தொடரும் துரதிருஷ்டம்... புகாட்டி 100பி விமானத்தின் மாதிரி மாடல் தீப்பிடித்ததில் விமானி பலி!
புகாட்டி 100பி விமானம் தொடர்ந்து சோகமான முடிவையே சந்தித்து வருகிறது. ஏற்கனவே, ஹிட்லருக்கு பயந்து தனித்தனியாக பிரிக்கப்பட்ட புகாட்டி 100பி விமானம் குறித்த செய்தியை ஏற்கனவே வழங்கியிருந்தோம். மேலும், அந்த விமானத்தின் அடிப்படையாகக் கொண்டு புதிய விமானத்தை அமெரிக்காவை சேர்ந்த விமான ஆர்வலரும், விமானியுமான ஸ்காட்டி வில்சன் உருவாக்கி வருவது குறித்தும் பிரத்யேக செய்தித் தொகுப்பை வழங்கியிருந்தோம்.
இந்தநிலையில், மூன்றாவது சோதனை ஓட்டத்தின்போது, ஸ்காட்டி வில்சன் உருவாக்கிய புகாட்டி 100பி விமானத்தின் மாதிரி மாடல் தரையில் மோதி தீப்பிடித்தது. இதில், அதனை இயக்கிய விமான ஸ்காட்டி வில்சன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் விமான ஆர்வலர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், புகாட்டி 100பி விமானத்தின் மாதிரியை உருவாக்க ஸ்காட்டி வில்சன் அத்துனை ஆர்வம் காட்டியது ஏன் என்பதை தொடர்ந்து காணலாம்.

தொழில்நுட்ப வல்லமை
புகாட்டி என்றாலே புரட்சி எனும் அளவுக்கு அதன் கார்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அதிநவீன தொழில்நுட்பங்களில் புகாட்டி பிராண்டு முன்னிலை வகிக்கிறது. புகாட்டி நிறுவனத்தை உருவாக்கிய எட்டோர் புகாட்டிக்கு கார் தயாரிப்பு மட்டுமின்றி, ரேஸ் விமானத்தை தயாரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார்.

ரேஸ் விமானம்
அந்த காலத்தில் டச் டி லா மார்தே ஏர் ரேஸ் என்ற பெயரில் ஆண்டுதோறும் விமான ரேஸ் நடத்தப்பட்டது. ஐரோப்பிய அளவில் புகழ்பெற்ற இந்த ரேஸில் ஜெர்மனியை சேர்ந்த விமானம் ஒன்று மணிக்கு 754 கிமீ வேகத்தில் பறந்து உலகின் அதிவேக சாதனையை புரிந்தது.

பரம எதிரி
அப்போது ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் ஜென்ம எதிரிகளாக இருந்தன. பிரான்ஸ் நாட்டை கைப்பற்ற ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வந்தார். இதனால், ஜெர்மனி மீது பிரான்ஸ் நாட்டினருக்கு இயற்கையிலேயே வெறுப்பு இருந்தது. இந்தநிலையில், ஜெர்மனியை விட அதிவேக விமானத்தை உருவாக்கும் முயற்சியில் எட்டோர் புகாட்டி ஈடுபட்டார்.

கூட்டு
1930ம் ஆண்டு பெல்ஜியம் நாட்டை சேர்ந்த லூயிஸ் டி மாங்கே என்ற விமானப் பொறியாளருடன் இணைந்து உலகின் அதிவேக விமானத்தை தயாரிக்கும் முயற்சியில் எட்டோர் புகாட்டி இறங்கினார். மேலும், ஜெர்மனியின் உளவுத் துறைக்கு தெரியாத வகையில், மிகவும் ரகசியமாக இந்த விமானத்தை தயாரிக்கும் முயற்சி நடந்தது.

மாடல்
புதிய ரேஸ் விமானத்திற்கு புகாட்டி 100பி என்று பெயரிடப்பட்டது. ஜெர்மனி விமானத்தின் வேகத்தை விஞ்சும் வகையில், மணிக்கு 800 கிமீ வேகத்தில் இந்த விமானத்தை தயாரிக்க வேண்டும் என்பதே இலக்கு.

ஹிட்லருக்கு பயந்து...
புகாட்டி 100பி விமானத்தின் 85 சதவீத தயாரிப்புப் பணிகள் முடிந்துவிட்ட நிலையில், பிரான்ஸ் மீது ஜெர்மனி படையெடுத்தது. மேலும், புகாட்டி 100பி விமானத்தை கைப்பற்றும் வாய்ப்பும் இருந்தது. இதையடுத்து, அந்த விமானத்தை தனித்தனியாக பிரித்து மறைத்து வைத்து விட்டார் எட்டோர் புகாட்டி. இதனால், அந்த விமானம் ஒருமுறை கூட பறக்கவில்லை.

அருங்காட்சியகம்...
பல ஆண்டுகள் கழித்து அந்த விமானத்தின் பாகங்களை ஒருங்கிணைத்து புதுப்பொலிவு கொடுத்து அமெரிக்க அருங்காட்சியகம் ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அதனை பார்வையிட்ட விமான ஆர்வலரான ஸ்காட்டி வில்சனுக்கு, அந்த விமானத்தின் மாதிரியை உருவாக்கி பறக்கவிட ஆசை பிறந்தது.

வியப்பு
1930ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட புகாட்டி 100பி விமானத்தின் தொழில்நுட்பம் ஸ்காட்டி வில்சனை வெகுவாக கவர்ந்தது. மேலும், அதில் இருந்த கட்டுப்பாட்டு சாதனங்கள் பல படிகள் முன்னே இருந்தது.

மாதிரி மாடல்
இதையடுத்து மாதிரி மாடலை உருவாக்க முனைந்தார். கடந்த 7 ஆண்டுகள் முயற்சியில், புகாட்டி உருவாக்கிய 100பி மாடலைப் போன்றே, மரத்தாலான உடல்கூடு கொண்ட விமானத்தை ஸ்காட்டி வில்சன், பொறியாளர் குழுவினருடன் இணைந்து உருவாக்கினார். ஏற்கனவே இரண்டு முறை பறக்கவிட்டு சோதனை ஓட்டம் நடத்தினார்.

விபத்து
மூன்றாவது முறையாக நேற்று விமானத்தை இயக்கிய சோதனை செய்தபோது, அது தரையில் மோதி தீப்பிடித்தது. இதில், மரத்தாலான உடல்கூடு கொண்ட அந்த விமானம் எளிதாக தீப்பிடித்தது. இதில், விமானத்தை இயக்கிய ஸ்காட்டி வில்சன் பரிதாபமாக உயிரிழந்தார்.

அனுபவமிக்கவர்...
ஸ்காட்டி வில்சன் போர் விமானியாக பணியாற்றியவர். மேலும், 11,000 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவஸ்தர். அவர் ஆர்வமாக தயாரித்த விமானமே அவரை பலிவாங்கியது விமான ஆர்வலர்களையும், அவரது குடும்பத்தாரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications