நேரம், எரிபொருளில் சிக்கனம்... இந்த 'ரயில்பஸ்' சேவை தேவை இக்கணம்!!
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பரபரப்பு மிக்க காலை, மாலை நேரங்களில் வாகனங்களில் செல்வது நரகத்துக்கு ஒப்பானதாக மாறிவிட்டது. அதிலும், பஸ்களில் அலுவலகம் அல்லது முக்கிய விஷயங்களுக்காக செல்வோரின் நிலை சொல்லித் தெரிய வேண்டாம்.
அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கு, மாநகரங்களில் பஸ்களுக்கு தனி வழித்தடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக காணப்படுகிறது. இந்த நிலையில், இங்கிலாந்தில் செயல்படும் வரும் ரயில்பஸ் என்றதொரு திட்டம் இந்த கோரிக்கைகளுக்கு வலு சேர்க்கும் சிறப்புகளை கொண்டுள்ளது. ஆவலைத் தூண்டுவதாக இருப்பதோடு, இது இக்கணமே தேவை என்ற ஆதங்கத்தையும் நம் மனதில் எழுப்புகிறது.

கேம்ப்ரிட்ஜ் பஸ் வழித்தடம்
இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ், ஹட்டிங்டன், செயிண்ட் ஐவ்ஸ் ஆகிய பகுதிகளை இணைக்கும் விதத்தில், 24 கிமீ தூரத்திற்கு இந்த ரயில்பஸ் வழித்தடம் அமைக்கப்பட்டிருக்கிறது. மிக முக்கியமான பகுதிகளை இணைக்கும் விதத்தில், இந்த வழித்தடம் மாறியிருக்கிறது.

பொது பயன்பாடு
கடந்த 2011ம் ஆண்டு இந்த ரயில் பஸ் வழித்தடம் பொது பயன்பாட்டுக்காக அர்பணிக்கப்பட்டது. இதனை கேம்ப்ரிட்ஜ் ரயில்பஸ் வழித்தடம் என்றே குறிப்பிடுகின்றனர். ஏற்கனவே இருந்த ரயில் வழித்தடத்தையொட்டியே, இந்த ரயில்பஸ் வழித்தடமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

நவீன கால ரயில்பஸ்!
அனைவரும் நினைப்பது போன்று தண்டவாளத்தில் இந்த ரயில் பஸ் செல்வதில்லை. மாறாக, பஸ்களுக்கு என அமைக்கப்பட்டிருக்கும் தனி வழித்தடத்தில் இந்த ரயில்பஸ் இயக்கப்படுகிறது. இதற்கென சிறிய அளவிலான பிரத்யேக உலோக சக்கரங்கள் பஸ்சின் பக்கவாட்டில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது பஸ் கவிழாமல் செல்வதற்கும் உதவிபுரிகிறது.

தொழில்நுட்பம்
ரயில் போன்றே இந்த ரயில் பஸ்சிலும் ஸ்டீயரிங் சிஸ்டத்தை கட்டுப்படுத்த அவசியமில்லை. வழித்தடத்தில் இருக்கும் வளைவுகளுக்கு தகுந்தாற்போன்று, இந்த பஸ்சின் பக்கவாட்டில் இருக்கும் உலோக சக்கரங்கள் மூலமாக இயக்க முடியும். இதற்காக, வழித்தடத்தின் இருபுறத்திலும் சிறிய தடுப்புச் சுவர்கள் உள்ளன.

வேகம்
அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகம் வரை இந்த ரயில்பஸ் செல்லும். இதுவரை விபத்து குறித்த தகவல் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

விரயங்களுக்கு முற்றுப்புள்ளி...
நேர விரயத்தையும், எரிபொருள் விரயத்தையும் தவிர்க்க முடியும். மேலும், சொகுசான பயண அனுபவத்தை பயணிகள் பெற முடியும். நகரச் சாலைகளில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் குறையவும் இந்த திட்டம் உதவுவதோடு, விபத்துக்களும் குறையும்.

வரப்பிரசாதம்
ரயில் போன்று குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை என்றில்லாமல், தொடர்ச்சியான நேர இடைவெளியில் இயக்க முடியும். எனவே, அலுவலக நேரத்திற்கு தக்கவாறு பயணிகள் தங்களுக்கு ஏதுவான நேரத்தில் செல்ல முடியும். ரயில் போன்று குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்ற நிலை இருக்காது.

முன்னுரிமை
மெட்ரோ, மோனோ ரயில் திட்டங்களுக்கு கொடுக்கப்படும் முன்னுரிமையை போன்று, இந்த திட்டத்திற்கு கொடுத்து முக்கிய வழித்தடங்களில் பிரத்யேக வழித்தடத்தை ஏற்படுத்தினால் சிறப்பானதாக இருக்கும். ஐக்கிய பேரரசில் இருப்பது போன்று, தனியாக வழித்தடம் அமைக்காவிட்டாலும், முக்கிய சாலைகளில் பொது பயன்பாட்டு பஸ்களுக்கு தனி வழித்தடத்தை ஏற்படுத்திக் கொடுத்தால், சாலைகளில் கார்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என்பதோடு, விபத்துக்களும் குறையும்.


Click it and Unblock the Notifications








