ரிஷப் பண்ட்டை காப்பாற்றியவர்களுக்கு இவ்ளோ பெரிய பரிசா! நாடே இன்னைக்கு அவங்களை பத்திதான் பேசிகிட்டு இருக்கு!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் ரிஷப் பண்ட் (Rishab Pant). இவர் சமீபத்தில் விபத்தில் (Accident) சிக்கிய சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியது. ஆனால் ஹரியானா ரோடுவேஸில் பணியாற்றி வரும் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் அவரை சரியான சமயத்தில் காப்பாற்றினர்.
இந்த பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் செய்த காரியம் மனித நேயத்திற்கு எடுத்துக்காட்டு. எனவே அவர்கள் இருவரும் தற்போது கௌரவிக்கப்பட்டுள்ளனர். ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் (Manohar Lal Khattar), அவர்கள் இருவரையும் கௌரவித்துள்ளார். ரிஷப் பண்ட்டை காப்பாற்றிய பஸ் டிரைவரின் பெயர் சுஷில் குமார் ஆகும். அதே நேரத்தில் கண்டக்டரின் பெயர் பரம்ஜித் ஆகும். குடியரசு தினத்தையொட்டி (Republic Day) நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர்கள் இருவரையும் ஹரியானா மாநில அரசு கௌரவித்துள்ளது.

முதலமைச்சர் கையால் விருது!
இந்த நிகழ்ச்சியில் முதலில் காவலர்களின் மோட்டார்சைக்கிள் அணிவகுப்பு நடைபெற்றது. இதை தொடர்ந்து பஸ் டிரைவர் சுஷில் குமார் மற்றும் கண்டக்டர் பரம்ஜித் ஆகிய இருவரும் கௌரவிக்கப்பட்டனர். ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், அவர்கள் இருவருக்கும் விருது வழங்கினார். ஒரு மாநில முதல்வரின் கையால் விருது பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. இதற்கிடையே ரிஷப் பண்ட் தற்போது உடல் நலம் தேறி வருகிறார். அவர் மீண்டும் கிரிக்கெட் களத்தில் சிக்சர்களை பறக்க விட வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
பஸ் டிரைவர் சுஷில் குமார் மற்றும் கண்டக்டர் பரம்ஜித் ஆகியோர் அரசால் கௌரவிக்கப்பட்டிருப்பது, சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு தயங்காமல் உதவலாம் என்பதை பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டுவதாக உள்ளது. சாலை விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றால், அவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய பலரும் முன்வருவதில்லை. கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் என அலைய வேண்டியிருக்கும் என்று பொதுமக்கள் பலரும் அச்சப்படுவதுதான் இதற்கு காரணம்.
நீங்களும் உதவி செய்யுங்கள்!
ஆனால் நீங்கள் அவ்வாறு அச்சப்பட வேண்டியதில்லை. ஏனெனில் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்பவர்களை எந்த வகையிலும் துன்புறுத்தவோ அல்லது அலைகழிக்கவோ கூடாது என இந்தியாவின் உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. அத்துடன் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு மற்றவர்கள் உதவி செய்ய வேண்டும் என்பதற்காக அரசும் இதுதொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கு அரசு பணத்தை கூட பரிசாக வழங்கி வருகிறது. எனவே சாலை விபத்தில் சிக்கியவர்கள் யாரைவாது கண்டால் தயங்காமல் உதவி செய்யுங்கள்.
அதிகாலையில் கவனம்!
அதேபோல் அதிகாலை நேரங்களில் வாகனங்களை ஓட்டும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருங்கள். ரிஷப் பண்ட் விபத்து கூட அதிகாலை சுமார் 5.30 மணியளவில்தான் நடைபெற்றது. அவர் புது டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. டேராடூன்தான், ரிஷப் பண்ட்டின் சொந்த ஊர் ஆகும். குடும்பத்தினரை காண சென்று கொண்டிருந்த நேரத்தில், துரதிருஷ்டவசமாக அவரது கார் விபத்தில் சிக்கி விட்டது.
ரிஷப் பண்ட் மிகவும் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்த சமயத்திலும் நாம் அதிவேகத்தில் வாகனங்களை ஓட்ட கூடாது. அதுவும் குறிப்பாக தூக்க கலக்கம் ஏற்படும் அதிகாலை நேரத்தில் கண்டிப்பாக அதிவேகத்தில் பயணிப்பதை நாம் தவிர்த்து விட வேண்டும். நல்ல வேளையாக ரிஷப் பண்ட்டின் கார் விபத்தில் சிக்கிய சமயத்தில், சுஷில் குமார் மற்றும் பரம்ஜித் ஆகியோர் பணியில் இருந்த பஸ் அந்த வழியாக வந்தது.
விபத்தை பார்த்ததும் அவர்கள் இருவரும் பஸ்ஸை நிறுத்தி விட்டு, உடனடியாக ரிஷப் பண்ட்டை மீட்டனர். ரிஷப் பண்ட் இந்த விபத்தில் இருந்து விரைவில் மீண்டு வர வேண்டும் என ரசிகர்கள் மட்டுமல்லாது, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அவரது சக கிரிக்கெட் வீரர்கள் பலரும் சமூக வலை தளங்கள் வாயிலாக தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அவர்களுடன் இணைந்து, ரிஷப் பண்ட் மீண்டு வர நாமும் பிரார்த்திப்போம்.


Click it and Unblock the Notifications








