அப்பாவிகளை கொல்ல பயன்படுத்தப்பட்ட பக் ஏவுகணை பற்றிய பக், பக் தகவல்கள்!!
ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டிய அறிவியல் தொழில்நுட்பங்கள் இன்று அப்பாவி மனிதர்களின் அழிவுக்கு காரணமாகியிருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை 17ந் தேதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து, மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி பறந்து கொண்டிருந்த எம்எச்-17 என்ற எண் கொண்ட போயிங் - 777 விமானம் கிழக்கு உக்ரைன் வான் பகுதியில் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய, இந்த சம்பவத்தில் 298 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்பது மர்மமாகவே உள்ளது. இந்த நிலையில், அப்பாவி விமானப் பயணிகளின் உயிர்களை காவு வாங்கியதற்கு பயன்படுத்தப்பட் பக் ஏவுகணை பற்றிய தகவல்கள் நம்மை அச்சமூட்டுகிறது.

அறிமுகம்
கடந்த 1980ல் சோவியத் யூனியனால் அறிமுகம் செய்யப்பட்ட அதிநவீன ஏவுகணை செலுத்தும் வாகனம் மற்றும் தொழில்நுட்ப விஷயங்களை உள்ளடக்கியதுதான் பக் ஏவுகணை திட்டம். தரையிலிருந்து வான் இலக்குகளை குறிபார்த்து தாக்க வல்லது.

பக் ஏவுகணை
மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கு பக் 9எம்28எம்1 என்ற ஏவுகணை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பக் ஏவுகணையை செலுத்துவதற்கான வாகனத்தில் 4 ஏவுகணைகளை பொருத்த முடியும். ஒவ்வொரு ஏவுகணையும் 18 மீட்டர் நீளமும், 70 கிலோ வெடிபொருளை கொண்டிருக்கும்.

மிக எளிது
வெறும் 5 நிமிடங்களில் ஏவுகணையையும், அதனை செலுத்துவதற்கான லாஞ்சரையும் தயார்படுத்திவிடலாம். இதனை செலுத்துவதற்கான லாஞ்சர் பொருத்தப்பட்ட வாகனத்திலேயே விசேஷ ரேடார் இருக்கும். 100 மைல்கள் சுற்றளவிற்கு வானில் இருக்கும் இலக்குகளை ரேடார் மூலமாக கண்காணித்து விட முடியும்.
Recommended Video


தாக்குதல்
ரேடாரிலிருந்து இலக்கு குறித்த சமிக்ஞை கிடைத்ததவுடன் கம்ப்யூட்டரில், இலக்கு நகர்வை பதிவு செய்து செலுத்தினால், மணிக்கு 3,050 கிமீ வேகத்தில் இலக்கை நோக்கி சீறிப் பறக்கும். அடுத்த 12 வினாடிகளுக்குள் இலக்கை தாக்கி அழிக்கும்.

தாக்குதல் திறன்
தரையிலிருந்து 72,000 அடி உயரம் அல்லது 20 கிமீ உயரத்தில் பறக்கும் விமானத்தை கூட வெறும் 12 வினாடிகளில் தாக்கி அழித்துவிடும். இலக்கிற்கு 65 அடி சுற்றளவில் ஏவுகணை வெடித்து சிதறியுள்ளது. மலேசிய விமானம் 33,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது. ஏவப்பட்ட 8 வினாடிகளில் அந்த விமானம் ஏவுகணை தாக்குதலில் சிதறுண்டிருப்பதாக தெரிகிறது.

நேரடியாக தாக்காது...
பக் ஏவுகணை நேரடியாக இலக்கை தாக்காது. தற்கொலை தீவிரவாதி போன்று, இலக்கிற்கு அருகில், 65 அடி சுற்றளவில் சென்றவுடன் வெடித்துச் சிதறும். இதன்மூலமாக, இலக்கு வைக்கப்பட்ட விமானத்தின் எஞ்சின், இறக்கை பலத்த சேதமடையும்.

விரைவானது...
போர் சமயங்களில் 12 நிமிடங்களுக்குள் அடுத்த ஏவுகணையை பொருத்தி, ஏவ முடியும். மிக நவீனமான இந்த ஏவுகணையை வைத்துத்தான் அப்பாவி மக்களின் உயிர்களை காவு வாங்கியுள்ளனர்.

கைதேர்ந்தவர்களின் கைவரிசை
பக் ஏவுகணை செலுத்துவதற்கு 4 பணியாளர்கள் இருப்பது அவசியம். அத்துடன், இந்த ஏவுகணையை செலுத்துவதற்கு அதிக பயிற்சியும் பெற்றிருப்பதோடு, திறமையான பணியாளர்கள் தேவை. எனவே, இந்த ஏவுகணை தாக்குதலில் ரஷ்யா மீதும் சந்தேகப் பார்வை விழுந்துள்ளது.

பயன்பாடு
சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த பல நாடுகளில் இந்த பக் ஏவுகணைகள் பயன்பாட்டில் இருக்கின்றன. உக்ரைன் நாட்டின் வான்பகுதியில்தான் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Photo Source: Military Today


Click it and Unblock the Notifications








