சென்னை அண்ணா சாலையில் உருவான திடீர் பள்ளத்தில் பஸ், கார் சிக்கியதால் பரபரப்பு!
சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பஸ் மற்றும் கார் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்திற்கான காரணம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
சென்னை, அண்ணா சாலையில் ஜெமினி மேம்பாலம் அருகே இன்று சாலையில் ஏற்பட்ட திடீர் ராட்சத பள்ளத்தில் பஸ், கார் சிக்கிக் கொண்டன. இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்ததனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. பாதாளத்தில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் வழித்தடத்தால், அண்ணா சாலையில் அவ்வப்போது திடீர் பள்ளங்கள் உருவாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர்தான் அண்ணா சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. அது உடனடியாக மூடப்பட்டது. இந்த நிலையில், அந்த இடத்திற்கு அருகே இன்று உருவான புதிய பள்ளத்தில் ஹோண்டா சிட்டி காரும், மாநகர பஸ் ஒன்றும் சிக்கிக் கொண்டன.

பஸ் நின்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டதால், பஸ்சில் இருந்த 25 பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதில், 10 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினரும், காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் மற்றும் ஹோண்டா சிட்டி காரை கிரேன் உதவியுடன் மீட்டனர். மேலும், அந்த வழித்தடத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பள்ளத்தை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மெட்ரோ பணிகளால்தான் இந்த திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால், அண்ணா சாலையில் பயணிப்போர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும், போதிய பாதுகாப்பு முறைகளுடன் மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான சுரங்கப்பாதையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

அந்த பஸ் நின்று கொண்டிருந்தபோது விபத்து நடந்ததால், பயணிகள் லேசான காயங்களுடன் தப்பினர். இதுவே வேகமாக வரும்போது நிகழ்ந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும். எனவே, அந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளிடையே இந்த திடீர் பள்ள நிகழ்வுகள் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், தற்போது அந்த வழித்தடத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கடற்கரை சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தால் அந்த வழியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. நாளை காலை இந்த பாதையில் போக்குவரத்து சரியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த பாதையை பயன்படுத்துவோரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க மெட்ரோ நிர்வாகம் போதுமான பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கைகள் பல்வேறு தரப்பில் இருந்தும் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications








