2.5 மணிநேரம் படம் முடியுறதுக்குள்ள சென்னை டூ ஹைதராபாத் போய்டலாம்! லிஸ்ட்டில் இருக்கும் நகரங்கள்!
புல்லட் இரயில் (Bullet Train), இந்தியாவின் எதிர்கால இரயில் போக்குவரத்தாக மாறிவரும் ஒன்று. மக்களின் விரைவான போக்குவரத்துக்காக நாடு முழுக்க புல்லட் இரயில் சேவைகளை கொண்டுவர திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மும்பை மற்றும் அகமதாபாத் இடையே புல்லட் இரயில் சேவைக்கான வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருவதை பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
மும்பை மற்றும் தலைநகர் டெல்லிக்கு இடையேயான புல்லட் இரயில் சேவைக்கான முதற்கட்டமாக மும்பை- அகமதாபாத் இரயில் சேவை பார்க்கப்படுகிறது. இது வட இந்திய மாநிலங்களை இணைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டு வரும் புல்லட் இரயில் வழித்தடம் என்றால், தென்னிந்திய மாநிலங்களை இணைக்கும் விதமாகவும் புல்லட் இரயில் சேவையை வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

தென்னிந்தியாவின் முக்கியமான நகரங்களான சென்னை, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் அமராவதியை இணைக்கும் விதத்தில் இந்த புல்லட் இரயில் சேவை அமைக்கப்பட உள்ளதாம். குறிப்பாக, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் வழியாக இந்த புல்லட் இரயில் சேவையை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாம்.
இதனாலேயே இதுகுறித்த அறிவிப்பை ஆந்திரா பிரதேச முதலமைச்சர் என்.சந்திரபாபு நாயு வெளியிட்டுள்ளார். புல்லட் இரயில் வழித்தடத்தை அமைப்பதற்கான நிலத்தை தேர்வு செய்வதற்கான வேலைகள் தற்சமயம் சென்றுக் கொண்டிருப்பதாகவும், இந்த திட்ட பணிகள் இப்போதைக்கு மிகவும் ஆரம்பக்கட்ட நிலையில்தான் உள்ளன என்றும் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2025 இந்திய உணவு உற்பத்தியாளர்கள் மாநாட்டில் இதுகுறித்து பேசிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஏ.என்.ஐ (ANI)-க்கு அளித்த பேட்டியில், தென்னிந்தியாவின் முக்கியமான நகரங்களில் மட்டும் 5 கோடிக்கும் அதிகமானோர் வசிப்பதாகவும், இதனால் உலகின் பெரிய அளவிலான நகர்புறங்களாக இவை விளங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால், இந்த பகுதிகளில் புல்லட் இரயில் திட்டம் கொண்டுவரப்படுவது இந்த பகுதிகளில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்றும், ஏற்றுமதி & இறக்குமதிகளின் மதிப்பை அதிகப்படுத்தும் என்றும் நம்பிக்கை உடன் தெரிவித்த ஆந்திரா முதலமைச்சர், தென்னிந்தியாவில் புல்லட் இரயில் சேவை மிக விரைவாக கொண்டுவரப்பட உள்ளதாக கூறி மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளார்.
ஹைதராபாத், அமராவதி, சென்னை மற்றும் பெங்களூரு என்கிற 4 முக்கியமான மாநகரங்களை இணைக்கும் வகையில் இந்த புல்லட் இரயில் சேவை அமைக்கப்பட உள்ளதாக மீண்டும் ஒருமுறை முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதி செய்துள்ளார். மும்பை- அகமதாபாத் இடையே புல்லட் இரயில் சேவைக்கான பணிகள் வேகமாக நடைபெற்றுவரும் நிலையில், தென்னிந்தியாவிற்கான அறிவிப்பு ஆந்திரா முதல்வரிடம் இருந்து வந்துள்ளது.

மும்பை- அகமதாபாத் இடையேயான புல்லட் இரயில் வழித்தடம் அமைக்கும் பணிகளில் குஜராத் மாநிலத்திற்கான பணிகள் கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில் உள்ளதாக கூறும் இந்தியன் இரயில்வே (Indian Railway), புல்லட் இரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் உடன் அந்தந்த பிராந்திய வடிவமைப்பு வேலைப்பாடுகள் உடன் இருக்கும் தெரிவிக்கிறது.
மேலும், இதற்கான பணிகளில் பசுமையான சுற்றுச்சூழலையும் இதில் கருத்தில் கொள்வதாக இந்தியன் இரயில்வே உறுதியளிக்கிறது. உலகிலேயே அதிவேகத்தில் இயங்கக்கூடிய இரயில் சேவையாக விளங்கும் புல்லட் இரயில் சேவை ஆனது டெல்லி, மும்பை, சென்னை போன்ற முக்கியமான மாநகரங்களை மட்டுமின்றி, மைசூரு, நாக்பூர், வாரணாசி, அமிர்தசரஸ், ஹவுரா போன்ற 2ஆம் கட்ட மாநகரங்களை இணைக்கும் வகையிலும் விரைவில் கொண்டுவரப்பட உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட பரந்து விரிந்த நாட்டில் மக்களின் போக்குவரத்தை முடிந்தவரையில் எந்த அளவிற்கு விரைவுப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு விரைவுப்படுத்துவது அவசியமாகும். ஏனெனில், எல்லாரையும் விமான போக்குவரத்தை நோக்கி தள்ள முடியாது. ஆகையால், புல்லட் இரயில் சேவையில் தீவிரமாக இருக்கும் மத்திய அரசு நாம் எதிர்பார்த்ததை காட்டிலும் விரைவாக தென்னிந்தியாவில் புல்லட் இரயில் சேவையை கொண்டுவர உள்ளது.


Click it and Unblock the Notifications









