பழைய வண்டிகளுக்கு திடீர் தடை! வீட்டு வாசலை தாண்டினாலே 20 ஆயிரம் அபராதம் கட்டணும்! சுத்தி வளச்சு பிடிக்கறாங்க!
திடீரென விதிக்கப்பட்ட தடையை மீறி பழைய கார்களை ஓட்டுபவர்களுக்கு மிக கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களால் சுற்றுச்சூழல் மிக கடுமையாக மாசடைந்து வருகிறது. எனவே எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி போன்ற வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் பணிகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக டெல்லியில்தான் (Delhi) மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகள் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. ஏனெனில் அங்கு காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. அதுவும் தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்று விட்டது.
எனவே அங்கு தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களை இயக்குவதற்கு மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி டெல்லி சாலைகளில் தற்போது பிஎஸ்3 பெட்ரோல் (BS3 Petrol) மற்றும் பிஎஸ்4 டீசல் (BS4 Diesel) கார்களை இயக்க முடியாது. காற்று மிகவும் மோசமாக மாசடைந்து இருப்பதால், இந்த கார்களுக்கு தற்காலிகமாக தடை (Ban) விதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் வரும் நவம்பர் 13ம் தேதி வரை (நாளை) இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த எச்சரிக்கையை நிறைய பேர் மீறி வருகின்றனர். அவர்களை பிடிப்பதற்காக டெல்லி காவல் துறையினர் அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளனர். காவல் துறையினரின் இந்த சோதனையில் ஆயிரக்கணக்கானோர் சிக்கியுள்ளனர்.
நவம்பர் 11ம் தேதி (நேற்று) காலை 6 மணி வரையில் மட்டும் 5,882 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கார்களின் உரிமையாளர்கள் ஒவ்வொருவருக்கும் 20 ஆயிரம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஆம்புலன்ஸ் போன்ற அவசர கால வாகனங்களுக்கு மட்டும் இந்த அதிரடி உத்தரவில் இருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இவ்வாறான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை மக்கள் மத்தியில் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் மிகவும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்துவதற்காக பஸ் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களிலும், மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை தீவிரமடைந்து கொண்டு வருவதை உணர்ந்துள்ள மத்திய அரசு, பசுமை ஹைட்ரஜனின் உற்பத்தியை அதிகரிக்க தேவையான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்தது போக, பசுமை ஹைட்ரஜனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
போக்குவரத்து உள்பட பல்வேறு துறைகளிலும் கார்பன் உமிழ்வை குறைப்பதற்காக இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் இப்படி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி வாகனங்களை மக்கள் அதிகளவில் வாங்க தொடங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications








