4,000 போர்ஷே, ஆடி கார்களுடன் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் கப்பல்!! இழுவை படகுகள் விரைந்தன!
சுமார் 4,000 போர்ஷே கார்களுடன் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக நமக்கு கிடைக்க பெற்றுள்ள படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

விமானங்களில் பயணம் செய்திருந்தாலும், கப்பல் பயணம் என்பது எப்போதுமே தனி உணர்வுமிக்கது. ஆனால் அதேநேரம் விமானங்களை காட்டிலும் கப்பல்களில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதற்கான உதவி உபகரணங்கள் அனைத்தும் முன்னெச்சரிக்கையாக பயணத்தை தொடங்குவதற்கு முன்பே கப்பலில் உள்ளதா என சோதித்துவிடுவர்.

இருந்தாலும் நடுக்கடலில் கப்பலில் ஏதேனும் அசாம்பாவிதங்கள் ஏற்படும்போது, அதனை சரிச்செய்ய வெளியில் இருந்து தேவைப்படும் உதவிகள் உடனடியாக கிடைப்பதில்லை. இதனால் கப்பல் மாலுமிகள் பயணத்தின்போது எப்போதுமே உஷார் நிலையில் இருப்பர். இருப்பினும் கப்பல் பயணங்களின்போது சில விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை.

ஒரு சில கப்பல் விபத்துகள் உலகளவில் கவனத்தை பெறும் அளவிற்கு பெரியதாகவும் முந்தைய காலங்களில் இருந்துள்ளன. ஆனால் விலையுயர்ந்த கார்களை விரும்புவோர்க்கு தற்போது நடைபெற்றிருக்கும் கப்பல் தீ விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். ஏனெனில் தொடர்ந்து புகையினை கக்கி கொண்டிருக்கும் இந்த கப்பலில் 4 ஆயிரம் போர்ஷே கார்களும், சில ஆடி & பெண்ட்லீ கார்களும் உள்ளன.

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் தான் ஆடி, போர்ஷே & பெண்ட்லீ பிராண்ட்கள் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கப்பலில் இருக்கும் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கார்களில் சில கார்கள் எலக்ட்ரிக் கார்களாம். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, கடந்த பிப்.21ஆம் தேதி அட்லாண்டிக் பெருங்கடலில் போர்ச்சுகலுக்கு சொந்தமான தீவு ஒன்றின் அருகே சென்று கொண்டிருந்த போது ஃபெலிசிட்டி ஏஸ் என பெயர் கொண்ட இந்த குறிப்பிட்ட கப்பலில் தீ பற்றி கொண்டுள்ளது.

இதனை அணைக்கும் முயற்சியில் பல கனரக இழுவை படகுகள் தொடர்ந்து ஈடுப்பட்டு வருவதாக இந்த கப்பலை இயக்கி கொண்டிருக்கும் மிட்சு O.S.K லைன் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீப்பற்றி கொண்ட அன்று கப்பலில் இருந்த 22 குழு உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்த நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கப்பல் இன்னமும் தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதாகவும், இருப்பினும் எண்ணெய் கசிவு கப்பலில் எங்கும் இல்லாததினால் நெருப்பின் அளவு தற்போதைக்கு பரவாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரச்சனை இல்லை என நினைத்துவிட வேண்டாம்.

ஏனெனில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அசோர்ஸ் தீவில் இருந்து கப்பல் மெதுமாக நகர்ந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது. இந்த கப்பலின் தீயினை அணைக்க முதற்கட்டமாக இரு அளவில் பெரிய இழுவை படகுகள் சம்பவம் நடந்த அன்றே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து ஒரு ரோந்து படகும் கூடுதலாக நீரை பீய்ச்சி அடிக்க சம்பவ இடத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இருப்பினும் தீ இன்னும் முற்றிலுமாக அணைக்கப்படாமல், கப்பலில் இருந்து தொடர்ந்து புகை வெளியாகி வருவதால் மேலும் இரு இழுவை படகுகள் இன்று (பிப்.23) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மிட்சுய் O.S.K லைன்ஸ் கருத்து தெரிவிக்கையில், "சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினர் உடனும் சேர்ந்து, சேதத்தை கட்டுப்படுத்தவும், நிலைமையை விரைவாக தீர்க்கவும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்" என்றது.

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள துறைமுக கேப்டன் அளித்த பேட்டியில், தீ அதன் தீவிரத்தை இழந்துள்ளது. இதனால் தீ இன்னும் சில மணிநேரங்களுக்கே இருக்கும். தீ அணைந்தப்பின் கப்பலை ஐரோப்பாவிற்கோ அல்லது பஹாமாஸிற்கோ தீ தடுப்பு குழுவினர் மற்றும் தொழிற்நுட்ப குழுவினரால் கொண்டு செல்ல முடியும் என்றார்.

Image Courtesy: Marinha Portuguesa
மேலும் இவர் ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், எலக்ட்ரிக் கார்களின் லித்தியம்-இரும்பு பேட்டரிகளினால் தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் தீ ஏற்பட்டதற்கு இந்த பேட்டரிகள் தான் காரணமா என்பது உறுதியாக தெரியவில்லை. "நிலைமை அனைத்தும் சீரானதும் தொடக்க மதிப்பீட்டிற்காக காப்பீடு குழு ஃபெலிசிட்டி ஏஸ் கப்பலுக்கு வரும்" என்கிறது மிட்சுய் O.S.K லைன்ஸ்.


Click it and Unblock the Notifications