ரிப்பேரை சரி செய்யாத கோபத்தில் டஸ்ட்டரை குப்பை வண்டியாக்கிய தொழிலதிபர்!
ரிப்பேரை சரி செய்யாத கோபத்தில், ரெனோ டஸ்ட்டரை குப்பை வண்டியாக மாற்றி தானம் வழங்கியுள்ளார் ராஜஸ்தானை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்.
இந்த சம்பவம் ரெனோ நிறுவனத்துக்கு பெரும் இக்கட்டை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்லைடரில் கூடுதல் தகவல்களை காணலாம்.

தொழிலதிபர்
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரை சேர்ந்தவர் ராஜேஷ் பரேட்டா. ஆசை ஆசையாய் ரெனோ டஸ்ட்டரை முன்பதிவு செய்து வாங்கியுள்ளார்.

பிரச்னை
வாங்கி முதல் நாளிலிருந்து அந்த டஸ்ட்டர் எஸ்யூவியின் ஏசி மற்றும் மின் சாதனங்களில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக, ரெனோ சர்வீஸ் மையத்தில் ரிப்பேரை சரிசெய்து தர கொடுத்துள்ளார்.

இழுத்தடிப்பு
டஸ்ட்டரில் இருந்த பிரச்னைகளை சரிசெய்யாமல் சர்வீஸ் மையத்தினர் இழுத்தடித்துள்ளனர். 200 நாட்களுக்கு மேல் டஸ்ட்டர் எஸ்யூவி அந்த சர்வீஸ் மையத்திலேயே இருந்துள்ளது. இதனால், கோபமடைந்த ராஜேஷ் செய்த காரியம்தான் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

குப்பை வண்டி
ஆணியே புடுங்க வேண்டாம் என்று சர்வீஸ் மையத்திலிருந்து டஸ்ட்டரை வீட்டிற்கு எடுத்து வந்துவிட்டார். மேலும், டஸ்ட்டரில் குப்பை வண்டி என எழுதி, மோரக் ஸ்டேஷன் கிராம பஞ்சாயத்துக்கு தானமாக வழங்கிவிட்டார். இப்போது குப்பை வண்டியாக சுற்றி வருகிறது அந்த டஸ்ட்டர்.

குப்பையை கிளறினால்...
டஸ்ட்டர் குப்பை வண்டியானது போல ஏற்கனவே பல சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து இருக்கின்றன. மெர்சிடிஸ் கார் மற்றும் ஜாகுவார் கார்களை கழுதைகளை கட்டி இழுத்த சம்பவம். ரோல்ஸ்ராய்ஸ் கார்களை குப்பை வண்டியாக்கிய மஹாராஜா என இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வந்திருக்கின்றன.

கார் நிறுவனங்களுக்கு பாடம்
காரை கூவி கூவி விற்பதோடு மட்டும் நில்லாமல், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சர்வீஸ் மற்றும் சேவை வழங்குவது கார் நிறுவனங்களின் கடமை. இது ரெனோவுக்கு மட்டுமல்ல, பிற கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் ஒரு பாடமாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
Source: Team BHP


Click it and Unblock the Notifications








