ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
அரசு பேருந்தில் பாட்டி மற்றும் பேத்திக்கு இலவச பயண டிக்கெட் வழங்கப்பட்டாலும், அவர்கள் கொண்டு சென்ற 4 லவ் பேர்ட்ஸ் (Love Birds)-க்கு அதிரடியாக ரூ.444 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்பட்டு உள்ளது. எங்கு இந்த சம்பவம் நடந்துள்ளது? என்பது உள்பட இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
இலவச பேருந்து பயணங்கள் மூலம் மகளிரை கவரும் முயற்சியில் இந்தியாவின் பல்வேறு மாநில அரசாங்கங்கள் ஈடுப்பட ஆரம்பித்துள்ளன. ஆனால், இதற்கு விதை போட்டது நமது தமிழ்நாடு அரசு என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. தமிழ்நாட்டை பின்பற்றி, கர்நாடகா மாநில அரசும் மகளிருக்கு இலவச அரசு பேருந்து பயண திட்டத்தை சக்தி என்கிற பெயரில் அறிமுகப்படுத்தியது.

இதன் காரணமாக, கர்நாடகாவில் பெண்களினால் அரசு பேருந்துகள் நிரம்பி வழிகின்றன. அதேநேரம் தமிழ்நாட்டை போல் கர்நாடகாவிலும் அரசு பேருந்துகளில் முண்டியடித்து சீட் பிடிக்க பெண்கள் வாக்குவாதங்களில் ஈடுப்படுவதையும் பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டிலும் சரி, கர்நாடகாவிலும் சரி பெண்களுக்கு மட்டுமே அரசு பேருந்து பயணங்கள் இலவசமே தவிர்த்து அவர்கள் கொண்டு செல்லும் சுமைகளுக்கு அல்ல.
அதாவது, பெண்கள் கொண்டு செல்லும் சுமைகள் அதிகமாக இருந்து, அவற்றிற்கு தனியாக டிக்கெட் எடுக்க வேண்டி இருந்தால், அதற்காக பெண்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இதற்கு உதாரணமாக, கர்நாடகாவில் அரசு பேருந்தில் பயணம் செய்த பாட்டியும், பேத்தியும் கொண்டு சென்ற லவ் பேர்ட்ஸுக்கு டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அதாவது, பாட்டியும் பேத்தியும் சக்தி திட்டத்தின் கீழ் இலவசமாக பேருந்தில் பயணம் செய்த நிலையில், அவர்கள் கூண்டில் கொண்டு சென்ற 4 லவ் பேர்ட்ஸுக்கு ரூ.444 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இவர்கள் பெங்களூரில் இருந்து மைசூருக்கு அரசு KSRTC பேருந்தில் சென்றுள்ளனர். அரசு பேருந்துகளில் பெங்களூரில் இருந்து மைசூருக்கு செல்ல சிறுவர், சிறுமிகளுக்கு ரூ.111 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
அதாவது, அரை டிக்கெட் கட்டணம் ரூ.111 ஆகும். லவ் பேர்ட்ஸ் ஒவ்வொன்றையும் குழந்தைகளாக கருதியுள்ள நடந்துனர், மொத்தமாக 4 லவ் பேர்ட்ஸுக்கு ரூ.444ஐ டிக்கெட் கட்டணமாக வசூலித்து உள்ளார். இதனை அறிந்த அந்த பேருந்தில் சென்ற ஒருவர், லவ் பேர்ட்ஸுக்கு வழங்கப்பட்ட டிக்கெட்டை தனது மொபைல் போனில் படம் பிடித்து இணையத்தில் வெளியிட, அது தற்போது சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
பேருந்தில் தங்களுக்கு பிடித்த இடத்தில் அமர்ந்துக் கொண்ட இந்த பாட்டியும், பேட்டியும் தங்களுக்கு இடையில் இருந்த இருக்கையில் தாங்கள் கொண்டு சென்ற லவ் பேர்ட்ஸ் கூண்டை வைத்துள்ளனர். 4 லவ் பேர்ட்ஸ் உள்ளே இருந்தாலும், இந்த கூண்டு அவ்வளவு பெரியதாக இல்லை. இருவரில் ஒருவர் தனது மடியில் வைத்து கூட கொண்டு சென்றிருக்கலாம்.
ஆனால், சவுகரியமாக பயணம் செய்வதற்காக தனி இருக்கையில் பறவை கூண்டை இவர்கள் வைத்துள்ளனர். இதனை கண்ட பேருந்து நடத்துனர் தனி இருக்கைக்காக அவர்களிடம் இருந்து டிக்கெட் கட்டணத்தை வசூலித்துள்ளார். அப்படியிருந்தாலும், ஒரு இருக்கைக்கான டிக்கெட் கட்டணத்தை மட்டுமே பேருந்து நடத்துனர் வசூலித்து இருக்க வேண்டும் அல்லவா... ஆனால், இந்த நடத்துனர் 4 அரை டிக்கெட்களுக்கான கட்டணத்தை வசூலித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பறவைகளை குழந்தைகளாக கருதுவது ஒன்றும் தவறில்லை. ஆனால், பேருந்தில் அவற்றிற்கும் அரை டிக்கெட் கொடுத்து இருப்பது கொஞ்சம் டூ மச். டூ மச் என்பதை தாண்டி, இது விதியை மீறிய செயல் ஆகும். ஏனெனில், முறைப்படி பார்த்தால் இதற்கு லக்கேஜ் டிக்கெட்டிற்கான கட்டணமே வசூலிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
Source: TV9 Kannada


Click it and Unblock the Notifications








