மத்திய அரசின் பட்ஜெட்டிற்கு பென்ஸ் கார் சிஇஓ சொன்ன அந்த ஒரு வார்த்தை... அடுத்து என்ன நடக்க போகிறது?
2024-25ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் அறிவிக்கப்பட்டு இருப்பதுதான் தற்போது நாடு முழுக்க பேச்சாக உள்ளது. குறிப்பாக, பீகார் மற்றும் ஆந்திர பிரதேசம் மாநிலங்களில் பட்ஜெட்டை வெகுவாக கொண்டாடி வருகின்றனர். ஏனெனில், பட்ஜெட்டில் பீகார் மற்றும் ஆந்திராவை மேம்படுத்தும் விதமாக பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு பீகாரின் நிதிஷ்குமார் மற்றும் ஆந்திராவின் சந்திரபாபு நாயுடுவின் ஆதரவு மிக முக்கியமானதாக இருந்ததால், அந்த இரு மாநிலங்களுக்கு மட்டும் இவ்வாறு பெரிய தொகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் மீம்ஸை பார்த்திருப்பீர்கள்.
பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் துறை தொடர்பாக பெரியதாக எந்த அறிவிப்பும் இல்லை. எலக்ட்ரிக் வாகனங்களை மக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையிலான அறிவிப்புகள் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால், அவை எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இன்னும் சொல்லப்போனால், இடைக்கால பட்ஜெட் போன்று முக்கியமான சில திட்டங்கள் மட்டுமே இந்த பொது பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

2024-25ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டிற்கு இந்திய ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். அந்த வகையில், மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனத்தின் இந்தியாவிற்கான நிர்வாக இயக்குனர் சந்தோஷ் ஐயர் கூறுகையில், "வளர்ச்சி கண்ட இந்திய பொருளாதாரத்திற்கு வலுவான அடித்தளத்தை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் முன்னுரிமைகளை பட்ஜெட் தெளிவாக அடிக்கோடிட்டு காட்டுகிறது.
3.4% ஜிடிபி ஒதுக்கீடு உடன் அரசாங்கத்தின் முக்கியத்துவத்தில் நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான மூலதனச் செலவு முதன்மையானதாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். பேட்டரி எலக்ட்ரிக் வாகனங்களுக்கான குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி நீண்ட காலத்திற்கு தொடரும் போன்றதான ஜிஎஸ்டி அறிவிப்புகளை நாங்கள் எதிர்பார்த்தோம். எவ்வாறாயினும், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதற்கும், காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கும் நிதியை வகைப் பிரிப்பது, காலநிலை உறுதிப்பாடுகளை அடைவதற்கான சரியான திசையில் பயணிப்பதற்கான ஒரு படியாகும்" என்றார்.

2024-25 பட்ஜெட் குறித்து டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுதர்சன் வேணு கருத்து தெரிவிக்கையில், "அரசாங்கம் மிகவும் சீரான வரவு செலவு திட்டத்தை முன்வைத்துள்ளது மற்றும் நாட்டின் திறன் மற்றும் வேலை வாய்ப்பு போன்ற முக்கிய பகுதிகளை அது நிவர்த்தி செய்கிறது. முதல்முறையாக வேலைக்கு செல்பவர்களை அதிக அளவில் பணிக்கு கொண்டு வருவதற்கும், அவர்களுக்கு சிறந்த நிறுவனங்களில் இண்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்குவதற்கும் பிரதமரின் முயற்சிகளை வரவேற்கிறோம்.
வலுவான உள்கட்டமைப்பு விரிவாக்கம் அரசாங்கத்திற்கு முக்கியமானதாக உள்ளது. மேலும், இது நாட்டின் பொருளாதாரத்தில் பல மடங்கு விளைவுகளை ஏற்படுத்தும். கடந்த 10 வருட பொருளாதார வளர்ச்சியின் பின்னணியில் தொடர்ந்து வளர்ச்சியை உறுதி செய்வதற்கான தெளிவான எண்ணம் அரசாங்கத்திடம் உள்ளது. இதன்மூலம் நிலையான வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம்" என்றார்.

ஜேசிபி இந்தியா (JCB India) நிறுவனத்தின் சிஇஓ தீபக் ஷெட்டி பட்ஜெட் குறித்து கூறுகையில், "இன்று அறிவிக்கப்பட்ட யூனியன் பட்ஜெட் ஆனது வேலைவாய்ப்பு, நாட்டின் உற்பத்தி திறன் மற்றும் பல்வேறு முயற்சிகள் மூலம் நடுத்தர வர்க்கத்தினரின் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது. நிதி உதவி மூலம் வேலைவாய்ப்பு மற்றும் திறன் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, 5 ஆண்டுகளில் 20 இலட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் திறன்மிக்கவர்களாக மாற்றப்படுவர்.
PMGSY-இன் 4ஆம் கட்டம் ஆனது கிராமப்புற சாலைகளில் மட்டுமே கவனம் செலுத்தும் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு மேம்பாட்டில் தொடர்ந்து கவனம் செலுத்துவது கட்டுமான உபகரண துறையில் இருக்கும் எங்களுக்கு வலுவான வாய்ப்புகளை உருவாக்குகிறது. இந்த துறையில், உலகின் 2வது பெரிய நிறுவனமாக மாறுவதற்கான பயணத்தில் வலுவான வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம்" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆட்டோமொபைல் துறைக்கென ஸ்பெஷலாக எந்த அறிவிப்பும் அறிவிக்கப்படாத போதிலும், ஆட்டோமொபைல் நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகள் இவ்வாறு மத்திய அரசை புகழ்ந்து பேசியிருப்பது மகிழ்ச்சியை தருகிறது. இதில் இருந்து, மத்திய அரசை போன்று அவர்களும் நாட்டின் வளர்ச்சியை எதிர்நோக்கி உள்ளனர் என்பதை அறிய முடிகிறது. அடுத்த 2025-26ஆம் நிதியாண்டிலாவது ஆட்டோமொபைல் துறை தொடர்பான அறிவிப்புகள் பொது பட்ஜெட்டில் இடம்பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









