விற்பனையாகாத 1.2 லட்சம் பிஎஸ்-3 வாகனங்களுக்கு மீண்டும் சலுகை அளிக்கப்படுமா?
விற்பனையாகாமல் தேங்கிக்கிடக்கும் 1.2 லட்சம் பிஎஸ்-3 வாகனங்களுக்கு சலுகை அளிக்கப்படுமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது. அது குறித்த தகவல்களை காணலாம்.
2017 ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பின்னர் பிஎஸ்-3 தர வாகனங்களை விற்பனை செய்யவும், பதிவு செய்யவும் உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், 5000 கோடி ரூபாய் மதிப்பிலான பிஎஸ்-3 வாகனங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இவற்றிற்கு மீண்டும் சலுகை அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு இந்திய ஆட்டோமொபைல் சம்மேளனத்தின் தலைவர் அளித்த பதில்களை இத்தொகுப்பில் காணலாம்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்கள் அனைத்தும் பாரத் ஸ்டேஜ்-3 (பிஎஸ்) என்ற மாசு உமிழ்வு தரம் கொண்டதாக இருந்து வந்தது. இது சுற்றுச்சூழலுக்கு தீங்கை விளைவிப்பதனால், 2017 ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-3க்கு பதிலாக பிஎஸ்-4 தர இஞ்சின் கொண்ட வாகனங்கள் தயாரிப்பதை கட்டாயமாக்கியது மத்திய அரசு.

அரசு நிர்ணயித்திருந்த காலக்கெடுவுக்குள் விற்பனை செய்யமுடியாத அளவுக்கு கிட்டத்தட்ட 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான பிஎஸ்-3 வாகனங்களை ஸ்டாக் வைத்திருந்தன ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்களும் அதன் டீலர்களும்.

இந்நிலையில், அரசு நிர்னயித்திருந்த காலக்கெடு நெருங்கியதால் பிஎஸ்-3 தர வாகனங்களை ஏப்ரல்-1 க்கு பிறகு விற்பனை செய்ய அனுமதிக்குமாறு இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதைப் பரிசீலித்த, அரசு பிஎஸ்-3 தர வாகனங்களை விற்பனை செய்ய அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நாட்டின் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை உருவாக்கும் பிஎஸ்-3 வாகனங்களை ஏப்.1 க்கு பிறகு விற்பனை செய்யவும், பதிவு செய்யவும் தடை விதிப்பதாக அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இதன் காரணமாக வேறு வழியில்லாத நிலையில், ஏப்ரல்1 க்குள், ஸ்டாக் உள்ள பிஎஸ்3 வாகனங்களை விற்பனை செய்யும் பொருட்டு ஏப் 30 மற்றும் 31 தேதிகளில் அதிரடியான விலை குறைப்பை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அளித்தன.

கடந்த 31ஆம் தேதி பெருவாரியான வாடிக்கையாளர்கள் ஷோரூம்களில் திரண்டு வாகனங்களை வாங்கிச் சென்றனர். வரலாற்று விலை குறைப்புக்கு மத்தியிலும் 5,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.2 லட்சம் வாகனங்கள் இன்னமும் ஸ்டாக் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இவற்றின் நிலை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

இது தொடர்பாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சம்மேளத்தின் தலைமை இயக்குனர் மாத்தூரிடம் விசாரித்தபோது, உச்சநீதிமன்றத்தின் தடை காரணமாக விற்பனையாகாத 1.2 லட்சம் பிஎஸ்-3 வாகனங்கள் டீலர்களிடம் இருப்பதாகவும், இவற்றின் மதிப்பு ரூ.5,000 கோடி என்றும் அவர் தெரிவித்தார்.

பிஎஸ்3 வாகனங்களை ஏப் 1க்கு பிறகு விற்பனை செய்ய அரசு அனுமதியளித்த நிலையில், உச்சநீதிமன்றம் விதித்த தடை காரணமாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பிஎஸ்-3 வாகனங்களுக்கு அதிரடி விலை குறைப்பு சலுகைகளை அளித்ததன் காரணமாக 12,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சந்தித்ததாகவும் மாத்தூர் கூறினார்.

இந்தியாவில் நிலவும் நிச்சயமற்ற வணிகச் சூழல் காரணமாக இத்துறையில் முதலீடுகள் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நீண்ட கால நோக்கில் நிச்சயம் இந்த தடை கடுமையான பாதிப்புகளை ஆட்டோமொபைல் துறைக்கு ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது தேங்கியுள்ள 1.2 லட்சம் வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்ய இயலாததால், பிஎஸ்3 வாகனங்கள் புழக்கத்தில் இருக்கும் வெளிநாடுகளுக்கு இவற்றை ஏற்றுமதி செய்ய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.


Click it and Unblock the Notifications








