எப்ப வேணாலும் அந்த உத்தரவு வரலாம்! நடுக்கத்தில் வாகன உரிமையாளர்கள்! தலையில் இடியை இறக்க போகிறதா அரசு!
வாகன உரிமையாளர்களுக்கு செக் வைக்கும் வகையிலான அதிரடி உத்தரவு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை மிகவும் அதிகமாக இருப்பதற்கு, பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) வாகனங்கள் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகின்றன. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை படிப்படியாக குறைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி போன்ற சுற்றுச்சூழலுக்கு நட்பான வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில்தான் (Delhi) மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மிகவும் வேகமாக எடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் பெட்ரோல், டீசல் மூலமாக இயங்கும் வாகனங்களுக்கு டெல்லியில் படிப்படியாக பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் பெட்ரோல், டீசலில் இயங்கும் குறிப்பிட்ட ஒரு சில வாகனங்களை இயக்குவதற்கு டெல்லியில் வெகு சமீபத்தில் திடீரென புதிய தடை உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.
பிஎஸ்-3 பெட்ரோல் (BS-III Petrol) மற்றும் பிஎஸ்-4 டீசல் (BS-IV Diesel) நான்கு சக்கர வாகனங்களை நவம்பர் 13ம் தேதி வரை (நேற்று) டெல்லி சாலைகளில் இயக்க கூடாது என இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை மீறும் நபர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த உத்தரவை கண்டு கொள்ளாமல் டெல்லி சாலைகளில் ஏராளமானோர் பிஎஸ்-3 பெட்ரோல் மற்றும் பிஎஸ்-4 டீசல் நான்கு சக்கர வாகனங்களை இயக்கினர். எனவே ஏற்கனவே அறிவித்தபடி, அவர்கள் மீது டெல்லி போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கையை எடுத்தனர். நமக்கு கடைசியாக கிடைத்த தகவலின்படி, சுமார் 5,900 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
அவர்கள் அனைவருக்கும் தலா 20 ஆயிரம் ரூபாயை டெல்லி போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் அபராதமாக விதித்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன. இது கடந்த நவம்பர் 11ம் தேதி காலை 6 மணி வரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை மட்டுமே. எனவே அபராதம் விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
இந்த சூழலில் இந்த தடை உத்தரவு நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. எனவே தடை விதிக்கப்பட்டிருந்த வாகனங்களின் உரிமையாளர்கள் டெல்லி சாலைகளில் அவற்றை மீண்டும் ஓட்ட முடியும் என்ற நிலைமை உருவாகியுள்ளது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பான முக்கிய முடிவை எடுப்பதற்காக இன்று (நவம்பர் 14) அதிகாரிகளின் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
டெல்லி அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து இந்த முக்கியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தடை உத்தரவை விலக்கி கொள்வதா? அல்லது நீட்டிப்பதா? என்ற முடிவு இந்த கூட்டத்தில்தான் எடுக்கப்படும் என டெல்லி அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் கடந்த 4 நாட்களாக ஏக்யூஐ எனப்படும் காற்றின் தரக்குறியீடு (AQI - Air Quality Index) நிலையாக உள்ளது.
எனவே தடை விலக்கி கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. மறுபக்கம் காற்றின் தரத்தை நன்றாக மேம்படுத்துவதற்காக தடையை நீட்டித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம். எனவே வாகன உரிமையாளர்கள் இந்த கூட்டத்தின் முடிவை கலக்கமான மனதுடன் எதிர் நோக்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications








