசி மிலன் மற்றும் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் ஆகியவை குறிப்பிடத்தகுந்த அணிகள் ஆகும். ஆனால் கிளப் கால்பந்து விளையாடுவதையும் டேவிட் பெக்காம் கடந்த 2013ம் ஆண்டு நிறுத்தி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு தற்போது 44 வயதாகிது.


Click it and Unblock the Notifications