ஹெலிகாப்டருக்கு கோயிலில் பூஜை போட்ட தொழிலதிபர்... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடி போயிருவீங்க!
கார் மற்றும் பைக் போன்ற வாகனங்களை வாங்கினால், கோயிலுக்கு சென்று பூஜை செய்வது பலரின் வழக்கமாக உள்ளது. ஷோரூமில் வண்டியை டெலிவரி எடுத்த உடனே, நேராக கோயிலுக்குதான் செல்வார்கள். அங்கு பூஜைகளை முடித்த பிறகுதான், அன்றாட பணிகளுக்கு வாகனத்தை பயன்படுத்த தொடங்குவார்கள்.
எனவே கோயில்களில் வாகனங்களுக்கு பூஜை செய்யப்படுவதை நாம் அடிக்கடி காண முடியும். ஆனால் கோயில்களில் ஹெலிகாப்டருக்கு (Helicopter) பூஜை செய்து பார்த்துள்ளீர்களா? இப்படி ஒரு காட்சியை நாம் பார்த்திருப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. ஆனால் திரைப்படங்களில் கூட காண முடியாத இந்த அதிசயம், தற்போது நிஜத்தில் நடைபெற்றுள்ளது. தொழிலதிபர் ஒருவர் தனது புதிய ஹெலிகாப்டருக்கு கோயிலில் பூஜை போட்டு, அனைவரது புருவங்களையும் உயர செய்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த பிரபலமான தொழிலதிபர்களில் (Businessman) ஒருவர் போயின்பள்ளி ஸ்ரீனிவாஸ் ராவ் (Boinpally Srinivas Rao). இவர் சமீபத்தில் புதிய ஹெலிகாப்டர் ஒன்றை வாங்கியுள்ளார். போயின்பள்ளி ஸ்ரீனிவாஸ் ராவ் வாங்கியிருப்பது, ஏர்பஸ் ஏசிஹெச்-135 (Airbus ACH-135) ஹெலிகாப்டர் ஆகும். இந்த புதிய ஹெலிகாப்டருக்கு கோயிலில் பூஜை செய்திருப்பதன் மூலம்தான், போயின்பள்ளி ஸ்ரீனிவாஸ் ராவ், அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
ஐதராபாத் நகரில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள யாதாத்ரி ஸ்ரீ லஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலில்தான், தொழிலதிபர் போயின்பள்ளி ஸ்ரீனிவாஸ் ராவின் புதிய ஹெலிகாப்டருக்கு பூஜை போடப்பட்டுள்ளது. போயின்பள்ளி ஸ்ரீனிவாஸ் ராவுடன், அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரும் புதிய ஹெலிகாப்டரில் பறந்து வந்தனர். அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள போயின்பள்ளி ஸ்ரீனிவாஸ் ராவ், பிரதீமா குழுமத்தின் (Prathima Group) உரிமையாளராக உள்ளார்.
பிரதீமா குழுமம் மிகவும் புகழ்பெற்ற ஆகும். உள்கட்டமைப்பு, ஆற்றல், உற்பத்தி மற்றும் டெலிகாம் துறைகளில் பிரதீமா குழுமம் தொழில் செய்து வருகிறது. அத்துடன் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளும் பிரதீமா குழுமத்திடம் இருக்கின்றன. இதன் மூலம் போயின்பள்ளி ஸ்ரீனிவாஸ் ராவ், அனைவராலும் அறியப்படும் முகங்களில் ஒருவராக உள்ளார். அவர் தற்போது வாங்கியுள்ள புதிய ஹெலிகாப்டரின் விலை 5.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என கூறப்படுகிறது.
5.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது, இந்திய மதிப்பில் தோராயமாக 48 கோடி ரூபாய் ஆகும். இவ்வளவு விலை உயர்ந்த ஒரு ஹெலிகாப்டரை, தொழிலதிபர் போயின்பள்ளி ஸ்ரீனிவாஸ் ராவ் வாங்கியிருப்பது, பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது. யாதாத்ரி ஸ்ரீ லஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலில் அந்த ஹெலிகாப்டருக்கு பூஜை செய்யப்படும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்த ஹெலிகாப்டர் புத்திசாலித்தனமானது, சுறுசுறுப்பானது மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்தது என அதன் உற்பத்தியாளரான ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஹெலிகாப்டரில் 6 பயணிகள் பயணம் செய்ய முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் இந்த ஹெலிகாப்டரில் அதிகபட்சமாக சுமார் 260 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்ய முடியும் எனவும் கூறப்படுகிறது. அத்துடன் ஒரு முறை முழுமையாக எரிபொருள் நிரப்பினால், 650 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த விலை உயர்ந்த ஹெலிகாப்டரின் இன்டீரியர் மிகவும் சொகுசாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்பவர்களுக்கு களைப்பே ஏற்படாது. இதுபோன்ற சிறப்பம்சங்களின் காரணமாகவே தொழிலதிபர் போயின்பள்ளி ஸ்ரீனிவாஸ் ராவ் வாங்கியுள்ள புதிய ஹெலிகாப்டரின் விலை மிகவும் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டரின் உற்பத்தி நிறுவனமான ஏர்பஸ், விமான உற்பத்தியிலும் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








