இவி கார் வாங்கப்போறீங்களா? வெயிட் பண்ணுங்க பட்ஜெட்டிற்கு பிறகு தரை ரேட்டு எலெக்ட்ரிக் காரை விக்க போறாங்க!
மத்திய அரசு வரும் 23ஆம் தேதி இந்த நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், இந்த பட்ஜெட்டில் இந்தியாவில் உள்ள ஆட்டோமொபைல் செக்டாருக்கு மிக அதிகமான நிதி ஒதுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது எனவும், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான விலை குறைய வாய்ப்பு இருக்கிறது எனவும், பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வருவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்பது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
இந்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதன் பிறகு புதிய அரசு ஆட்சி அமைத்தவுடன் தற்போது முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய தயாராகி வருகிறது. அதன்படி 23ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் துறைக்கான பல்வேறு அறிவிப்புகள் வர வாய்ப்பு இருக்கிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு ஃபேம் என்ற மானியத்தை வழங்கி வந்தது. இந்த மானியம் கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவு பெற்றது. அப்பொழுது தேர்தல் இருந்ததால் இந்த மானியம் குறித்த புதிய அறிவிப்புகளை வெளியிடாமல் இடைக்காலத்திற்காக மானியங்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது புதிய ஃபேம் மானியம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்த அறிவிப்பு வெளியானால் இதில் வழங்கப்படும் மானியங்களை வைத்து இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை கணிசமான அளவு குறையும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இதனால் எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிகமாக விற்பனையாகி இந்தியாவில் காற்று மாசு ஏற்படும் அளவு கணிசமான அளவு எதிர்காலத்தில் குறையும் என்பதால் இந்த மானியத்தை அரசு வழங்கி வருகிறது.

இந்நிலையில் இந்த மானியம் குறித்த முழுமையான அறிவிப்பு வெளியாவதற்கான வாய்ப்புகள் குறைவு எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இது குறித்து மத்திய அமைச்சர் குமாரசாமி பேசியிருந்தபோது, பட்ஜெட்டில் இது குறித்து அறிவிப்புகள் வெளியாவதற்கான வாய்ப்புகள் குறைவு தான் என பேசி இருந்தார். இந்த மானிய திட்டத்திற்கான நிதி ஒதுக்குதல் குறித்த அறிவிப்புகள் மட்டும் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மற்ற அறிவிப்புகள் எல்லாம் பின்னர் வெளியாக வாய்ப்புள்ளது.
இந்தியாவில் ஹைபிரிட் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் 1200 சிசி மற்றும் 4000 மிமீ நீளத்திற்கு அதிகமாக இருக்கும் வாகனங்களுக்கு 15 சதவீதம் செஸ் வரி விதிக்கப்படுகிறது. ஹைபிரிட் வாகனங்களுக்கு இந்த வரியையும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

ஆனால் ஜிஎஸ்டி மற்றும் செஸ் வரியை குறைப்பது மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வாய்ப்பு இல்லை. இது ஜிஎஸ்டி கவுன்சில் எடுக்க வேண்டிய முடிவுதான். ஜிஎஸ்டி கவுன்சில் எடுத்தால் மட்டுமே இது அங்கீகாரம் பெறும். அதனால் இந்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்பு இல்லை. பட்ஜெட்டில் இதற்கான பரிந்துரையை வேண்டுமானால் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு மத்திய அரசு தரப்பில் இருந்து செய்யலாம்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் அயான் பேட்டரிகள் மற்றும் பேட்டரிகளுக்கான உதிரிபாகங்களுக்கு இறக்குமதி வரியில் விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இது குறித்து அறிவிப்புகள் வழியாக வாய்ப்பு இருக்கிறது. இப்படியாக இறக்குமதி வரி குறைக்கப்பட்டாலோ அல்லது நீக்கப்பட்டாலோ இது நேரடியாக எலெக்ட்ரிக் வாகன விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தியாவில் இந்த ரக பேட்டரிகளின் தயாரிப்பு அதிகமாகும் வரை இறக்குமதி வரியை குறைக்க வாய்ப்பு இருக்கிறது.
இந்தியாவில் உள்ள ஆட்டோமொபைல் துறை தற்போது ஆண்டுக்கு 20 லட்சம் கோடியை டர்ன் ஓவர் செய்து வருகிறது. இந்தியா மிகப்பெரிய வாகன தயாரிப்பு கொண்ட நாடாக மாறி வருகிறது. குறிப்பிட்ட சில பிரச்சினைகளை சரி செய்யும் போது, தொடர்ந்து இந்தியா உலக அளவில் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நாடாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் துறைக்கு அதிகமான அறிவிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் இந்த பட்ஜெட்டுக்கு பிறகு எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை கணிசமாக குறைவதற்கான வாய்ப்புகள் கூட இருக்கிறது. ஆனால் முழுமையான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளியாகும் என்ற தகவல் இல்லை, இந்த பட்ஜெட்டில் வெளியாகும் தகவலை வைத்து அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் இது நிகழ வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









