ஆயுசுக்கும் மறக்க முடியாத தீபாவளி பரிசை ஊழியர்களுக்கு வழங்கிய மருந்து கம்பெனி ஓனர்! பெரிய மனசு சார் உங்களுக்கு
இந்தியாவில் பண்டிகை காலம் (Festive Season) களைகட்ட தொடங்கி விட்டது. தீபாவளி (Diwali) பண்டிகைக்கு கூட இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த நேரத்தில் பல்வேறு நிறுவனங்களும் போனஸ் (Bonus), இனிப்புகள் (Sweets) என தங்கள் ஊழியர்களை மகிழ்ச்சியில் திக்கு முக்காடி வைக்க தொடங்கியுள்ளன.
ஆனால் ஒரு நிறுவனம் ஒரு படி மேலே போய், ஊழியர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த தீபாவளியை மறக்க முடியாத வகையிலான பரிசு ஒன்று வழங்கி அசத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் பன்ச்குலா பகுதியில் செயல்பட்டு நிறுவனங்களில் ஒன்று மிட்ஸ்கார்ட் (MitsKart). இது ஒரு பார்மாசூட்டிக்கல் நிறுவனம் (Pharmaceutical Company) ஆகும்.

அதாவது மருந்துகளை விற்பனை செய்யும் நிறுவனம். எம்.கே. பாட்டீயா என்பவர் இதன் உரிமையாளராக உள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தனது நிறுவனத்தில் வேலை செய்யும் 12 ஊழியர்களை அவர் தேர்வு செய்தார். அவர்களுக்கு டாடா பன்ச் (Tata Punch) கார்களை பரிசாக வழங்கி, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் எம்.கே. பாட்டீயா!
தனது நிறுவனத்தில் வேலை செய்பவர்களை வெறும் ஊழியர்களாக நான் நினைக்கவில்லை என எம்.கே.பாட்டீயா கூறியுள்ளார். அதற்கு பதிலாக அவர்களை நட்சத்திரங்கள் என அவர் வர்ணித்துள்ளார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ஆபீஸ் பாய்-ஆக வேலைக்கு சேர்ந்த ஒருவருக்கு கூட, தற்போது டாடா பன்ச் கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

எம்.கே.பாட்டீயா தேர்வு செய்த 12 ஊழியர்களில் அவரும் ஒருவர் ஆவார். இந்த 12 ஊழியர்களும் நிறுவனத்திற்கு விசுவாசமாக இருந்ததாகவும், வளர்ச்சிக்கு உதவி செய்ததாகவும் எம்.கே.பாட்டீயா கூறியுள்ளார். டாடா பன்ச் காரானது, இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரக கார் ஆகும்.
டாடா நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே, பன்ச் காரும் மிகவும் பாதுகாப்பானது. ஆம், குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனைகளில் டாடா பன்ச் கார் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (5-star Safety Rating) வாங்கி அசத்தியுள்ளது. எனினும் இது ஓரளவிற்கு விலை (Price) குறைவான கார்தான்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா பன்ச் காரின் ஆரம்ப விலை வெறும் 6 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 10.10 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது.
செயல்திறனை பொறுத்தவரையில் டாடா பன்ச் காரில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஆப்ஷன் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 86 பிஹெச்பி பவர் மற்றும் 115 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. டாடா பன்ச் காரில், சிஎன்ஜி இன்ஜின் (CNG Engine) ஆப்ஷனும் இருக்கிறது. பெட்ரோல் வெர்ஷனில் வழங்கப்பட்டுள்ள அதே இன்ஜின்தான் சிஎன்ஜி வெர்ஷனிலும் வழங்கப்படுகிறது. ஆனால் சிஎன்ஜி மூலம் இயங்கும்போது இதன் பவர் அவுட்புட் 74 ஹெச்பி பவர் மற்றும் 103 என்எம் மட்டுமே.
அதேபோல் சிஎன்ஜி இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்படுகிறது. எனினும் சிஎன்ஜி இன்ஜின் சிறப்பான மைலேஜ் (Mileage) வழங்கும். பல்வேறு சிறப்பம்சங்கள் இருப்பதாலும், விலை குறைவு என்பதாலும், ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான டாடா பன்ச் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா பன்ச் பரிசாக கிடைத்துள்ள ஊழியர்களில் பலருக்கு இதுதான் முதல் கார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான ஒரு விஷயம். பொருளாதார சூழல்களால் கார் கனவை நிறைவேற்ற முடியாமல் தவித்து கொண்டிருந்த ஊழியர்கள் இதனால் பலன் அடைவார்கள். அனேகமாக இனி அவர்களின் ரிங்டோன் எங்க முதலாளி... நல்ல முதலாளி பாடலாகதான் இருக்கும்!


Click it and Unblock the Notifications








