முன்னாள் முதலமைச்சர் என்று எந்த பரிதாபமும் பார்க்கல! 50 லட்ச ரூபா காருக்கே இந்த நிலைமை என்றால்...!!
டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner), இந்தியா மட்டுமின்றி உலகளவில் பிரபலமான டொயோட்டா கார் என சொன்னால் அது மிகையில்லை. குறிப்பாக, நம் நாட்டில் ஃபார்ச்சூனர் கார் ஒன்றை வாங்க வேண்டும் என்பது நம்மில் நிறைய பேரது கனவாக உள்ளது. ஆனால், அதன் சற்று அதிகப்படியான விலையினால் சிலரால் மட்டுமே ஃபார்ச்சூனர் காரை சொந்தமாக்க முடிகிறது. டொயோட்டா ஃபார்ச்சூனரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் இந்தியாவில் ரூ.45.61 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்களின் தரமான உடலமைப்பினாலும், சொகுசான பயணத்தினாலும் கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார்களை வைத்திருப்பவர்கள் கூட அவசரத்திற்கு தேவைப்படும் என ஃபார்ச்சூனர் காரை வாங்குகின்றனர்.
பணக்காரர்கள் மட்டுமல்ல, அரசியல் வட்டாரத்தில் முக்கிய புள்ளியாக இருப்பவர்கள் கூட ஃபார்ச்சூனர் காரில் பயணம் செய்ய மிகவும் விரும்புகின்றனர். இன்னும் சொல்லப்போனால், சில மாநில முதலமைச்சர்கள் கூட புல்லட்-ப்ரூஃப் (Bullet-proof) செய்து ஃபார்ச்சூனர் காரை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு, புல்லட்-ப்ரூஃப் செய்யப்பட்ட ஃபார்ச்சூனர் காரை அதிகளவில் பயன்படுத்தும் அரசியல்வாதிகளில் ஆந்திரா மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியும் ஒருவராவார்.

ஜெகன் மோகன் ரெட்டி என சொன்னதும் எந்த சம்பவத்தை பற்றி கூற வருகிறோம் என்பது இந்நேரம் உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். கடந்த ஜூன் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதிய வேளையில் ஆந்திராவின் பல்நாடு மாவட்டத்தில் கட்சி தொண்டர் ஒருவரின் துக்க வீட்டிற்கு சென்று திரும்பும்போது ஜெகன் மோகன் ரெட்டி சென்ற புல்லட்-ப்ரூஃப் செய்யப்பட்ட ஃபார்ச்சூனர் காரின் சக்கரத்தில் சிக்கி தொண்டர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துக்க வீட்டிற்கு சென்ற திரும்பிய போதிலும், வழியெங்கும் ஜெகன் மோகன் ரெட்டியை காண குவிந்திருந்த தொண்டர்கள் அவருக்கு மலர் தூவி கரகோசம் எழுப்பியவாறு ஒவ்வொரு ஊரிலும் கொண்டாட்டமாக வழியனுப்பி வைத்தனர். பொதுவாகவே, மாநிலத்தின் முதல்வர் அளவிற்கு செல்வாக்கு வாய்ந்த ஒருவருக்கு எந்த அளவிற்கு தொண்டர்களின் கூட்டம் இருக்கும் என்பதை நான் கூற வேண்டியதில்லை.

அந்த வகையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் (YSR Congress) கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தனது ஊர் வழியாக செல்கிறார் என தெரிந்ததும் அவரது தொண்டர்கள் சாலையில் முண்டியடித்துக் கொண்டு அவரை வரவேற்ற போது, செல்லி சிங்கையா என பெயர் கொண்ட 55 வயதான தொண்டர் ஒருவர் ஜெகன் மோகன் ரெட்டி மீது மலர் தூவ முற்பட்ட போது எதிர்பாராத விதமாக கால் தடுமாறி கீழே விழுந்தார்.
சரியாக அந்த நேரத்தில் ஜெகன் மோகன் ரெட்டி சென்ற ஃபார்ச்சூனர் கார் செல்லி சிங்கையா மீது ஏறி இறங்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கூடியிருந்த பெரும் கூட்டத்திற்கு மத்தியில் மெதுவாக ஆமை போல் ஊர்ந்து சென்ற போதிலும், காரின் வலதுப்பக்க முன் சக்கரம் செல்லி சிங்கையாவின் தலை மீது ஏறி இறங்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து, ஜெகன் மோகன் ரெட்டியின் புல்லட்-ப்ரூஃப் ஃபார்ச்சூனரை அந்த சமயத்தில் ஓட்டிய கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் மீதும் பல பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சம்பவத்தின்போது தொண்டரின் உயிரை காவு வாங்கிய புல்லட்-ப்ரூஃப் செய்யப்பட்ட ஃபார்ச்சூனர் காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2019 சமயத்தில் ஜெகன் மோகன் ரெட்டி அரசியலில் தீவிரமாக ஈடுப்பட ஆரம்பித்த சமயத்தில் புல்லட்-ப்ரூஃப் செய்யப்பட்ட ஆறு டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்களை வாங்கி இருந்தார். அவற்றுள் ஒன்றாகவே இந்த குறிப்பிட்ட புல்லட்-ப்ரூஃப் செய்யப்பட்ட ஃபார்ச்சூனர் கார் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
அதிக இலட்சங்கள் செலவு செய்து புல்லட்-ப்ரூஃப் செய்யப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டாலும், இன்னொன்றை வாங்கிக் கொள்ளலாம். ஆனால், தொண்டரின் உயிரை மீண்டும் கொண்டுவர முடியாது அல்லவா... ஆதலால், இவ்வாறு கூட்டம் நெரிசலுக்கு மத்தியில் கார் ஓட்டும்போது வழக்கத்தை காட்டிலும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.


Click it and Unblock the Notifications









