சாதாரண டூத்பேஸ்ட்டை வைத்து பெரிய பஞ்சாயத்தை அசால்டாக முடித்த பஸ் டிரைவர்! இவ்ளோ நாளா இது நமக்கு தெரியாம போச்சே
இந்திய சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையே சண்டைகள் நடைபெறுவதை நம்மால் அடிக்கடி பார்க்க முடியும். குறிப்பாக வேறு ஏதேனும் ஒரு வாகனத்தால், தங்கள் கார்களில் கீறல்கள் விழுந்து விட்டால், அதன் உரிமையாளர்கள் ருத்ர தாண்டவமாடி விடுகின்றனர். கீறல்களை சரி செய்ய சற்று அதிகமாக செலவு ஆகும் என்பதுதான் இதற்கு காரணம்.
யாரால் கீறல் விழுந்ததோ, அவரிடம் இருந்து பணத்தை வசூல் செய்யாமல், கார் உரிமையாளர்கள் சம்பவ இடத்தை விட்டு நகர்வதில்லை. ஆனால் கேரள மாநிலத்தை சேர்ந்த அரசு பஸ்ஸின் டிரைவர் ஒருவர், இது போன்ற ஒரு பிரச்னையில் இருந்து மிகவும் சுலபமாக மீண்டு வந்துள்ளார். இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள கல்பெட்டா என்ற பகுதியில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு, அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios) காரின் பின் பகுதியில், அரசு பஸ் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் பின் பகுதியில், கீறல்கள் விழுந்தன. இதனால் கோபமடைந்த ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் உரிமையாளர், அரசு பஸ்சுக்கு வழி விடாமல் நின்று கொண்டார். கீறல்களை சரி செய்வதற்கு தேவையான பணத்தை கொடுத்தால் மட்டுமே, அரசு பஸ்ஸை மேற்கொண்டு செல்ல அனுமதிக்க முடியும் என அவர் கூறியதாக தெரிகிறது.

ஆனால் சம்பந்தப்பட்ட அரசு பஸ்ஸின் டிரைவர் இந்த பிரச்னையை கூலாக கையாண்டுள்ளார். அவர் உடனடியாக ஒரு டூத்பேஸ்ட்டை எடுத்து வந்தார். பின்னர் அந்த டூத்பேஸ்ட்டை கீறல்கள் விழுந்த இடத்தில் 'அப்ளை' செய்தார். இதற்கு பிறகு ஒரு துணியை கொண்டு அவர் துடைக்க, கீறல்கள் மாயமாய் மறைந்தன.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஆச்சரியமடைந்து விட்டனர். ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் உரிமையாளரும் கூட, இதை பார்த்து ஆச்சரியமடைந்திருப்பார் என்று நம்பலாம். இந்த சம்பவத்தின் வைரல் வீடியோவை (Viral Video) நியூஸ் ஒன் வயநாடு தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வைரல் வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த சம்பவத்தில் யார் மீது தவறு? என்பது நமக்கு உறுதியாக தெரியவில்லை. ஒருவேளை பஸ் டிரைவர் தவறு செய்திருந்தாலும் கூட, ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் உரிமையாளர் இவ்வாறு நடந்திருக்க கூடாது. அதாவது அரசு பஸ்ஸை அவர் தடுத்து நிறுத்தியிருக்க கூடாது.
ஏனெனில் அரசு பஸ்ஸை தடுத்து நிறுத்துவது சரியான விஷயம் கிடையாது. ஒருவேளை யாராவது இப்படி நடந்து கொண்டால், அவர்கள் மீது, அரசு பஸ்ஸின் டிரைவர் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க முடியும். இது நடக்கும்பட்சத்தில் அரசு பஸ் பயணம் செய்ய விடாமல் தடுத்தது மற்றும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில், சம்பந்தப்பட்ட நபரின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஒருவேளை அரசு பஸ் டிரைவர் தவறு செய்திருந்தால், அந்த பஸ்ஸின் பதிவு எண்ணை குறித்து கொண்டு, ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் உரிமையாளர், காவல் நிலையத்தில் சட்டப்படி புகார் அளித்திருக்கலாம். இதுவே சரியான நடைமுறையாக இருக்கும். இந்த தகவல், எதிர்காலத்தில் மற்றவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.
ஆனால் இங்கே அரசு பஸ் டிரைவரின் புத்திசாலித்தனத்தை பாராட்டியே ஆக வேண்டும். இக்கட்டான ஒரு சூழ்நிலையில் டூத்பேஸ்ட்டை பயன்படுத்தி அவர் பிரச்னையை சுமூகமாக முடித்து வைத்துள்ளார். கார்களில் ஏற்படும் கீறல்களை சரி செய்ய டூத்பேஸ்ட்டை நாம் பயன்படுத்தலாம். ஆனால் சிறிய கீறல்களை சரி செய்ய மட்டுமே டூத்பேஸ்ட் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








