சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு மரண தண்டனை.. அமைச்சரவை திடீர் பரிசீலனை
சாலை விபத்துக்களில் உயிரிழப்பு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு, மரண தண்டனை வழங்கும் வகையிலான சட்ட திருத்தத்தை மேற்கொள்வது தொடர்பாக, அமைச்சரவை திடீரென பரிசீலனை செய்து வருகிறது.
சாலை விபத்துக்களில் உயிரிழப்பு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு, மரண தண்டனை வழங்கும் வகையிலான சட்ட திருத்தத்தை மேற்கொள்வது தொடர்பாக, அமைச்சரவை திடீரென பரிசீலனை செய்து வருகிறது. மிக மிக கடுமையானதாக கருதப்படும் இந்த சட்ட திருத்தம் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வங்கதேச நாட்டின் தலைநகர் டாக்காவில், சாலை விபத்துக்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த சூழ்நிலையில், கடந்த ஜூலை 29ம் தேதி, அதிவேகமாக வந்த பேருந்து மோதிய விபத்தில், மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனால் டாக்காவில் தீவிரமான போராட்டம் வெடித்தது. பெரும்பாலான பள்ளி, கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் டாக்காவில் தொடங்கிய போராட்டம், வெகு விரைவாக நாடு முழுவதும் பரவியது. 10 நாட்களை கடந்தும், அங்கு போராட்டம் நீடித்து வருகிறது.

குறிப்பாக தலைநகர் டாக்காவில் போராட்டம் கொளுந்து விட்டு எரிகிறது. சில இடங்களில் போலீசாருக்கு எதிராக வன்முறை வெடித்தது. ரப்பர் குண்டுகள் மூலம் சுட்டு, போலீசார் கூட்டத்தை கலைத்தனர். இதில், நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இதனால் வங்கதேசம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.

வங்கதேசத்தில் சாலை பாதுகாப்பு என்பதே இல்லை என்பதுதான் போராட்டக்காரர்களின் குற்றச்சாட்டு. சாலைகளை சீரமைக்க வேண்டும், போக்குவரத்து விதிமுறைகளை மிக மிக கடுமையானதாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, அவர்கள் போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர்.

மாணவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும். எனவே அனைவரும் கலைந்து வீடுகளுக்கு செல்லுமாறு, பிரதமர் ஷேக் ஹசீனா கேட்டு கொண்டும், போராட்டம் கட்டுக்குள் வரவில்லை. உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என மாணவர்கள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.

எனவே சாலை விபத்துக்களில் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு, அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடுவது தொடர்பாக, வங்கதேச நாட்டின் அமைச்சரவை ஆலோசனை நடத்தி வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெயர் வெளியிட விரும்பாத வங்கதேச நாட்டின் சட்டத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''சாலை விபத்துக்களில் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு, மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

சாலை விபத்துக்களில் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு மரண தண்டனை என்பது, அரிதான ஒரு விஷயமாவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் சாலை விபத்துக்களில் உயிர் பலி ஏற்படுத்துபவர்களுக்கு, உலகின் பெரும்பாலான நாடுகளில் இப்படி ஒரு கடுமையான தண்டனை வழங்கப்படுவது கிடையாது.

வங்கதேசத்தில் கூட தற்போது 3 ஆண்டுகள் சிறை தண்டனை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில்தான், சாலை விபத்துக்களில் உயிரிழப்பை ஏற்படுத்துபவர்களுக்கு, மரண தண்டனை வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

எனினும் இதுபோன்ற கடுமையான தண்டனைகள் தேவைதான் என அங்கு போராடி வருபவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே டாக்காவில் பேருந்து ஓட்டுனர்களால், அதிக அளவிலான விபத்துக்கள் நடைபெற்று வருவதாக பாலிடெக்னிக் கல்லூரி மாணவரான ஷேக் ஷாபி என்பவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷேக் ஷாபி கூறுகையில், ''இங்கு பஸ் டிரைவர்களுக்கு மாத சம்பளம் வழங்கப்படுவது இல்லை. அதற்கு பதிலாக பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அவர்களுக்கு கமிஷன் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பஸ் டிரைவர்கள் நீண்ட நேரம் வேலை செய்வதற்கு தூண்டப்படுகின்றனர்.

எனவே டிரைவர்களுக்கு கமிஷன் வழங்கும் முறை அழித்தொழிக்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக மாத சம்பள அடிப்படையில் மட்டுமே பஸ் டிரைவர்களை பணிக்கு நியமிக்க வேண்டும். அவர்களுக்கு 10 மணி நேர வேலையை மட்டுமே, உரிமையாளர்கள் வழங்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை'' என்றார்.

கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்து ஒன்றில், ஷேக் ஷாபியின் சகோதரர் உயிரிழந்து விட்டார் என்ற உருக்கமான தகவல் கவனிக்கத்தக்கது. இதனிடையே அமெரிக்க தூதர் சென்று கொண்டிருந்த வாகனத்தை, ஆயுதம் ஏந்தி வந்த சிலர் தாக்கியுள்ளனர். அப்போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

எனினும் 2 வாகனங்கள் பலத்த சேதமடைந்தன. இதனால் வங்கதேசம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருவதை காண முடிகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் சாலை விபத்துக்கள் மற்றும் அதன் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே வருகிறது.

ஹெல்மெட் அணியாதது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது என சாலை விதிகளை மதிக்காததே பெரும்பாலான விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. எனவே சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், தண்டனைகளை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவிலும் வலுத்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








