சக்கரத்தில் சிக்கிய முடி... கோ-கார்டிங் விளையாட்டில் உயிரிழந்த 21 வயது ஹைதராபாத் பெண்...
மிகவும் பாதுகாப்பாக நடத்தப்படும் கோ-கார்டிங் போட்டியில் நடந்த விபத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்திற்கான காரணத்தை இந்த செய்தியில் பார்ப்போம்.

கோ-கார்டிங், உலகம் முழுவதும் பரவலாக நடத்தப்படும் விளையாட்டு போட்டியாகும். ஒரே ஒரு நபர் மட்டும் அமரும்படியான மிகவும் சிறிய ரக கார்கள் உடன் நடத்தப்படும் இந்த விளையாட்டு போட்டி சர்வதேச அளவிலும் நடத்தப்படுவது உண்டு.

ஓட்டுனர் உரிமம் எதுவும் இந்த விளையாட்டில் கலந்து கொள்வதற்கு தேவை இல்லை என்பதால் குறிப்பிட்ட வயதிற்குட்பட்ட யாவராயினும் கலந்து கொள்ளலாம். இதனால் மிகுந்த பாதுகாப்புகளோடு தான் இந்த விளையாட்டு நடத்தப்படும்.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு வாகனத்துடன் மற்றொரு வாகனம் மோதினாலும் பெரிய அளவில் விபத்து ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் ஓட்டுனர் கை கால்களை வைத்து கொண்டு சும்மா இல்லாமல் ஏதாவது சில்மிஷங்கள் செய்தால் அது பெரிய அளவிலான பிரச்சனையிலும் சென்று முடியும் என்பதற்கான சான்று தான் இந்த உயிரிழப்பு.

இன்ஜினியரிங் மாணவியான தற்போது கோ-கார்டிங் விளையாட்டில் உயிரிழந்துள்ள பெண், போட்டியில் கலந்து கொண்டிருக்கும் போது பாதியில் தனது ஹெல்மெட்டை கழற்றி செல்பி எடுக்க முயற்சித்ததாகவும் அப்போது அவரது முடி சக்கரத்தில் சிக்க கொண்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இந்த விளையாட்டை நடத்திய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் கூறுகையில், கடந்த புதன்கிழமை (அக்டோபர் 7) பி.டெக் மூன்றாம் ஆண்டு மாணவியான ஸ்ரீவர்ஷினி தனது குடும்பத்துடன் மீர்பேட், குர்ராம் குடா பகுதியில் உள்ள கோ-கார்டிங் ட்ரக்கிற்கு சென்றுள்ளார். அங்கு வாகனத்தை ஓட்டிய அவர் ஹெல்மெட்டை கழற்றிய போது அவரது முடி இயங்கி கொண்டிருந்த வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி கொண்டுள்ளது.

இருக்கைக்கு பின்னால் டயர்களையும் என்ஜினையும் இணைக்கும் சக்கர ஷாஃப்ட்டில் அவரது முடி சிக்கி கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தலையில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்துள்ளார் என தெரிவித்தனர்.

ஸ்ரீவர்ஷினி வாகனத்தில் இருந்து கீழே விழவில்லை. எதிர்பாராத விதமாக சக்கரத்தில் சிக்கிய முடி அவரை வேகமாக பின்னோக்கி இழுத்ததினால் அவரது தலை வாகனத்தில் பலமாக மோதி கொண்டுள்ளதாகவும், கோ-கார்டிங் நடத்திய நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் மீர்பேட் நகர சப்-இன்ஸ்பெக்டர் அனந்த ராமலு தெரிவித்துள்ளார்.

இவ்வாறான விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு என்று கோ-கார்டிங் நிர்வாகம் முன்னெச்சரிக்கை அறிவுரைகள் எதையும் கூறவில்லை என்று ஸ்ரீவர்ஷினியின் குடும்பத்தார் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ள புகாரில் குறிப்பிட்டுள்ளனர். அலட்சியமாக நடத்து கொண்ட ட்ரக் நிர்வாகத்தின் மீது 304ஏ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Note: Images are representative purpose only.


Click it and Unblock the Notifications








