அந்த மனசுதான் சார் கடவுள்... கொரோனாவிற்கு எதிரான போரில் உலகையே திரும்பி பார்க்க வைத்த ஜஸ்டின் ட்ரூடோ
மனைவி உயிருக்கு போராடும் நிலையிலும், கொரோனா வைரஸ் பாதிப்புகளில் இருந்து கனடா மக்களை காப்பாற்ற அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எடுத்து வரும் நடவடிக்கைகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.

ஒட்டுமொத்த உலகமும் இன்று ஒரு சேர உச்சரித்து வரும் ஒரு பெயர் கொரோனா வைரஸ் (Coronavirus). கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்ந்த கோவிட்-19 (Covid-19) என பெயர் சூட்டப்பட்டுள்ள வைரஸ், வல்லரசு நாடுகளையே தற்போது கலங்கடித்து வருகிறது. கோவிட்-19 வைரஸ் தாக்கியதால், உலகம் முழுவதும் தற்போது வரை 11,431 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர 2,77,170 பேருக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனா, இத்தாலி, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கோவிட்-19 வைரஸால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கோவிட்-19 வைரஸ் மனித உயிர்களை பறிப்பதுடன் மட்டுமல்லாது, பொருளாதாரத்தையும் சீர்குலைத்துள்ளது.

குறிப்பாக ஆட்டோமொபைல் துறை கதிகலங்கி போயுள்ளது. கோவிட்-19 வைரஸின் பூர்வீகமாக கூறப்படும் சீனாவில், வாகனங்களின் விற்பனை மிக கடுமையாக சரிந்துள்ளது. சீனா மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளிலும் வாகன விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர விமான போக்குவரத்து துறையும் முற்றிலுமாக முடங்கி போயுள்ளது.

கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டுமென்றால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ளும்படியும், அனைத்து நாடுகளின் அரசாங்கங்களும் அறிவித்துள்ளன. அத்துடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கு மிக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனால் ஏராளமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுதவிர முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் பலவும் தங்கள் தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடியுள்ளன. எனவே வாகன உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகமே இவ்வாறு தத்தளித்து கொண்டுள்ள நிலையில், கனடாவில் இருக்கும் வாகன தொழிற்சாலைகள் இனி மருத்துவ உபகரணங்களை தயாரிக்கவுள்ளன.

ஆம், கோவிட்-19 வைரஸை எதிர்ப்பதற்கான மருத்துவ உபகரணங்களை கனடாவில் இயங்கி வரும் வாகன தொழிற்சாலைகளில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற உலக நாடுகளை போலவே, கோவிட்-19 வைரஸால் கனடாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனடாவில் 900க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவியே கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே ஒட்டாவா நகரில் உள்ள தனது வீட்டில் ஜஸ்டின் ட்ரூடோவும் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். மனைவி பாதிக்கப்பட்டுள்ள இக்கட்டான நிலையிலும் கூட, கோவிட்-19 வைரஸை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் பற்றியே ஜஸ்டின் ட்ரூடோ சிந்தித்து கொண்டுள்ளார்.

ஜஸ்டின் ட்ரூடோ தனது வீட்டில் வைத்து பத்திரிக்கையாளர்களை சந்திப்பது வழக்கம். இதன்படி சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், 'கனடாவில் வசிக்கும் மக்கள் வீட்டு வாடகை கட்டுவதை பற்றியும், குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் கட்டுவதை பற்றியும், வேலையை பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்.

கனடா மக்களின் வேலை, வருமானம், குடும்பத்தை நாங்கள் பாதுகாப்போம்' என்றார். அத்துடன் இதற்கான திட்டங்களையும் அறிவித்து, கனடா மக்களின் கவலையை போக்கினார். இதற்கு அடுத்தபடியாக மருத்துவ துறைக்கு தேவையான உதவிகளை செய்ய அவர் ஆயத்தமாகியுள்ளார். இதன் ஒரு பகுதியாக கனடாவின் தொழில்துறையை கோவிட்-19 வைரசுக்கு எதிரான போரில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில், கனடாவின் வாகன தொழிற்சாலைகளில் தற்காலிகமாக மருத்துவ உபகரணங்களை தயாரிப்பதும் ஒரு திட்டமாக உள்ளது. கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கனடாவிற்கு தற்போது மருத்துவ உபகரணங்கள் அதிகளவில் தேவைப்படுகின்றன.

இது குறித்து ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், ''மருத்துவ பணியாளர்களுக்கு நமது ஆதரவு தேவைப்படுகிறது. எனவே வாகன பாகங்களில் இருந்து தங்கள் உற்பத்தியை மருத்துவ உபகரணங்களுக்கு மாற்றி கொள்ளும் நிறுவனங்களுக்கு கனடா அரசு உதவி செய்யும்'' என்றார். கனடா பிரதமரின் இந்த அறிவிப்புகள் கவனம் பெற்று வருகின்றன.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசும், தீவிரம் காட்டி வருகிறது. அத்துடன் தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளை சர்வதேச சாலை கூட்டமைப்பு வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








