பி.எஸ்.3 தடை உத்தரவு விதிகள் டிராக்டர்கள், கட்டுமான துறை வாகனங்களுக்கு பொருந்தாது: உச்சநீதி மன்றம்
பி.எஸ்.3 தடை உத்தரவு விதிகள் டிராக்டர்கள், கட்டுமான துறை வாகனங்களுக்கு பொருந்தாது என உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் பி.எஸ்.3 எஞ்சின்களுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இந்த தடை உத்தரவில் விவசாயத்திற்காக பயன்படும் டிராக்டர் போன்ற வாகனங்களுக்கு தற்போது உச்சநீதி மன்றம் விலக்கு அளித்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பி.எஸ்.4 எஞ்சினைக்கொண்டு தான் இனி வாகனங்கள் தயாரிக்கப்படவேண்டும் என்றும், அவ்வாறு தயாராகும் வாகனங்களே இனி பதிவு செய்யப்படும் என்றும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதனை எதிர்த்து பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மத்திய அரசின் உத்தரவை உறுதி செய்து, பி.எஸ்.3 எஞ்சினுக்கான தடையை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தியது.

ஏப்ரல் ஒன்று முதல் அமல்படுத்தப்பட்ட இந்த உத்தரவு தற்போது நாடு முழுவதும் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பி.எஸ். 4 எஞ்சின் கொண்டே வாகனங்களை தயாரித்து வருகின்றன.

பொதுபோக்குவரத்து, தனிநபர் வாகனங்களுக்காக கொண்டுவரப்பட்ட இந்த நடைமுறை விவசாயம், கட்டுமானம் போன்ற துறைகளில் இயங்கி வரும் வாகனங்களுக்கும் பொருந்துமா என்ற கேள்வி பல தரப்பினர் மத்தியில் இருந்தது வந்தது.

தற்போது இதற்கான விளக்கத்தை கடந்த திங்களன்று உச்சநீதி மன்றம் அளித்துள்ளது.
அதன்படி, விவாசயம், கட்டுமானம் போன்ற துறைகளுக்கான வாகனங்கள் மத்திய மோட்டார் வாகனங்கள் விதிகளின் கீழ் உள்ளதால், தனிநபர் மற்றும் பொது போக்குவரத்து ஊர்திகளுக்கான பி.எஸ்.3 எஞ்சின் தடை உத்தரவு இதற்கு பொருந்தாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும், விவசாயத்திற்காக பயன்படுத்தும் டிராக்டர்கள் பாரத் டிராக்டர் எமிஷன் நெறிமுறைகளுக்கு கீழ் வருகின்றன. அதேபோல கட்டுமான துறைக்கான வாகனங்கள் கட்டுமான உபகரண நெறிகள் கீழ் இருக்கின்றன.

இதனால் தற்போது வாகனங்களுக்காக விதிக்கப்பட்டு இருக்கும் பி.எஸ்.3 தடை உத்தரவின் கீழ் இவையேதும் வராது எனவும் உச்சநீதி மன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

இதற்காக நடைபெற்ற விவதாத்தின் போது பேசிய வழக்கறிஞர் பி. சிதம்பரம், பி.எஸ்.3 தடை உத்தரவால் பல ஆர்.டி.ஓ அலுவலகங்களில் விவாசயம் மற்றும் கட்டுமான துறைகளுக்கான வாகனங்கள் பதிவு செய்ய மறுக்கப்படுவதாக தெரிவித்தார்.

TREM-IIIB என்ற பெயரில் டிராக்கடர்களுக்கான எஞ்சின் நெறிகளை அமல்படுத்த, அரசு முயற்சித்து வருகிறது. ஆனால் உற்பத்தியாளர்கள் இதை விடுத்து நேரடியாக 2021ல் அனைத்து டிராக்டர்களும் TREM-IV எஞ்சினில் தயாரிக்கப்பட வேண்டும் என கூறிவருகின்றனர்.

உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப டிராக்டர்களுக்கான TREM-IV எஞ்சின் நடைமுறைப்படுத்தப்பட்டால், நாட்டில் எரிவாயு தேவை பன்மடங்களு அதிகரிக்கும் என்பது அரசின் எண்ணமாக உள்ளது.

இருந்தாலும் இதற்கான முடிவை விரைவில் அரசும், டிராக்டர் உற்பத்தியாளர்களும் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








